Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts

Jun 27, 2013

இப்பதிவு...பதிவர்களுக்கிடையிலான மோதலா ?


நண்பர்களே...
இப்பதிவு இரண்டு பதிவர்களுக்கிடையிலான மோதல் எனக்கருதும் வாய்ப்பை நன்றாகவே உருவாக்கித்தரும்.
இருந்தாலும் இப்பதிவை தவிர்க்க முடியாது.
தவிர்க்கவும் கூடாது.
காரணம்  ‘வரலாறும்... கருத்தாக்கமும்’.



தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் மனோரமா கதாபாத்திரத்தின் வசனம் இப்பதிவிற்கு மிகப்பொருத்தமான துவக்கமாக இருக்கும்.

 “ அவுக ஒரு பக்கம் ஆடினா...நான் ஒரு பக்கம் ஆடுறேன்.
இரண்டையும்தான் சனங்க பாக்கட்டுமே”
 _________________________________________________________________________________

நாடக கலைக்களஞ்சியம் \ 1964 \ ஆசிரியர் : அ.பாபநாசம் \ 
பதிவின் பாகம் - 4 [ நிறைவுப்பகுதி ]

நாடக சந்தர்ப்பங்கள் : 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாடக ஆசிரியர் ‘கார்லோ கோஸி’ [ Carlo Gozzi  \ 1720 - 1806 ]  36 ‘அடிப்படை சந்தர்ப்பங்களை’ கொண்டு நாடகம் எழுத முடியும் என்று கூறியுள்ளார்.
அவைகள்...
01. பிரார்த்தனை.
02. மீட்சி.
03. பழிக்குப்பழியால் ஏற்பட்ட குற்றம்.
04. ஒரு சொந்தக்காரர் மற்றொரு சொந்தக்காரர் மீது பழிக்குப்பழி வாங்குதல்.
05. அழிவு.
06. சம்பந்தம், தொடர்ச்சி.
07. துரதிர்ஷ்டத்துக்கு பலியாதல்.
08. புரட்சி.
09. துணிச்சலான காரியம்.
10. விடுகதை
11. பெண் சோரம்.
12. பிரபலம் அடைதல்.
13. இனத்தாருக்குள் விரோதம்.
14. இனத்தாருக்குள் போர்.
15. கொலையுடன் கலந்த விபச்சாரம்.
16. பைத்தியம்.
17. ஆராய்வின்மை.
18. இனத்தானை தெரியாமல் கொல்லுதல்.
19. லட்சியத்திற்காக தியாகம் செய்தல்.
20. சுற்றத்திற்காக தியாகம் செய்தல்.
21. உணர்ச்சியில் எல்லோரும் தியாகம் செய்தல்.
22. காதலித்தவளை அவசியத்திற்காக கைவிடல்.
23. உயர்ந்தவன் - தாழ்ந்தவன் போர்.
24. விபச்சாரம்.
25. காதல் கொலைகள்.
26. காதலித்தவன் காதலித்தவளின் குற்றத்தை கண்டு பிடித்தல்.
27. காதலுக்கு தடைகள்.
28. விரோதியை காதலித்தல்.
29. ஆசை.
30. கடவுளுடன் போர்.
31. குற்றமாக எடுத்த பொறாமை.
32. தவறான முடிவு.
33. காணாமல் போனவளை மீண்டும் அடைதல்.
34. மனநோய்.
35. காதலித்தவர்களின் தொலைவு.
36. காதலால் ஏற்படும் சக்திக்கு மீறிய குற்றங்கள்.

[ கார்லோ கோஸியின் 36 ‘டிராஜிக் சிச்சுவேஷன்கள்’ நல்ல வேளையாக 1964லேயே நமக்கு தமிழில் தந்து விட்டார் அ.பாபநாசம் அவர்கள்.
இன்று கார்லோ கோஸியின் 36 ‘டிராஜிக் சிச்சுவேஷன்கள்’ பற்றிய குறிப்புகள் இணையத்தில் கூட கிடைக்கவில்லை.
_________________________________________________________________________________

நண்பர்களே...
கார்லோ கோஸி 36 ‘டிராஜிக் சிச்சுவேஷன்கள்’ என பகுத்து தொகுத்து எழுதியதை,
அப்படியே மொழிபெயர்த்து நமக்கு தந்துள்ள திரு,அ.பாபநாசம் அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது..

Carlo Gozzi [ 1720 - 1806 ]



கார்லோஸ் கோஸி பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க...

கார்லோ கோஸி எழுதிய [ Carlo Gozzi \ 1720 - 1806 ],
36  ‘டிராஜிக் சிச்சுவேஷன்களின்’ [ 36 Tragic Situations ] ஆங்கில வடிவத்தை  ‘இணையத்தில்’ எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

மாறாக,  ‘ஜியார்ஜஸ் போல்டி’ [ Georges Polti \ 1867 - 1946 ] எழுதிய...
36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்கள்’ [ 36 Dramatic Situations ]  இணையத்தில் தாராளமாக கிடைக்கிறது.

Georges Polti [ 1867 - 1946 ]

36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்களை’ அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவினுள் செல்க... 

 கார்லோ கோஸி [ 1720 - 1806 ] எழுதியதை அடிப்படையாக வைத்து,
மிகச்சிறிய மாற்றங்களுடன் தனது கருத்தாக்கத்தை வடிவமைத்து உள்ளார் ஜியார்ஜஸ் போல்டி [ 1867 - 1946 ] .
எனவேதான்  36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்கள்’  புத்தகத்தின்
அறிமுக உரையிலேயே கார்லோ கோஸி பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.


“Gozzi maintained that there can be but thirty-six tragic situations. 
Schiller took great pains to find more, but he was unable to find even so many as Gozzi.”
Goethe.

கார்லோ கோஸி பற்றி, 

அ.பாபநாசம் குறிப்பிட்டுள்ளார்.

ஜியார்ஜஸ் போல்டியும் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கிய மேதை ‘கோத்தே’யும் குறிப்பிட்டுள்ளார்.



36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்கள்’ நூலை முழுமையாக படிக்க விக்கிப்பிடீயாவிற்குள் செல்க...

நல்லவேளை... கார்லோ கோஸி கி.பி. 1720ல் பிறந்தார்.
இல்லையென்றால்,
ஜியார்ஜஸ் போல்டியின் 36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்களை’ ,
தமிழில் மொழி பெயர்த்த ‘பதிவர் கருந்தேள்’  
‘காப்பியடிப்பதில் கோஸியும் கமலும் ஒன்றே’ என்றே தனது பதிவை துவங்கி இருப்பார்.

நண்பர்களே...
யார் வேண்டுமானாலும் விதிகளை...கோட்பாடுகளை...வகுக்கலாம்.
ஆனால்,
உலகில் உள்ள அனைத்து இலக்கியங்கள், நாடகங்கள், சினிமாக்களை
இந்த விதிகளுக்குள்தான் அடக்கம் என்று சொல்ல முடியாது.
சொல்லவும் கூடாது.

கோஸி, போல்டி இருவர் எழுதிய 36  ‘விதிகளுக்குள்’

[ 1 ] ‘ரன் லோலா ரன்’ திரைப்படத்தை எப்படி அடக்குவீர்கள் ?

[ 2 ] ரஷ்ய இலக்கிய மேதை  ‘அண்டன் செக்காவ்’ எழுதிய 'பச்சோந்தி’ சிறுகதையை எந்த கோட்பாடின் கீழ் வரையறுப்பீர்கள் ?

[ 3 ] உலகிலேயே தலை சிறந்த இலக்கிய காப்பியங்கள், 
நமது ராமாயணம், மகாபாரதம். 
இந்த இரண்டிலும் இயங்கும் விதிகளை வகுக்க, 
ஆட்களும் போதாது...
அவர்களுக்கு ஆயுசும் போதாது.  

உலகம் இருக்கின்ற வரை, 
புதிய கோட்பாடுகள் புறப்பட்டு...
இலக்கியம், நாடகம், சினிமா என எல்லாவற்றையும்... 
புதுப்பித்துக்கொண்டே இருக்கும். 

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jun 26, 2013

நாடகமே உலகம்.


நண்பர்களே...
திரு.அ.பாபநாசம் அவர்கள் உருவாக்கிய ‘நாடகக்கலைக்களஞ்சியம்’ என்ற நூலில் தமிழ்நாட்டின் நாடக வரலாறை எழுதி உள்ளார்.
அதை இப்பதிவில் காண்போம்.
_________________________________________________________________________________

நாடகக்கலைக்களஞ்சியம் \ 1964 \ ஆசிரியர் : அ.பாபநாசம் \
 [ பதிவின் பாகம் - 3 ]



பூர்வகாலத்தில் ஆடப்பட்ட நாடகங்கள் அனைத்தும் புராணக்கதைகளே ஆகும்.
புராணக்கத்தையை தழுவி நாடகமாக ஆடிய கூத்துகளில் ‘வள்ளிக்கூத்து’ என்பது மிகப்பழமையானது.
இதைப்பற்றி தொல்காப்பியத்தின் உரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முருகக்கடவுள் வள்ளியை மணந்த வரலாறே வள்ளிக்கூத்தின் கதையாகும்.

நாடகங்கள் பூர்வகாலத்தில் ‘நாட்டிய நாடகங்களாக’ இருந்தன என்று தெரிய வருகிறது.
இதில் ‘பாலசரிதை’ என்ற நாடகம் முக்கியமான ஒன்றாகும்.
இதற்குப்பிறகு வந்த நாடகம்  ‘ராஜராஜேஸ்வரம்’ என்ற நாடகமாகும்.
இதைப்பற்றிய செய்தி தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் வடக்குப்பிரகாரத்தின் வெளியிலுள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டு இருக்கிறது.

17ம் நூற்றாண்டின் கடைசியில் கி.பி.1695 முதல் சில நொண்டி நாடகங்கள் இருந்ததாக தெரிய வருகிறது.
‘திருக்கச்சூர் நொண்டி நாடகம்’ என்பது இதில் ஒன்றாகும்.
இது தவிர பழனி நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம் போன்ற நாடகங்களும் இருந்தன.

கி.பி. 1712 - 1779ல் வாழ்ந்த அருணாசல கவிராயர் இயற்றிய ‘இராம நாடகம்’
முக்கியமான ஒன்று.
இவரது மற்றொரு நாடகம் ‘அசோமுகி’.
இராமச்சந்திர கவிராயர் மகாபாரதக்கதையை  ‘பாரத விலாசம்’ என்று இயற்றியுள்ளார்.
இவரது மற்ற நாடகங்கள் : இரங்கூன் சண்டை நாடகம், சகுந்தலை விலாசம்,
தாருகா விலாசம்.
இந்நாடகங்களுக்கு முன்பு ‘நீலி நாடகம்’ என்று ஒரு தமிழ் நாடகம் இருந்திருக்கிறது.

வேறொரு அருணாசல கவிராயர் ‘மதன சுந்தர பிரசாத சந்தான விலாசம்’ என்ற நாடகத்தை எழுதி உள்ளார்.
இந்த நாடகம் தஞ்சாவூரில் ஆட்சி புரிந்த ஒரு சோழ அரசன்,
தன் மகள் சுகமாக வாழ வேண்டி மதன சுந்தரேஸ்வரரை வழி பட்டு வரம் பெற்ற கதையைக்கூறுவதாகும்.

   ‘மறையவர் குல வீரலிங்க பாரதி’ எழுதிய அரிச்சந்திர நாடகம் புகழ் பெற்ற நாடகமாகும்.
இது போக ஆசிரியர் பெயர் தெரியாத அரிச்சந்திர நாடகங்கள் உள்ளன.
நாராயண கவி எழுதிய ‘பாண்டிகேளி விலாசம்’ குறிப்பிடத்தக்க ஒரு நாடகம்.

சென்னை துரைதனத்தார் ஏற்படுத்தி இருக்கும்,
பழைய ஏட்டு புஸ்தக சாலையில் முப்பது தமிழ் நாடகங்களுக்கு மேல் இருக்கின்றன.
இவைகளில் முக்கியமானவைகள் : இரணிய சம்ஹார நாடகம்,
இராம நாடகம், உத்தர ராமாயண நாடகம், கந்தர் நாடகம், காத்தவராய நாடகம்.
[ சென்னை துரைதனத்தார் = பிரிட்டிஷ்காரர்கள் ;
பழைய ஏட்டு புஸ்தக சாலை = ஆவணக்காப்பகம்.]

முற்காலத்தில் ஒவ்வொரு ஆலயத்திலும் அந்த ஆலயத்தின் மகத்துவத்தை கூற அந்த ஆலய உற்சவத்தில் நாடகம் ஆடுவதுண்டு.
இதில் சேர்ந்ததுதான் ‘சுரகுரு’ நாடகம்.
இது திருக்கழுக்குன்றம் ஷேத்திரத்தின் கதையாகும்.


புராணக்கதைகளை தழுவி எழுதப்பட்ட நாடகங்கள் அநேகம் உள்ளன.
உ.ம் : கீசக நாடகம், பதினெட்டாம் போர் அலங்காரம், குசலவ நாடகம், ருக்மாங்கத நாடகம்.

பூர்விக கற்பனைக்கதைகளை தழுவி எழுதிய நாடகங்களும் உண்டு.
அவை : வீரகுமார நாடகம், காத்தவராய நாடகம், மதுரை வீர நாடகம், அதிரூபவதி நாடகம், அலங்கார ரூபவதி நாடகம்,
நந்தனார் சரித்திர கீர்த்தனை [ கோபால கிருஷ்ண பாரதியால் எழுதப்பட்டது].

சமூக நாடகத்தில் சிறந்தவை காசிவிஸ்வநாத முதலியார் எழுதிய ‘டம்பாச்சாரி விலாசம்’ என்னும் நாடகமாகும்.
கி.பி.1886ல் ‘சோழ விலாசம்’ என்ற நாடகத்தை அப்பாவுப்பிள்ளை என்பவர் எழுதி உள்ளார்.
அவர் கி.பி.1889ல் ‘இந்திரசபை’ என்ற நூதனமான நாடகத்தையும் இயற்றியுள்ளார்.

குறவஞ்சி நாடகங்களும் இருந்தன.
இதில் சிறந்தது ‘குற்றால குறவஞ்சி’.
கி.பி.1840ல் கவி குஞ்சரபாரதி அவர்கள் ‘அழகர் குறவஞ்சி’ என்ற நாடகத்தை எழுதியுள்ளார்.

நவீன காலத்தில் எழுதப்பட்ட நாடகங்கள் : 
சுந்தரம்பிள்ளை அவர்கள் எழுதிய மனோன்மணியம்.
இதை அகவற்பாவால் எழுதியுள்ளார்.
சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்கள் : லீலாவதி, சுலோசனா, மனோகரா,
பரிதிமாற்கலைஞன்  எழுதிய ரூபவதி, மானவிஜயம்.
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள்,
பி.எஸ்.ராமையாவின் பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், தேரோட்டி மகன்.
எஸ்.டி.சுந்தரத்தின் கவியின் கனவு,
அண்ணாத்துரையின் ஓர் இரவு, வேலைக்காரி,
ஜீவாவின் உயிரோவியம்,
அ.பாபநாசத்தின் உருகிய தாரகை, விசிறி, உதிரக்கிண்ணம்.
தி.ஜானகிராமனின் நாலுவேலி நிலம்.
_________________________________________________________________________________

நண்பர்களே...
இது முழுமையான தமிழ்நாட்டின் நாடக வரலாறாக இருக்க முடியாது.
திரு.அ.பாபநாசம் அவர்கள் அவர்  திரட்டிய தகவல் அடிப்படையில் மட்டுமே இதை எழுதி உள்ளார்.
நாம் இதை  படிக்கும் போதே உணர முடிகிறது.
இவருக்கு பின்னால் யாராவது இம்முயற்சியை மேற்கொண்டு இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம்.
அது பற்றிய தகவல்களை நண்பர்கள் மூலம் பின்னால் தேடித்தருகிறேன்.


திரு.வி.கே.ராமசாமி அவர்கள் எழுதிய சுயசரிதை நூலில்,
அக்கால நாடகக்குழுக்கள், அவர்கள் போட்ட நாடகங்கள்,
நாடகங்களின் வெற்றி தோல்விகள், தொழில் போட்டிகள், நாடகக்குழுவினரின் வாழ்வியல் முறைகள் என ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.  

தமிழ் விக்கிப்பிடீயாவில் இன்னும் சிறப்பாக தகவல்கள் இருக்கின்றது.
விரிவான தகவல் பெற ‘தமிழ் விக்கிப்பீடீயாவிற்குள்’ செல்க...

36 நாடக சந்தர்ப்பங்களோடு,
 அடுத்தப்பதிவில் சந்திக்கிறேன்.

Jun 22, 2013

நடிகன் காப்பியடிக்க வேண்டும்.


நண்பர்களே...
 தமிழை...  இயல், இசை, நாடகம் என மூன்று வகைப்படுத்தினர் முன்னோர்.
1964 ல் பதினேழு ஆண்டுகள் தன் வாழ்நாளை அர்ப்பணித்து,
நாடகத்திற்காக ஒரு கலைக்களஞ்சியத்தை...
திரு. அ.பாபநாசம் அவர்கள்  உருவாக்கியுள்ளார்.
_________________________________________________________________________________

நூலின் பெயர் : நாடக கலைக்களஞ்சியம் \ 1964 \  [ பதிவின் பாகம் - 1 ]
ஆசிரியர் : அ.பாபநாசம், பி.ஏ.பி.எல்.
வெளியீடு : நாடக பதிப்பகம்,
28, பெருமாள் மேல ரதவீதி,
திருநெல்வேலி சந்திப்பு.
_________________________________________________________________________________

திரு.அ.பாபநாசம் அவர்கள் தன்னுடைய நூலில்,
முன்னுரையாக குறிப்பிடுவது...
“ நான் இலக்கியப்பட்டறையில் தொழிலாளியாக சேர்ந்து இன்றைக்கு
17 ஆண்டுகள் ஆகி விட்டன.
பல நாடகங்களை பல பத்திரிக்கைகளில் எழுதி விட்டேன்.
நான் நாடகத்துக்கென்றே தமிழ்நாட்டில் ‘இளவேனில்’ என்று ஒரு பத்திரிக்கையும் நடத்தி விட்டேன்.

என்னுடைய இந்த 17 ஆண்டுகள் இலக்கியப்பணியில் நான் பல தேசத்து நாடகங்களையும், நாடக விமர்சன நூல்களையும் படித்தேன்.
இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறேன்.
அப்போது அவற்றிலிருந்து முக்கியமானவற்றை குறிப்புகள் எடுத்துக்கொண்டேன்.
அது நாளடைவில் விரிவடைந்து இந்த ‘நாடகக்கலைக்களஞ்சியமாக’ உருவெடுத்திருக்கிறது” - அ.பாபநாசம்.
நெல்லை,
13 - 4 - 1964.
_________________________________________________________________________________

திரு.அ.பாபநாசம் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளின்
நாடகக்கலை தோற்றம், வளர்ச்சியை இந்நூலில் அடக்கியுள்ளார்.
அதில் நமது இந்தியாவை பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்.
_________________________________________________________________________________

இந்திய நாடகம் :
இந்திய நாடகம் ஆரம்ப காலம் பிரம்மனால் உண்டாக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.
சொர்க்கத்தின் சிற்பியைக்கொண்டு பிரம்மன் இந்தியாவில் முதல் நாடக அரங்கொன்றை நிறுவினான் என கூறப்படுகிறது.
அதன் காரணமாக பரதர் தனது நாடகங்களை அரங்கேற்ற முடிந்திருக்கிறது.
பரதரை இந்திய நாடகத்தின் ஸ்தாபகர் என்று கூடச்சொல்லலாம்.
பாவத்துடன் கலந்த நடனம் ஆண்டவன் முன்னால் இந்திர சபையில் ஆடிக்காட்டப்பட்டது.
சிவபெருமான் நடனத்தில் இரண்டு புது நடனங்களை உண்டாக்கினார்.

நாடக வசனங்களை ரிக் வேதத்திலேயே காணலாம்.
கிரேக்கர்களுக்கு முன்பே இந்தியாவில் சிறந்த நாடகங்கள் இருந்திருக்க வேண்டும்.
இந்திய நாடகத்தின் உச்சஸ்தாயியாக கி.பி.4லிருந்து கி.பி.9ம் நூற்றாண்டு வரை கூறலாம்.

புராணக்கதைகளை அடிப்படையாக கொண்ட நாடகங்களே
இந்தியாவில் அதிகம்.
இந்திய நாடகத்தில், கதை அமைப்பில் குழப்பம் இல்லாமை,
மூவகை ஒற்றுமை, கவிதையும், வசனமும், மவுன நாடகமும், நகைச்சுவையும் மற்றும் பல் வகை சுவைகளும் கலந்திருந்தது.

வடமொழியில் 500 நாடகங்களும், தமிழில் 100 நாடகங்களும் உள்ளன.
மற்ற பிராந்திய மொழிகளிலும் உள்ளன.
_________________________________________________________________________________

காப்பிய காலம் - கி.மு.500 - கி.பி.320. [ The Epic Period ] :
இந்த காலத்தில்தான் இராமாயணமும், மகாபாரதமும் தோன்றியது.
இந்த இரண்டு இதிகாசங்களும் இந்திய நாடக ஆசிரியர்களுக்கு மிகப்பெரும் ஊற்றாக இருந்தது.
இந்தியாவின் முதல் நாடக ஆசிரியர் என்றழைக்கப்பட்ட  ‘அஸ்வகோஷா’ இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார்.
இவரது நாடகங்களில் மூன்று நாடகங்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது.
அதில் ஒன்று ‘ஷாரிபுத்ர பிரகனா’.
9 அங்கங்களை கொண்ட இந்நாடகம் ஷாரிபுத்ராவையும்,
அவனது நண்பன் மவுட்கலியானாவைப்பற்றியும்,
அவர்கள் புத்த மதத்திற்கு மாறியதைப்பற்றியும் கூறுகிறது.

இவ்வாறு இலக்கியகாலம் கி.பி.320- 800, கி.பி.800 -1000, கி.பி. 1000 -1300,
நவீன காலம் என எல்லா கால கட்டங்களிலும் உள்ள
இந்திய நாடக வளர்ச்சியை தொட்டுக்காட்டி உள்ளது இந்நூல்.

[ இந்நூலில் குறிப்பிடப்பட்ட தமிழ்நாட்டின் நாடக வளர்ச்சியை தனிப்பதிவாக தருகிறேன். ]

நடிப்பை பற்றி இந்நூலில் குறிப்பிட்டதை அப்படியே தருகிறேன்.
_________________________________________________________________________________

நடிப்பு : நடிப்பு ஒரு கலையாகும்.
வியாபாரமல்ல.
கலையாக இருப்பதால் நடிப்பை கற்பதற்கு நிறைய படிப்பும்,
உடல் உழைப்பும் தேவையாக இருக்கிறது.
ஹூயூபர்ட் [ Hubert ] என்பவர் ஒரு நல்ல நடிகனுக்கு தேவையானவை என கீழ்க்கண்டவைகளை குறிப்பிடுகிறார்.
_________________________________________________________________________________

1. நல்ல உடலமைப்பு.


2. பழுதில்லா ஜீரணத்தன்மை.


3. கவரக்கூடிய முகம்.


4. மனதை இழுக்கக்கூடிய குரல்.



5. பாசாங்குத்தன்மை.


6. அழுத்தம் திருத்தமான பேச்சு.


7.சரித்திர ஞானம்.


8. நல்ல படிப்பு.


9. ஆடை விஷயத்தை பற்றிய ஞானம்.


10. ஆடையில் சிக்கன ஞானம்.
[ இந்த விஷயத்தில் நமது நடிகைகள் படு சிக்கனம்.]

11.வியாபார தந்திரம்.



12. தளர்ச்சியில்லாத உழைப்பு.


13. நடுங்காத குறிக்கோள்.


14. விமர்சனத்தை, ஏச்சிலிருந்து பிரித்தெடுக்கும் தன்மை.


15. விளம்பர ஞானம்.


16. சந்தர்ப்பத்தை நழுவ விடாத தன்மை.


17. ஞாபக சக்தி.


18. அதிர்ஷ்டம்.

_________________________________________________________________________________

ஒரு நடிகனுக்கு மேலும் வேண்டியவை கீழ்க்கண்ட குணங்களாகும்...

1. கூர்ந்து நோக்கும் தன்மை, காப்பியடிக்கும் தன்மை :
நடிப்பு என்பது மனித நடத்தையை காப்பியடிப்பதாகும்.
அதற்காக நடிகன் தன்னுள்ளே கூர்ந்து நோக்கும் தன்மையை எப்போதும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.


[ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், திருவருட்செல்வர் படத்தில் திருஞான சம்பந்தராக நடிக்கும் போது காஞ்சி பெரியவாளை பிரதிபலித்தார்.]

ரயிலில், பஸ்ஸில், ஆபிசில், வீட்டில், கூட்டத்தில், கிளப்பில் இருக்கும் போது மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்,
எப்படி கொனஷ்டைகள் செய்கிறார்கள் என்பதை ஒரு நடிகன் கூர்ந்து பார்த்து மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

கூர்ந்து நோக்கும் தன்மை குணச்சித்திர நடிப்புக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.
உதாரணமாக 25, 55, 85 என பல்வேறு வயது மனிதர்களின்
நடக்கும் தன்மையையும், செய்கைகளையும் கூர்ந்து கவனிப்பது நல்லதாகும்.

முதலில் நடிகனொருவன் தான் நடிக்கும் பாத்திரத்தின் தன்மையை
தன் மனதில் படம் பிடித்து பார்க்க வேண்டும்.
அவன் எப்படி நடப்பான் ?
எப்படி பேசுவான் ?
அவனுக்கு எதெது பிடிக்கும் ?
என்பதையெல்லாம் மனதில் படம் பிடித்து பார்த்துக்கொண்ட பிறகு
நடிக்க வேண்டும்.

2 . நடையும் செய்கைகளும் [ Movement and gesture ] 
ஒப்பனை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும்,
நடிப்போடு ஒப்பிடுகையில் ஒரு நடிகனுக்கு அது இரண்டாம் பட்சமே.
நடிகனின் நடைதான் மிக முக்கியம்.
சைகைகள் விஷயத்தில் மூன்று விதிகள் உள்ளன.
1. சைகை ஏதாவது அர்த்தத்தை அளிப்பதாக இருந்தால் மட்டுமே அதைச்செய்ய வேண்டும்.
2. செய்யும் சைகையை ஒழுங்காக செய்ய வேண்டும்.
3. அடுத்த பாத்திரங்கள் பேசும் போது சும்மா இருக்க வேண்டும்.
_________________________________________________________________________________

நண்பர்களே...
திரு.பாபநாசம் குறிப்பிடும் சில விதிகள்,
இன்றைய காலத்திற்கு பொருந்தி போகாமல் இருக்கலாம்.
ஏனென்றால், இன்று சினிமாவும், நாடகமும் எத்தனையோ மடங்கு
உயர்ந்த தளத்தில் இருக்கிறது.

சினிமாவுக்கு தேவையான ‘ஸ்க்ரீன் ஆக்டிங்’ பற்றி ஹேராம் பதிவில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.
‘ஸ்க்ரீன் ஆக்டிங்’ பற்றி குறிப்பிட்ட ஹேராம் பதிவிற்கு செல்ல...
_________________________________________________________________________________

நாடக கலைக்களஞ்சியம் உருவாக்க 17 ஆண்டுகள் உழைத்த திரு.பாபநாசத்திற்கு இப்பதிவை காணிக்கையாக்குகிறேன்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

Jun 9, 2013

RUN LOLA RUN \ திரைக்கதை எழுதுவது இப்படியுமல்ல...அப்படியுமல்ல. \ பாகம் - 4


நண்பர்களே...
திரைக்கதை எழுதுவது இப்படி...அப்படி... என உலக சினிமாக்களுக்கு
இலக்கணம் கற்பிக்க முடியாது.
விதிகளை மீறி பயணிப்பதையே இலட்சியமாக கொண்டவர்கள் அப்படைப்பாளிகள்.
‘ரன் லோலா ரன்’ படைப்பாளி  ‘டாம் டிக்கர்’ வெற்றிகரமாக விதிகளை மீறி சமீபத்தில் சாதனை படைத்தவர்.

RUN LOLA RUN \ 1998 \ Germany \ Directed by Tom Tykwer 

லோலாவின் மூன்று ஓட்டங்களிலும் உள்ள ஒற்றுமை - வேற்றுமைகளை இப்போது பார்ப்போம்.
லோலா, பில்டிங்கிலிருந்து காம்பவுண்ட் கேட்  வரைக்கும் ஓடி வருவதை காமிரா கிரேனிலிருந்து மேலிருந்து கீழாக இறங்கி பதிவு செய்துள்ளது.
இந்த  ‘ஷாட் கம்போசிஷேன்’, 
மூன்று ஓட்டங்களிலும் பொதுவாக இருந்தாலும்,
இரண்டாவது ஓட்டத்தில் லோலா நொண்டிக்கொண்டு ஓடுகிறாள்.

அடுத்து லோலா, 
சாலைகளில் ஓடும் பல் வேறு ஷாட்கள் 
மூன்று ஓட்டங்களிலும் மாறுபட்ட காமிரா கோணங்களில் படம் பிடிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது.

பின்னர் ஒரு திருப்பத்தில் ஓடி வரும் லோலா, 
குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்
ஒரு தாயை எதிர் கொள்கிறாள்.
இக்காட்சி மூன்று ஓட்டங்களிலும் மாறுபடுகிறது.
அந்தத்தாயின் எதிர் காலத்தை ‘பிளாஷ் பார்வேர்டு’ உத்தியில்,
‘ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகளாக’ அடுக்கி படுவேகமாக காட்டுகிறார் இயக்குனர்.
இந்த யுக்தி மிகவும் புதுமையானது.
இந்த யுக்தியை பயன்படுத்தி படத்தில் வரும் பல்வேறு கதாபாத்திரங்களின் எதிர்காலத்தை ‘நொடிகளில்’ சொல்லி சாதனை படைத்துள்ளார் இயக்குனர்.  

முதல் ஓட்டம் : லோலா ஓடி வரும் போது லேசாக அந்தத்தாயை இடித்து விடுகிறாள்.
“ ஹே...பாத்துப்போ...
நாயி...” என திட்டுகிறாள்.
ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகள் :
குழந்தையின் தாய் போதையில் கணவனுடன் சண்டையிடுகிறாள்.
’சமுதாயக்காவலர்கள்’ குழந்தையை வலுக்கட்டாயமாக தாயிடமிருந்து பிரித்து எடுத்துச்செல்கிறார்கள்.
குழந்தையை பிரிந்த துக்கத்தில் தாய் தரையில் விழுந்து புரண்டு அழுகிறாள்.
கணவன் அவளை கட்டியணைத்து சமாதானப்படுத்துகிறான்.
அவள் பித்து பிடித்த நிலையில் இன்னொருவர் குழந்தையை திருடிக்கொண்டு ஓடுகிறாள்.
அக்குழந்தையின் தகப்பன் வெறி கொண்டு துரத்துகிறான்.

இரண்டாவது ஓட்டம் : ஓடி வரும் லோலா, அந்தத்தாயின் மீது வேகமாக மோதி விடுகிறாள்.
“ பாத்துப்போ...அறிவு கெட்ட மாடே...
பொட்டக்கழுதை என திட்டுகிறாள்.
ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகள் :
லாட்டரி சீட்டு வாங்குகிறாள் தாய்.
பரிசு விழுகிறது.
டிவியில் ரிசல்ட் பார்த்து குதுகலிக்கின்றாள் கனவனுடன்.
புதிய பங்களா, பென்ஸ் காருடன் காட்சியளிக்கின்றனர் தம்பதியர்.
அழகிய ஸ்விம்மிங் பூல்...
பச்சைபசேல் புல்வெளி பின்னணியில்... 
கணவனுடன் ‘பியர்’ அருந்தி ‘சியர்ஸ்’ சொல்கிறாள்.
‘பரிசு பெற்ற தம்பதி’ என பத்திரிக்கையில் போட்டாவுடன் செய்தி வருகிறது.

மூன்றாவது ஓட்டம் : ஓடி வரும் லோலா அந்ததாயை மோதாமல் தவிர்த்து விலகி ஓடுகிறாள்.
இருந்தும் அந்ததாய் லோலாவை பார்த்து ‘அழகு’ காட்டுகிறாள்.

ரேபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகள் :
தனது குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வருகிறாள் தாய்.
நடை பாதை ஓரத்தில்,
குழந்தை படம் போட்ட புத்தகத்தை காட்டிக்கொண்டு நிற்கும் ஒரு பெண்மணியை பார்க்கிறாள்.
தாய் சர்ச்சில் உட்கார்ந்து ஜெபம் செய்கிறாள்.
கிருத்துவ மதத்தில் தீவிரமாக ஈடுபடுகிறாள்.
ஒரு பாதிரியார் அந்ததாய்க்கு ஞானஸ்நானம் செய்விக்கிறார்.
பிளாட்பாரத்தில் நின்று கொண்டு மத பிரச்சார நூல்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுகிறாள்.  
‘ஆல்டர்நேட்டிவ் ஸ்கிரிப்ட் ரைட்டிங்’ என்ற ஆங்கில புத்தகத்தில்
‘ரன் லோலா ரன்’ விதிகளை உடைத்து கட்டப்பட்டிருப்பதை அழகாக சொல்லி இருக்கிறார்கள் .

Alternative Scriptwriting : Successfully Breaking the Rules \ 2007 [ Fourth Edition] \ English \ 
Ken Dancyger & Jeff Rush

திரைப்படக்கலை ஆசிரியர் Ken Dancyger பற்றிய மேலதிகத்தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க...


 On = Run Lola Run = Pages = 143,152,153

Identification and empathy characterize our relationship with the main character in the classic genres.

In voice-oriented genres, ( in films like: RUN LOLA RUN .1998) identification and empathy must be replaced with emotional distance…

The main character in these genres is the vehicle for the story but not the emotional core.

Structure in (such) experimental narrative tends to the non-linear.

‘LOLA’ tries to save  her boyfriend, Mani, three times, each with a different outcome, 
in “Run Lola Run”. 
Because time is advanced or retarded, the outcome varies each time.

The ‘tone’ of (such a) experimental film (RUN LOLA RUN .1998) is important and tends to add to our involvement in the film…And “Run Lola Run” has energy to burn.

Playful about filmic conventions, Tom Tykwer uses a ‘plot device’ as an excuse for energizing the film.


 ‘ரன் லோலா ரன்’ படத்தின் முக்கியமான கருத்தாக்கமாக கீழ்க்கண்டவற்றை நாம் கருதலாம்...
Tom Tykwer  improvises in his own way and uses the character, 
structure and tone in the film to reach out to the audience..
and they are thrilled to make more direct contact with the writer and his ideas: 
( In “Run Lola Run” = ‘LOVE’ CAN DISTORT ‘REALITY’ in terms of ‘SPACE AND TIME’ TO IT’S (PSYCHO) ‘LOGICAL’ COMFORTS, OVER FATE AND  DESTINY.)

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Apr 10, 2013

பச்சோந்தி


“ கடிக்கவா செய்கிறாய்!...அசட்டு நாயே!
பசங்களே, விடாதீங்க!
இந்தக்காலத்தில் கடிக்க அனுமதி இல்லை. பிடியுங்கள் அதை”
என பஜாரில் எழுந்த கூச்சல் போலிஸ் இன்ஸ்பெக்டர் காதில் விழுந்தது.

நாய் ஊளையிடும் சப்தம் கேட்டது.
இன்ஸ்பெக்டர் சத்தம் வந்த திசையை நோக்கினார்.
கஞ்சி போட்ட பூச்சட்டையும், பட்டன் போடாத அரைக்கோட்டும் அணிந்தவர்
அந்த நாயின் பின்னங்கால்களை பிடித்துக்கொண்டிருந்தார்.
அந்த ஏரியாவை சிறு கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.

“ ஐயா, கலவரம் மாதிரி தெரிகிறதே!” என்றார் உடனிருந்த போலிஸ்காரர்.

இன்ஸ்பெக்டர் கூட்டத்தை நோக்கி விரைந்தார்.
 ‘அரைக்கோட்டு’ ரத்தம் கசியும் தனது விரலை கூட்டத்திற்கு காட்டிக்கொண்டு நிற்பதைக்கண்டார்.
“ சனியனே, உன்னை என்ன செய்கிறேன் பார்” என அவரது  ‘குடிகார முகத்தில்’ எழுதி ஒட்டியிருந்தது.
கூட்டத்தின் நடுமையத்தில் அந்தக்குற்றவாளி நாய் நடுங்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தது.
கலங்கிய அதன் கண்களில் சோகமும் பீதியும் சம அளவிலிருந்தது.

கூட்டத்தை இடித்து விலக்கி கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் முழங்கினார்.
“ என்ன இதெல்லாம்?
இங்கே ஏன் கூடி நிற்கிறீர்கள்?
நீ ஏன் விரலை உயர்த்திக்கொண்டு நிற்கிறாய்?”

“ ஐயா, எந்த வம்புமின்றி நடந்து வந்து கொண்டிருந்தேன்.
ஒரு காரணமும் இல்லாம இந்த நாய் என் விரலை கடிச்சு வச்சிருச்சு.
நான் மர வேலை செய்யறவன்.
என்னுடைய வேலை நுட்பமானது.
இன்னும் ஒரு வாரத்துக்கு என் விரலை அசைக்க கூட முடியாது.
நீங்கதான் எனக்கு இழப்பீடு வாங்கித்தரணும்.
இந்த மூர்க்கப்பிராணிகளின் கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழணும்னு எந்த சட்டமும் கூறவில்லை.
இவையெல்லாம் கடிக்க ஆரம்பித்தால், வாழ்க்கையே நரக வேதனையாகி விடும்”.

“ஊம்...சரிதான்,சரிதான்...யாருடைய நாய் இது?
இந்த விவகாரத்தை சும்மா விடப்போவதில்லை.
நாய்களை கண்டப்படி ஓடித்திரியும்படி விடுவோருக்கு தக்க பாடம் கற்பிக்கப்போகிறேன்.
நாய்களையும், மாடுகளையும் இஷ்டத்துக்கு திரிய விட்டால் என்ன கிடைக்கும் என தெரியப்படுத்தப்போகிறேன்”

போலிஸ்காரனை நோக்கி ஆணை பிறப்பித்தார்.
“ இந்த நாய் யாருடையது என கண்டு பிடித்து அறிக்கை ஒன்றை தயார் செய்.
உடனே இந்த நாயை ஒழித்துக்கட்டியாக வேண்டும்.
வெறி பிடித்த நாயாகத்தான் இருக்க வேண்டும்.
யாருடையது இது?

“ போலிஸ் ஐ.ஜியுடையது” என கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

“போலிஸ் ஐ.ஜியுடையதா! ஓஹோ...
கான்ஸ்டபிள்...என்னுடைய கோட்டை கொஞ்சம் கழட்டி விடு.
உஸ்ஸ்ஸ்...வெக்கை தாங்க முடியலையே!
மழை வரப்போகுது...அதான் இப்படி புழுங்குகிறது”

‘அரைக்கோட்டை’ நோக்கினார் இன்ஸ்பெக்டர்.
“ எனக்கு இது புரியல.
உன்னை இது கடிச்சுதா! எப்படி?
உன் விரல் எப்படி இது வாய்க்கு எட்டிச்சு?
இது சின்னஞ்சிறு நாய்.
நீயோ வாட்ட சாட்டமான ஆள்!
ஆணியில் விரலை கீறி இருப்பாய்,
இதைக்காட்டி இழப்பீடு வாங்கலாமென்று ஐடியா தோன்றி இருக்கும்.
உன்னை போன்ற ஆட்களை எனக்குத்தெரியும்.
எமகாதகனுங்க”

“ ஐயா, இந்த ஆளு எரியுற சிகரட்டை...நாயோட  மூக்கின் அடியில் வச்சு...
சுட்டு  வேடிக்கை பார்த்தார்.
உடனே அது விழுந்து புடிங்கிருச்சு.
அது ஒண்ணும் அசட்டு பிறவி இல்லையே!
இந்த ஆள் எப்பவுமே இப்படித்தான்.
சேட்டை செய்யாம இருக்க முடியாது”.

“யோவ்...போலிசு, ஏன் இப்படி புளுகுறே.
இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு எல்லா விவரமும் தெரியும்.
பொய் பேசுறது யார்?
உண்மை பேசுறது யார்னு அவருக்கு தெரியும்.
நான் சொல்வது பொய்யென்றால் நீதிபதி என்னை விசாரிக்கட்டும்.
சட்டம் சொல்லியிருக்கு...
இன்று எல்லோரும் சரிநிகர் சமானம்.
உனக்கு சொல்றேன்... ஒண்ணு.
போலிசில் எனக்கு யாரும் இல்லாம போகலை.
என் சகோதரர் ஒருவர் இருக்கிறார்”.

“இல்லை...இது ஐ.ஜி ஐயாவோட நாய் இல்லை” என்றார் போலிஸ்காரர் அழுத்தம் திருத்தமாய்.
“ ஐ.ஜி ஐயாவிடம் இம்மாதிரி சாதரண நாட்டு நாய் எதுவும் இல்லை.
அவரிடம் இருப்பவை எல்லாமே உயர் ஜாதி மோப்ப நாய்கள்”.

“ நிச்சயம்தானா?”

 “சந்தேகமே வேண்டாம் ஐயா”

“ நீ சொல்வது சரிதான்.
ஐ.ஜி ஐயாவோட நாய்கள் உயர்ரகமானவை.
இதைப்பாரேன்.
சகிக்கவில்லை.
தெருச்சனியன்.
இது மாதிரி நாயை எவனும் வீட்டில் வச்சிருப்பானா?
பைத்தியம் பிடிச்சிருச்சா உனக்கு?
பெரிய நகரங்களில் இப்படி திரிஞ்சா என்னாகும் தெரியுமா?
சட்டத்தை பற்றி யாரும் கவலைப்படமாட்டங்க.
அந்த நிமிஷமே முடிவு கட்டிருவாங்க.
எப்பா...நீ கடிபட்டு இழப்புக்கு உள்ளானவன்.
இந்த விஷயத்தை இப்படியே விட்டுறக்கூடாது.
தக்க பாடம் கற்பித்தாக வேண்டும்.
ஆமாம்...இதை உடனே செஞ்சாகணும்.

“ ஒரு வேளை ஐ.ஜி ஐயாவோட நாய்தானோ என்னமோ” என்று போலிஸ்காரர் மெதுவாக கூறி விட்டு சிந்திக்கலானார்.
‘யாருடையது என்று இது மூஞ்சியிலா எழுதி ஒட்டியிருக்கு?
அண்ணைக்கு இது மாதிரி ஒரு நாய் அவர் வீட்டு முற்றத்தில் இருந்த மாதிரி இருந்துச்சு’.

“ போலிஸ் ஐ.ஜியோட நாய்தான்.
சந்தேகமே வேண்டாம்” என்று கூட்டத்திலிருந்து அந்தக்குரல் மீண்டும் ஒலித்தது.

“ ஓ! இந்த கோட்டை என் மீது மாட்டு.
ஜில் காத்து வீசுது.
குளிருது.
இதை ஐ.ஜி.ஐயாவோட வீட்டுக்கு அழைச்சுகிட்டு போ.
நான் இதைக்கண்டதாகவும்... அனுப்பி வைத்ததாகவும் சொல்.
தெருவிலே விட வேண்டாமென்று...வேண்டுகோளாக கூறி விட்டு வா.
இது விலை உயர்ந்த நாயாகத்தான் இருக்க வேண்டும்.
ஊரிலுள்ள முரடர்கள் இதன் மூக்கில் சிகரெட்டை திணிக்க முற்பட்டால் உருப்படாமல் அல்லவா போய்விடும்.
நாய் மென்மையான பிராணி!.
முட்டாளே! கையை கீழே இறக்கு.
அசிங்கமா அந்த விரலை எல்லோருக்கும் காட்டிகிட்டு நிக்காதே.
குற்றம் உன்னுடையதுதான்”.

“ ஆஹா...ஐ.ஜி ஐயாவோட வீட்டு சமையற்காரர் வருகிறாரே.
அந்தாளை  கேட்டாப்போச்சு!
யோவ்...இங்கே வாய்யா.
இந்த நாயைப்பார்.
உங்க வீட்டு நாயா இது?”

“நல்லாயிருக்கே!
இந்த மாதிரி ஒரு நாய் எங்களிடம் எந்நாளும் இருந்ததில்லை!”

“இனி யாரையும் விசாரிக்கத்தேவையில்லை” என்றார் இன்ஸ்பெக்டர்.
“ இது தெரு நாய்தான்.
இனி பேசிகிட்டு நிக்கறதில்ல அர்த்தமில்ல.
இதை இழுத்துகிட்டு போய் ஒழிச்சு கட்டு.
இதோடு விவகாரம் தீர்ந்து போகட்டும்”

“ இது எங்களுடைய நாயல்ல” என்ற சமையற்காரர் தொடர்ந்தார்.
“ இது ஐ.ஜி. ஐயாவோட சகோதரருடையது.
சில நாட்களுக்கு முன்புதான் அவர் வந்தார்.
எங்க ஐயாவுக்கு நாய்கள் பிடிக்காது.
ஆனால், ஐயாவோட சகோதரருக்கு... நாய்கள் என்றால் உயிர்”

“ என்ன! ஐ.ஜி ஐயாவோட சகோதரர் வந்திருக்காரா?” என்றார் இன்ஸ்பெக்டர்.
ஆனந்தத்தால் அவரது முகம் பூரித்து விட்டது.
“ எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி இது.
எனக்கு தெரியாம போச்சே!
இனி இங்கேயே தங்கி விடப்போகிறாரா?

“ ஆமா. இனி இங்கேதான் இருக்கப்போகிறார்”.

“ எதிர்பாராத நல்லசெய்தி!
 ‘அவருடைய’ நாயா இது!
ரொம்ப சந்தோஷம்.
வீட்டுக்கு அழைத்துச்செல்.
அற்புதமான நாய்க்குட்டி!
இந்த ஆள் விரலைக்கடிதாயா நீ?
ஹ..ஹ...ஹா..ஹா!
பரவாயில்லை.
பயப்படாதே!”

“ உர்..உர்..உர்ர்ர்ர்ர்ர் ”.

“ பொல்லாத குட்டி...புஜ்ஜூ குட்டி...
கோபம் பொத்துக்கொண்டு வருகிறது!
அருமையான நாய்க்குட்டி!”

சமையல்காரன் நாயை அழைத்துக்கொண்டு சென்றான்.
கூட்டத்தினர் ‘அரைக்கோட்டை’  பார்த்து சிரித்தனர்.

“இருடா...உனக்கு செம்மையா தர்றேன்” என இன்ஸ்பெக்டர் அவனை மிரட்டினார்.
பிறகு தனது மேல் கோட்டை இழுத்து விட்டுக்கொண்டு பஜாரின் குறுக்கே நடந்தார்.

*********************************************************************************

நண்பர்களே...
இச்சிறு கதை,
‘ரஷ்ய இலக்கிய மாமேதை’ அந்தோன் சேகவ் [ ANTON CHEKHOV ] படைத்தது.
ரஷ்யசூழலில் எழுதப்பட்டதை நமது சூழலுக்கு ஏற்றவாறு கதையை உங்களுக்கு வழங்கியுள்ளேன்.

1904ல் அந்தோன் சேகவ் மறைந்து விட்டாலும்,
அவரது படைப்புகள் சாகா வரம் பெற்று வாழ்கின்றன்.
உலகம் முழுக்க பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சேகவ் கொண்டாடப்படுகிறார்.
ஏனெனில் சேகவ், உண்மையை எடுத்துரைக்கிறார்...
உள்ளதை உள்ளபடிக்கூறி உள்ளத்தை ஒளி பெறச்செய்கிறார்.

மனிதனின் நிலையை மனிதனுக்கு தெரியப்படுத்தும் போது,
மனிதன் மேம்படுவான் என்று சேகவ் கூறி வந்தார்.

வாசகர்களை ஒன்றும் தெரியாத சிறு பிள்ளைகளாகவோ,
சிந்தனையற்றவர்களாகவோ கருதி,
ஒவ்வொன்றுக்கும் தாமே தீர்வை தயாரித்தளிக்க முயலவில்லை,
அவர்களுக்கு உபதேசிக்க முற்படவில்லை.
தாம் எழுதுவதை வாசகர்கள் கூர்ந்து நோக்குவர்,
சிந்தனை செய்வர்,
பிழையின்றி புரிந்து கொள்வர் என்று சேகவ் திடமாக நம்பினார்.
 
சேகவ் படைப்பை வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...
அந்தோன் சேகவ் 
சிறுகதைகளும் குறு நாவல்களும்.
எதிர் வெளியிடு,
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி- 642002
தொலைபேசி : 04259 226012, 98650 05084.

அந்தோன் சேகவ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிப்பீடியாவிற்குள் செல்க.
 http://en.wikipedia.org/wiki/Anton_Chekhov 

சேகவ் படைத்த மற்றொரு சிறந்த சிறுகதையை,
நீங்கள் விரும்பினால் எழுதுகிறேன்.

"The Thirty-Six Dramatic Situations"-
both by Carlo Cozzi (1720-1806) 
and Georges Polti (1867-1946)= ற்றி விரிவாக இனி வரும் பதிவுகளில் காணலாம்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Dec 8, 2012

துப்பாக்கி - ஆண் குறியீடு...தொப்புள் - பெண் குறியீடு.\ 18 +

நண்பர்களே...
கனவில் அரசன்,அரசி வந்தால் பெற்றோரைக்குறிக்கும்.
இளவரசன், இளவரசி வந்தால் கனவு காண்பவனையே குறிக்கும்.
நீண்ட பொருட்களான குச்சி, மரம், குடை ஆகியவை ஆண்குறி குறீயீடாகும்.
அதே போல் கூரிய ஆயுதங்களான கத்தி, வாள், ஈட்டி போன்றவையும் ஆண்குறியையே குறிக்கும்.
பெட்டி, பேழை, அடுக்களை, அடுப்பு ஆகியவை பெண்ணின் கர்ப்பப்பையின் குறியீடுகளாகும்.
கப்பல், கடலில் செல்லும் அனைத்து ரக ஊர்திகள் ஆகியவை பெண்குறி அல்லது கர்ப்பப்பை குறியீடுகளாகும்.
பொதுவாக கனவில் அறை [ Room ]  வந்தால் பெண் அல்லது பெண்ணின் கர்ப்பப்பை ஆகியவற்றை குறிக்கும்.
அறைக்குள் அடிக்கடி சென்று வருவது போல் கனவு கண்டால் மறுபிறப்பு எண்ணத்தை குறிக்கும்.
மாடிப்படி, ஏணி போன்றவற்றில் ஏறுவதும் இறங்குவதுமாக கனவு வந்தால்  ‘புணர்ச்சி செயலை’ குறிக்கும்.


கனவில் சமந்தா, ஹன்சிகா வந்தால், 1990க்கு பிறகு பிறந்தவர் நீங்கள்.
உங்கள் கனவில் தவமணி தேவி வர வாய்ப்பில்லை.
அவரை கனவில் கண்டவர்கள் எல்லோரும் ‘டிக்கெட்’ வாங்கியிருப்பார்கள்.
தமிழ் சினிமாவில் முதல் கவர்ச்சிக்கன்னி அவர்தான்.


முதல் பாராவில் குறிப்பிட்டவை அனைத்து கருத்துக்களும் எனது சரக்கல்ல.
உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு [ Sigmund Freud ] சொந்தமானது.
சிக்மண்ட் ஃப்ராய்ட் [ 1856 - 1939 ],
யூத இனத்தில் பிறந்தாலும் அதை பெருமையாக கருதாதவர்.
அன்று ஆஸ்திரியா என்றும் இன்று செக் குடியரசு என்றழைக்கப்படும் நாட்டில் பிறந்தவர்.
சிக்மண்ட் ஃப்ராய்ட் பற்றி மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடீயாவுக்கு செல்லவும்.


அறிவியலின் ஒவ்வொரு துறைக்கும் தனித்த கோட்பாடுகள் உள்ளன.
இயற்கை அறிவியலுக்கு... டார்வினியமும்,
சமூக அறிவியலுகு... மார்க்சியமும்,
இயற்பியலுக்கு... நியூட்டன் விதிகளும்,ஐன்ஸ்டின் கோட்பாடுகளும்,
உளவியலுக்கு... ஃப்ராய்டியமும்
ஆணிவேராக கருதப்படுகின்றன.
நவீன அறிவியலின் ஐந்து தூண்கள் என்று
1 நியூட்டன்,
2 மார்க்ஸ்,
3 டார்வின்,
4 ஐன்ஸ்டின்,
5 ஃப்ராய்ட் ஆகியோரைக்குறிப்பிடுவர்.
அவர்களின் அணுகுமுறைகளும், கோட்பாடுகளும்...
இன்றும் அறிவியல் உலகை இயக்கி வருகின்றன.

ஃப்ராய்டை தெரிந்து கொள்ளாமல் உலக சினிமாக்களை முழுமையாக
உள் வாங்க முடியாது.
முக்கியமாக ஃப்ராய்டின் கோட்பாடுகள் தெரிந்தால்தான் ஹேராம் திரைப்படத்தை முழுமையாக உள்வாங்க முடியும்.
ஃப்ராய்ட் பற்றி தெரிந்து கொள்ள தமிழில் மிகச்சிறப்பான நூல் இருக்கிறது.
            சிக்மண்ட் ஃப்ராய்ட்
                                உளப்பகுப்பாய்வு அறிவியல்
எழுதியவர் : தி.கு.இரவிச்சந்திரன்
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்
25, தெற்கு சிவன் கோயில் தெரு,
கோடம்பாக்கம்,
சென்னை - 600024,
போன் : 044 24815474,
விலை : 320-00

இந்நூலை முழுமையாக உள்வாங்கிக்கொள்வதன் மூலமாக ஃப்ராய்டிய விளக்கங்களை புரிந்து கொள்ளலாம்.
ஃப்ராய்டியத்தை கடப்பதற்கு இந்நூல் ஒரு ஓளிகாட்டி.
படிக்க பொறுமையும், துணிவும் தேவை.
காரணம் படிப்போரையே நோயாளி என சுட்டிக்காட்டும்.
அக்குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க உள்ளம் பல வழிகளை மேற்கொள்ளும்.
ஃப்ராய்ட் எதிரியாகி விடுவார்.

இந்நூலின் சுவரஸ்யமான பகுதிகளில் ஒரு சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

# கனவில் ‘மிகச்சிறிய’ பொருட்கள் வந்தால் அவை அந்நபரின் பாலுறுப்பைக்குறிக்கும்.
குறிப்பாக குழந்தை கனவில் வந்தால் பாலுறுப்பைக்குறிக்கும்.
குழந்தையுடன் விளையாடுதல் அல்லது குழந்தையை அடித்தல் போலக்கனவு கண்டால்  ‘சுய இன்பத்தை’ குறிக்கும்.

# வானூர்தி ஆண்குறிக்குறியீட்டுக்கு சிறந்த சான்றாகும்.
அதன் அமைப்பு மட்டுமல்லாது செயலிலும் ஆண்குறியை ஒத்திருக்கிறது.
துப்பாக்கி, பீரங்கி ஆண்குறிக்குறியீடுகளே.
கீழிருந்து மேல்நோக்கிச்செல்லும் ஏவுகணை ஆண்குறியின் விறைப்போடு தொடர்புடைய குறியீடாகும்.
சுருங்கி விரியும் குடை, பலூன் போன்றவை ஆண்குறிக்குறியீடுகளாகும்.
மின் விளக்கு, பேனா, பென்சில் [ பேப்பர் = பெண் குறியீடு ]  போன்றவையும்...
ஆடைகளில் கோட், டை போன்றவையும் ஆண்குறியை குறிப்பிடுவதாகும்.

# எண்  ‘3’ ஆண்குறியின் சிறப்புக்குறியீடாக ஃப்ராய்ட் காண்கிறார்.
ஆண்குறியையும் இரண்டு விரைகளையும் கொண்டு இக்குறியீடாக்கம் நிகழ்கிறது.
உருவ ஒப்புமையும் இதில் அடங்கியுள்ளது.
மேல் நோக்கி எழும் நெருப்பு, கடல் அலை கூட ஆண்குறிக்குறியீடாகும்.

# சுரங்கம்,கால்வாய், வாய்க்கால்,பாட்டில்,பை, கப்பல், பெட்டி, பூ, ஷூ
[ கால் = ஆண் குறி ] போன்றவை பெண்குறிக்குறியீடாகும்.
வாய், கண், காது, தொப்புள் போன்றவை பெண் குறியோடு தொடர்புடைய உறுப்புகளாகும்.

# பொதுவாக கனவுக்குறியீடுகள் எண்ணிலடங்காதவை.
சில முக்கியமான குறியீடுகளை மட்டும் ஃப்ராய்ட் குறிப்பிட்டுள்ளார்.
இவை கனவில் மட்டுமல்லாமல் தொன்மம், நாட்டுப்புறவியல், கதைகள், ஓவியங்கள், விளையாட்டுக்கள், இலக்கியங்கள், இசை, திரைப்படங்கள் என அனைத்திலும் வெளிப்படும்.
அவற்றை இனம் கண்டு கொள்ள உளப்பகுப்பாய்வு அணுகு முறையால் மட்டுமே முடியும்.
உளப்பகுப்பாய்வு அணுகு முறைப்படி அணுகினால்தான் ஒரு படிமத்தில் பொதிந்துள்ள உண்மையான குறியீட்டை அறிந்து கொள்ள முடியும்.

# 'வாழ்வுக்கே ஒரு குறிக்கோள் உண்டு’ என்று கூறும் ஃப்ராய்ட் அனைவரின் வாழ்வுக்கும் சாவுதான் குறிக்கோள் என்கிறார்.
சாவை நோக்கியே அகநிலை பயணிக்கிறது.
[ இந்த கருத்தாக்கத்தைதான் ஹேராம் படத்தில் கமல் பயன்படுத்தியதை போன பதிவில் பார்த்தோம்.]

தொப்புளில் ஆம்லெட் போடுவது, பம்பரம் விடுவது எந்த வகை குறியீடு என்பதை ஓய்வாக இருக்கும்போது சிந்தித்து வையுங்கள்.
வாழ்க்கைக்கு உதவும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Mar 23, 2012

மார்லன் பிராண்டோ-நிஜத்தில் நடிக்காதவன்


மார்லன் பிராண்டோ தனது நடிப்பால் என்னை வசீகரித்ததை விட அவரது சுய சரிதத்தை படித்ததின் மூலமாக என்னை முழுக்க ஆட் கொண்டார்.
படிக்க...படிக்க.... என்னுள் எழுந்த அவரது உயரம் இமயமலையை கடுகாக்கும் கம்பீரம் கொணடது.
தனது பலகீனங்களை,தவறுகளை அப்பட்டமாக சுய சரிதத்தில் சொன்ன நடிகன் வேறு யாரும் இல்லை என நினைக்கிறேன்.

அஜயன் பாலா மொழி பெயர்ப்பில் எதிர் பதிப்பகத்தார் வெளியிட்ட மார்லன் பிராண்டோ என்ற நூலில் எனக்கு பிடித்த அம்சங்களில் சிலவற்றை மட்டும் உங்களொடு பகிர்ந்து கொள்கிறேன்.

சூப்பர்ஸ்டார் இமேஜில் மிதக்கும் நடிகர்கள் கட்டாயம் இதை படிக்க வேண்டும்...

‘மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை தேவ தூதராக கருதுகின்றனர்.
அந்த ஒருவருக்கு இந்த தேவதூதப்பதவி பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் மக்கள் அதை வலுக்கட்டாயமாக அவர்களிடம் திணித்து விடுகின்றனர்.
தங்களுடைய உணர்வுகளின் தேவைகளில் அந்த நபருக்காக ஆழமான ஒரு இடத்தை உருவாக்கி தருகின்றனர்.
ஏனெனில் நாம் கடவுளைப்போல சாத்தான்களை குறித்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்’.

வளர்ச்சியடைந்த நாடுகள்.... வளரும் நாடுகளுக்கு உதவி செய்வது எத்தனை போலியான நாடகம் என்பதை தோலுரித்து காட்டுகிறார் தனது எழுத்தில்....

 “பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து,இந்தோனேசியா போன்ற தெற்க்காசிய நாடுகளுக்கு படப்பிடிப்பு நிமித்தம் சென்ற போது...
காலனியாதிக்கம் முடிந்த பின்னும்.... வளர்ச்சியந்த நாடுகள்...
அந்நாட்டின் பொருளாதாரங்களை சீரழிப்பதை என்னால் கண்கூடாக உணர முடிந்தது.
வெளிநாட்டு உதவி என்ற பெயரால் அந்த நாடுகளை வளர்ந்த நாடுகள் தங்களது அரசியல் சுய காரியங்களுக்கு பயன்படுத்தி சுரண்டி வருகின்றன”.

பிராண்டோவின் வார்த்தைகள் எத்தனை சத்தியம் என்பதற்க்கு...
கூடங்குளம் இன்றைய சாட்சி.

 “அதிகாரத்தில் இருக்கும் தனி மனிதனோ அல்லது அரசாங்கமோ மக்களை தேசம் என்னும் பெயரால் எவ்வளவு தூரம் அடிமைகளாக்கி தன்னிஷ்டத்திற்க்கு தவறான பாதைகளில் அவர்களை அழைத்து செல்கிறது”....
பிராண்டோவின் இந்த வரிகள் கடும் மின் வெட்டை ஏற்ப்படுத்தி தமிழெகமெங்கும் கூடங்குளம் மக்களுக்கு எதிராக திசை திருப்பும் நடவடிக்கையை ஞாபகப்படுத்தியது என்றால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

இந்தியாவில் பீகாரில் பயணித்து அங்கு நிலவும் சாதீயக்கொடுமைகளை ஆவணப்படமாக்கி உள்ளார் பிராண்டோ.
அதை அமெரிக்க திரையரங்குகளிலோ...தொலைக்காட்சியிலோ வெளியிட முடியவில்லை.
தனது விரக்தியை...கோபத்தை தனது வைர வரிகளில் பதிவு செய்துள்ளார்.
 “அமெரிக்க மனம் இதர மக்களின் துன்பங்களின் மீது ஒரு போதும் அக்கறை கொள்வதில்லை”.


காட்பாதர் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்க பிராண்டோ போகாமல் சச்சின் லிட்டில் பெதர் என்ற அமெரிக்க பூர்வீகக்குடிமகளை அனுப்பி புரட்சி செய்தார் பிராண்டோ...
இத்தனை காலமாக இனத்தின் பெயரால் அமெரிக்க பூர்வீகக்குடிமக்கள் எவ்வளவு தூரம் பழி வாங்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிக்கையாக ஆஸ்கார் அரங்கில் வாசிக்க வைத்து உலகின் கவனத்துக்கு கொண்டு சென்ற மாபெரும் போராளி பிராண்டோ.
அது மட்டுமல்ல.... அந்த மக்களுக்காக தனது வாழ் நாளை செலவழித்துள்ளார் பிராண்டோ என்பதை அறிந்து கொள்ள முடிகிறது இந்நூலால்.

மது...மங்கை என கொண்டாட்டத்துடன் இருந்தாலும்...
உண்மையான புரட்சி கலைஞர் மார்லன் பிராண்டோதான்.

நூலின் பெயர் : மார்லன் பிராண்டோ
மொழி பெயர்ப்பு : அஜயன் பாலா
வெளியிடு : எதிர்
விலை :  ரூ.250.00
தகவல் தொடர்புக்கு : 04259 226012, 98650 05084.
   

Mar 15, 2012

காவல் கோட்டம்-காவலும்...காதலும்...[பாகம் இரண்டு]


வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிட்ட பின் ஊமைத்துரையை பாளையங்கோட்டை சிறையில் அடைத்து வைத்தனர்.
2-2-1801 அன்று இரவு திருச்செந்தூர் முருகனுக்கு காவடி எடுப்பது போல் வந்த பக்தர் கூட்டமும்,ஊமைத்துரை உறவினர்களும் காவலர்களை தாக்கி ஊமைத்துரையை விடுவித்து வல்லநாட்டு மலைக்கு தப்பித்து சென்றுள்ளனர்.
பாஞ்சாலக்குறிச்சியில் காவலில் இருந்த கும்பினிச்சிப்பாய்களை கொன்று ஒரே வாரத்தில் அங்கு ஒரு மண் கோட்டையை எழுப்பி உள்ளார்.
மேலும் ஐந்து பாளையங்களில் வெள்ளையரை அழித்து கோட்டைகள் கட்டியுள்ளார்.
இப்படி பல இடங்களில் ஊமைத்துரை வெற்றிக்கொடி நாட்டிய சாகஸத்தை காவல் கோட்டம் படம் பிடித்து காட்டுகிறது.

தன்னை சரணடைந்த பரங்கிததளபதியின் மனைவி வேண்டுக்கோளை ஏற்று அவர்கள் உடமைகளோடு வெளியேற அனுமதித்த மாண்பை வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஊமைத்துரையை வீழ்த்திய அக்னியூவின் வார்த்தைகள்....
 “காது கேளாத,வாய் பாச முடியாத ஒரு இளைஞனின் சாகஸங்கள் பிரமிப்பூட்டுகின்றன.
அவர் சைகைகளை தேவ கட்டளைகளாக ஏற்று எல்லோரும் கீழ்ப்படிகின்றனர்.
எல்லா தாக்குதல்களிலும் அவர் முன்னால் நிற்கிறார்.
தன்னை விட நூறு மடங்கு எதிரிகளை கண்டு அவர் அஞ்சவில்லை.
அவரது படையின் சக்தியைவிட.... சாதனைகள் பல மடங்கு பெரியவை”

மதுரை நகரத்தை தாதனூர்க்காரர்கள்தான் காவல் காத்து வந்திருக்கிறார்கள்.
அதற்க்காக ஒவ்வொரு வீட்டிலும் காவக்கூலி பெற்றிருக்கிறார்கள்.
வெள்ளைக்காரன் மதுரை நகருக்குள் புதிய கட்டிடம் கட்டியுள்ளான்.
அதற்க்கும் காவக்கூலி பெற்றிருக்கிறார்கள் தாதனூர்க்காரர்கள்.
அந்த புதிய கட்டிடம் போலிஸ் ஸ்டேசன்.

மதுரைக்கு முதன்முதலாக ரயில் வந்த போது மதுரை மக்களின் கமெண்ட்...
“அதுக்கு வடக்க காவிரி ஆத்துல தண்ணிய பிடிச்சு மூக்கு வழியா நெறையா ஊத்தி விட்றாங்ய...
நம்ம நாட்டு ஒட்டகம் எப்படி தண்ணிய உள்ள வச்சிருக்குமோ அதப்போல இந்த வெள்ளக்கார வண்டி...தண்ணியப்பூரா உள்ள வச்சுகிட்டு கரிய்ய தின்னுகிட்டு எவ்வளவு தூரம் வேணும்னாலும் ஒடும்”

“அப்ப நம்ம நாட்டு ஒட்டகம் மாதிரின்னு சொல்ற...
அது சரி...இது தலையிருக்கிற பக்கம்தான் குசு விடுதாமே... ஏன்?”

தாதனூர் கிழவிகள் பேச்சு அத்தனையும் அடல்ட்ஸ் ஒண்லி.
புதுமாப்பிள்ளைக்கு சொல்லும் அறிவுரை இது...
“ஏலேய்...மொட்டு கெட்ட பயலே...நீ என்ன தீத்தவளையா சரடு கட்டி கூட்டி வந்த?
இது உழுகாத வயக்காடுடா...எடுத்த எடுப்புல அமுக்கி உழுகணும்னு நெனச்சின்னா கலப்பையும் சேதப்பட்டு போகும்...மண்ணும் பெறளாது.
பதம் போயிரும்.
மே ஓட்டா ஓட்டி,அப்புறம் கலப்பய எடுத்து கட்டி,மேழிய அமுக்கி பிடிக்காம... மெல்ல பிடிச்சுகிட்டு.... அது நோக்கத்துக்கு... மாட்ட போக வுடு...
போறப்போ... அதுவா கிழிச்சுகிட்டு போகும்.
ரெண்டு ஓட்டு.. மூணு ஓட்டுல தன்னால புழுதி கிளம்பிரும்...
அத வுட்டுட்டு எடுத்த எடுப்புல...அமுக்கிதான் உழுவேன்னா எதுக்கும் ஆகாம போயிரும்”

“அவ எதுக்கு தீத்துட்டுப்போனா?”
 “அவ புருசன் சேவ மாதிரி ஏறுனதும் எறங்கிர்றானாம்....”
“அட தட்டு கெட்ட சிறுக்கி!ஆழம் பாத்தாதுன்னு அழுதுகிட்டு கிடந்தவ...
 ஒத்த வருசத்துல நீளம் பத்தாதுன்னு தீத்துகிட்டு போயிட்டாளா!”

 “ஓம்புருசன் பெரிய கெட்டிக்காரனாம்லடீ”
“அவங்கிடக்கான் தூமச்சீல...எடங்கண்டுபிடிக்கவே எட்டு நாளாச்சு”

காவல் கோட்டையில் இது போன்ற டயலாக்குகள் வெள்ளமெனெ பரவிக்கிடக்கிறது.
700 ஆண்டு பயணத்தை களைப்பிலாமல் கடக்க உதவும் வயகரா இவைகள்தான்.

Mar 14, 2012

காவல்கோட்டம்-வலிமை...பெருமை...[பாகம் ஒன்று]

ஜனவரியில் வாங்கிய காவல்கோட்டம் இப்போதுதான் படிக்க முடிந்தது.
சரித்திர நாவல் என்றாலே கல்கியும்...சாண்டில்யனும்தான் நமக்கு முன்னோடி தெய்வங்கள்.

சுஜாதா முதன்முறையாக ரத்தம் ஒரே நிறத்தில் புதிய பாதையை காட்டினார்.
சரித்திரமும் புதினமும் அற்ப்புதமாக கலந்து அவர் செய்த ரஸவாத வித்தையால் பிரிட்ஷ் காலத்து சென்னையை தரிசிக்க முடிந்தது.

பிரபஞ்சனது ‘வானம் வசப்படும்’... ஆனந்த ரங்கம் பிள்ளையின் டைரியை உள்வாங்கி... பிரெஞ்சு காலத்து புதுவையை படம் பிடித்து காட்டியது.

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் கிபி1370 க்கு இழுத்துச்செல்கிறது.
கிட்டத்தட்ட 700 ஆண்டு வரலாற்றில் நாம் பயணிக்க முடிகிறது.

காவல் கோட்டத்தின் சிறு பகுதிதான் அரவான்.
காவல் கோட்டத்தின் ஆன்மாவை அரவானில் தரிசிக்க முடியாது.
 பசுபதி காரெக்டர் கிணற்றில் விழுந்து மாட்டிக்கொள்கையில் ஆதி காரெக்டர் கிராபிக்ஸ் மாடுகளுடன் பவனி வந்து.... விஜய் பட ரேஞ்சில்....
 ஆக்‌ஷன் காட்சி தூள் பறக்க தப்பித்து போவார்கள்.

காவல் கோட்டத்தில் சு.வெங்கடேசன் சித்தரிந்ததை காட்டியிருந்தால் யதார்த்தம் வாழ்ந்திருக்கும்.
சின்னான் கோஷ்டியினர்.... பக்கத்து கிராமத்தில் போய்....
 வேகமாக ஒடக்கூடிய மாடுகளை தேர்வு செய்து... திருடி ஒட்டிக்கொண்டு வருவார்கள்.
மாட்டு வாலின் அமைப்பை வைத்து... மாடு ஓடும் திறத்தை கணிப்பதாக.... மாட்டு சாஸ்த்திரத்தை நுழைத்திருப்பார் வெங்கடேசன்.

களவு போன ஊரில்... காவலிருப்பவர்களிடம்...
மாட்டு வியாபாரிகள் என நம்ப வைத்து... இரவில் தங்கிச்செல்ல அனுமதி பெற்று தங்கி...கிணற்றுக்குள் கட்டிலை இறக்கி...காப்பாற்றி விடிவதற்க்குள் தப்பித்து செல்வதாக சித்தரித்திருப்பார்.

காவல் கோட்டத்தில் சின்னானுக்கு ஜோடி இன்னொருத்தன் மனைவி.
இவன் மேல் கொண்ட காதலால்...தாலி கட்டிய தாய் மாமனை அறுத்து ஒதுக்கி விட்டு...அதே தாய்மாமன் தலைமையில்... சின்னானது அரை ஞாண் கொடியை தாலியாக ஏற்று மனைவியாக வாழ்கிறாள்.
இவை படமாக்கப்பட்டிருந்தால் அரவான் டெம்ப்ளேட் காதல் காட்சிகள்...
பாடாவதி பாடல் காட்சிகள்... இம்சையில்லாமல் ஒரு புது அனுபவம்....
ஒரு பரவசம் கிட்டியிருக்கும்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் ஒ.ஏ.கே.தேவர் ஊமைத்துரையாக வந்து கர்ஜிப்பார்.
காவல் கோட்டம் இவர் பிறவி ஊமை என்கிறது.
நமது பாடப்புத்தகத்தில் கட்டபொம்மன் வர்லாற்றில்....ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பித்துச்சென்ற போது வெள்ளையரால் கொல்லப்பட்டார் என்று ஒரு வரிச்செய்தியாக...வரலாறு சொல்லப்படும்.
அவரது வீரதீரச்செயல்கள் பக்கம் பக்கமாக காவல்கோட்டம் சித்தரிக்கிறது.
அவற்றை இரண்டாம் பாகத்தில் சொல்கிறேன்.

Jul 6, 2011

நாஞ்சில் நாடன் V/S நடிகர் சிவக்குமார்... தேசிய விருது பெற்ற ஜீவா பாராட்டு விழாவில்...



எனது இனிய நண்பர் ஒவியர் ஜீவா அவர்களுக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.
அவர் ஒரே ஒரு புத்தகம்தான் எழுதி உள்ளார்.
அதன் பெயர் திரைச்சீலை.
முதல் நூலுக்கே தேசிய விருது கிடைத்து விட்டது.
தமிழில் அறந்தை நாராயணன் 1982ம் வருடம் ‘தமிழ் சினிமாவின் கதை’ என்ற நூலுக்கு தேசியவிருது பெற்று அற்புதம் நிகழ்த்தினார்.
29 வருடம் கழித்து இந்த அதிசயத்தை முதன் நூலிலேயே நிகழ்த்தி காட்டி உள்ளார் ஜீவா.

உள்ளூர் சினிமா முதல் உலகசினிமா வரை அவர் பார்த்து வியந்த படங்களை ஒரு ரசிகனின் கண்ணோட்டமாக அற்புதமாக வரைந்திருக்கிறார்.
ஒவியர் அல்லவா!
மனிதர் நேரில் பேசும்போது கிண்டலும் கேலியும் சரமாரி வெடிக்கும்.

நானும், அவரும்,இன்னொரு நண்பரும்... ஆக மூவர் ஒரு பெண்கள் கல்லூரிக்கு ஆவணப்பட போட்டிக்கு நடுவர்களாக போயிருந்தோம்.
மத்தியானம் செமப்பசி.
பசி சிறுகுடலை காலி பண்ணி பெருங்குடலுக்கு வரும்போது கிடச்சது செம விருந்து.
ஆளுக்கொரு சப்பாத்தி...
அதைப்பறிமாற அழகான மூணு பேரு....
பசி மயக்கத்துல அந்தப்பொண்ணுங்களை கொஞ்சம் சாப்பிட்டேன்..
ஒரேஒரு சப்பாத்தியை புயல் வேகத்தில் சாப்பிட்டு முடிக்க... அதை விட வேகமாக அந்த தேவலோக கன்னிகள் மறைந்து விட்டனர்.
நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் பேசிக்கொண்டோம்..
                                             “பெருசா ஏதாவது வரும்...”
காத்திருந்து தோற்று கை கழுவப்போனோம்...

இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி எங்களை அனுப்பி பழிதீர்த்தவர் கோணங்கள் பிலிம் சொசைட்டி தலைவர் பொன் சந்திரன்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் செல்போனில்.... சந்திரன் சாருக்கு சின்னதா ஒரு அர்ச்சனை செய்தேன்.
அவர் ஜீவாவுக்கு போன் போட்டு '' மூணே மூணு சப்பாத்தி மூணு பேருக்கும்
போட்டாங்களாமே..வெரி சாரி...''என்றிருக்கிறார்.
ஜீவா உடனே..
''பாஸ்கரன் பொய் சொல்லி யிருக்கார்...
அந்த மாதிரியெல்லாம் நடக்கல...
மிகைப்படுத்தியிருக்கிறார்...
இரண்டே இரண்டு சப்பாத்தியை மூணு பேருக்கும் போட்டு நல்லா கவனிச்சாங்க ....''என்று குரலில் பெருமை வழிய சொல்லியிருக்கிறார்.

மனுசன் எழுதும் போதும் இந்தப்பகடியை அப்படியே கடைப்பிடித்திருக்கிறார்.
எக்காலத்திலும் ரசிக்கப்படும் ‘குட் பேட் அக்ளி’படத்தின் விமர்சனத்துக்கு ஜீவா கொடுத்த தலைப்பு ‘மண்டையோட்டில் டாலர் தேடிய மகாமுனி’
இந்த ஒரு தலைப்பு போதும்....
தலைப்பின் சிறப்பை படம் பார்த்தவர்கள் உடனடியாக உணர்வார்கள்.

நானும் ஜீவாவும் ஒரே ஜாதிதான் என்பதை புத்தகம் படிக்கும் போது தெரிந்து கொண்டேன்.
சங்கமோ...கொடியோ...கட்சியோ இல்லாத எங்க ஜாதிக்குப்பெயர் சினிமா கிறுக்கு.

இன்றும் என்னை வசீகரிக்கும் என் சிவாஜிக்கு ஒரு அத்தியாயம் ஒதுக்கி இருக்கிறார் ஜீவா.
இப்புத்தகம் படிக்கும் ஒவ்வொரு வாசகனும் ஜீவாவை கண்ணீருடன் நன்றி பாராட்டுவர்.
என்றும் நம் இதயங்களில் வாழும் அந்த மகா கலைஞனுக்கு ஜீவாவின் வைரவரி...
 ‘விருதுகள் கிடைக்காவிட்டாலும் தமிழ்மக்கள் மனதில் நடிப்பு என்ற வார்த்தைக்கு ஒரே அர்த்தம் சிவாஜிகணேசன் என்றுதான் இருக்கிறது.’

கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய 'யவனிகா' பற்றி எழுதி முடிக்கையில்....
 ‘யவனிகா 22 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் தயாரிக்கப்படுவதாக ஒரு செய்தி மகிழ்ச்சியும் பீதியும் ஒரு சேரக்கிளப்புகிறது’என நல்ல மலையாளக்காவியங்கள் தமிழில் காயடிக்கப்படுவதை நக்கலடித்துள்ளார்.

ஹிந்தியை முதல் மொழியாகப்பயின்று...
ஆங்கில வழிக்கல்வியில் பள்ளி,கல்லூரி,சட்டம் வரை பயின்ற மாணவன்... தமிழில் இந்த புத்தகத்தை எழுதியது தாய் தமிழுக்கு கிடைத்த வரம்.

திரைச்சீலை
விலை-ரூ110.00
வெளியீடு:திரிசக்தி பதிப்பகம்
சென்னை.
தொடர்புக்கு:044-4297 0800, 2446 2220, 2446 4440

பாராட்டு விழாவில் கவிஞர் புவியரசு,மரபின் மைந்தன் முத்தையா,
நாஞ்சில் நாடன்.நடிகர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டினார்கள்.
நாஞ்சிலாரும்,திரை உலக மார்க்கண்டேயரும் மோதிய விவகாரம்...செமக்காரம்.
விபரம் அடுத்த பதிவில்...
[நாங்களும் சஸ்பென்ஸ் வைப்போமில்ல...]

May 14, 2011

விடுதலைப்பொழுது

                                                                 விடுதலைப்பொழுது
எழுந்திரு பிள்ளாய்
இது விடுதலைப்பொழுது

இருளின் துயில் கலைகிறது
நீயோ
இழுத்துப்போர்த்தபடி
இன்னம் உறங்குதியோ?
எழுந்திரு

இதோ
விடியலில் கீழ் வானம்
ஒளி முடி தரிக்கும் உன்னதம்
உனக்குத்தரிசனமாகவில்லை

அதோ
உன் வீட்டு வாசற்படியில்
ஒளிக்குழந்தை
தொற்றித்தவழ்கிறது
ஒற்றிக்கொள் கண்களில்

கதவிடுக்கின் ஊடாக
உட் செல்லத்துடிக்கிறது
திறந்து விடு முற்றாய்
உனதகம் ஓளி பெறட்டும்

கவிதை உபயம்:சு.வில்வரத்தினம்
நூல்:உயிர்த்தெழும் காலத்திற்காக
வெளியீடு:விடியல் பதிப்பகம்

தேர்தல் நாள் அறிவித்த பின் கீழ்க்கண்ட இந்தக்கவிதையை
நெல்லை ஹோசிமின் என்றப்பெயரில் பதிவிட்டேன்.
                                                       
                                               இரத்தத்தில் எழுதியது

இனியும் எங்களால் தாங்க முடியாது.
இனியும் எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது.
எங்களுடைய குதிரைகளை தின்றுவிட்டோம்.
எங்களுடைய பறவைகளையும் தின்று விட்டோம்;
எலிகளையும் பெண்களையும் தின்றுவிட்டோம்...
இன்னும் எங்கள் வயிறு காய்ந்து கொண்டுதானிருக்கிறது.

எங்கள் அரண்களை மொய்த்திருக்கிறார்கள் எதிரிகள்.
அவர்கள் நாலாயிரம் பேர்களுக்கும் மேல்;நாங்கள் நானூறு பேர்.

இனியும் வில்லிழுத்து,வசைகளல் அவர்களைத்தாக்க
வலு இல்லை எங்களிடம்;அவர்களைக் குதறத்
துடிக்கும் பற்களைக்கடித்துக்கொள்ள மட்டுமே வலு உள்ளது
எங்களிடம்.

பற்றி எரியும் இக்கவிதையை விதைத்தவர் சு.வில்வரத்தினம்.

விடியல் வெளியீடான “உயிர்த்தெழும் காலத்திற்காக” என்ற கவிதை நூலில் இது போன்ற வெடிமருந்துகள் கொட்டிக்கிடகிறது

Apr 30, 2011

செழியனின் உலகசினிமா

நான் எனது பதினைந்தாவது வயதில் முதன் முதலில் ஆங்கிலப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் ஐ விட்னஸ்.அது ஏ சர்டிபிகேட் படம்.சென்னைக்கு கோடைவிடுமுறைக்காக வந்தபோது தேவி தியேட்டரில் ரீலிஸ் செய்திருந்தார்கள்.டிக்கெட் வாங்கிக்கொண்டு போனால் டிக்கெட் கிழிப்பவர் என்னை உள்ளேவிடவில்லை.கெஞ்சினேன்....தியேட்டரே காலியாக இருந்தாலும் என்னை உள்ளே அனுமதிக்காமல் விடாப்பிடியாக இருந்தார் அந்த நேர்மையாளர்.
அப்புறம் அந்தப்படத்தை என் கிராமத்துக்கு பக்கத்து ஊரான உடன்குடி சண்முகனந்தா தியேட்டரில் ஞாயிறு காலைக்காட்சியாகப்பார்த்தேன்.நான் தாத்தா பாட்டியிடம் வளர்ந்த பிள்ளை.பள்ளிப்பாட ஆங்கிலப்புத்தகத்தில் வந்த கதை படமாக வந்துள்ளது என கதைவிட்டு அனுமதி வாங்கிசென்று பார்த்த பிள்ளையார்சுழி.... இன்று மூவாயிரம் படமாக வளர்ந்து விட்டது.

ஹாலிவுட் படங்களாக மட்டும் பார்த்து தள்ளிய என்னை புரட்டிப்போட்டது ஆனந்தவிகடனில் வந்த உலகசினிமா என்ற தொடர்.முதல் படம் சில்ட்ரன் ஆப் ஹெவன்.படமும்... எழுதிய செழியனின் தமிழும்... என்னை மிகவும் வசீகரித்தது.அன்று உலகசினிமா உலகத்தினுள் நுழைந்தவன் இன்றும் தீராத தாகத்தோடு சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.

செழியன் உலகசினிமாவை தமிழ்மக்களிடம் ஆனந்தவிகடன் மூலமாக கொண்டு சேர்த்தார்.என்னைப்போலவே செழியனின் உலகசினிமா தொடர் மூலமாக பயன்பெற்றோர் லட்சக்கணக்கான தமிழர்கள்.இன்று உலகசினிமா தொடர், மூன்று பாகங்களாக.... விகடன் பிரசுரத்தில் மூன்று புத்தககங்களாக வெளிவந்திருக்கிறது.
அந்த புத்தகத்தை வாங்கிப்படித்து அதிலுள்ள படங்களை பார்த்தாலே நீங்கள் உலகசினிமாவில் பிளஸ் டூ பாஸானதுக்கு சமம்.
டிகிரி வாங்க நீங்கள் பார்த்த படங்களின் இயக்குனர்களது அனைத்து படங்களையும் பார்க்கவேண்டும்.

செழியனது பாதங்களில் உலகத்திலுள்ள அனைத்து பூக்களையும் சமர்ப்பித்து என் நன்றி என்ற மலரையும் வைத்து வணங்குகிறேன்.

அவரது தமிழில் மணக்கும் உலகசினிமாக்களின் பட்டியல் இதோ....
 
உலகசினிமா-செழியன்[விகடன் வெளியீடு]
Book/Film=No
Name of the Film / Year
Director / Country
Color/B&W=Time
##Che=1=01
Children of Heaven=1997
Majid Majidi=Iran
Color=089 Min
##Che=1=02
Life Is Beautiful=1997
Roberto Benigni=Italy
Color=116 Min
##Che=1=03
Way Home, The=2002
Lee Jeong Hyang=South Korea
Color=080 Min
##Che=1=04
Road Home, The=1999
Zhang Yimou=China
Color=089 Min
##Che=1=05
Cinema Paradiso=1988
Guiseppe Tornatore=Italy
Color=155 Min
##Che=1=06
Run Lola Run=1998
Tom Tykwer=Germany
Color=081 Min
##Che=1=07
Maria Full of Grace=2004
Joswa Martson=Colombia
Color=101 Min
##Che=1=08
Together =2002
Chen Kaige=China
Color=116 Min
##Che=1=09
Central Station=1998
Walter Salles=Brazil
Color=113 Min
##Che=1=10
Pickpocket=1959
Robert Bresson=France
B&W=075 Min
##Che=1=11
Pianist, The=2002
Roman Polanski=Poland
Color=150 Min
##Che=1=12
Hotel Rwanda=2004
Terry George=UK
Color=121 Min
##Che=1=13
Cyclist, The=1987
Mohsen Makhmalbaf=Iran
Color=095 Min
##Che=1=14
City Lights=1931=Silent
Charlie Chaplin=USA
B&W=087 Min
##Che=1=15
Return, The=2003
Andrei Zvyagintsev=Russia
Color=105 Min
##Che=1=16
Meghe Dhake Tara=1960
Ritwik Katak=India
B&W=126 Min
##Che=1=17
A Short Film About Love=1988
Krzysztof Kieslowski=Poland
Color=080 Min
##Che=1=18
Rabbit Proof Fence=2002
Philip Noyce=Australia
Color=094 Min
##Che=1=19
Battle of Algiers, The=1966
Gillo Pontecorvo=Algeria
B&W=121 Min
##Che=1=20
Carandiru=2003
Hector Babenco=Argentina
Color=148 Min
##Che=1=21
Citizen Kane=1941
Orson Welles=USA
B&W=119 Min
##Che=1=22
Goodbye Lenin=2003
Wolfgang Becker=Germany
Color=121 Min
##Che=1=23
Rashomon=1950
Akira Kurasowa=Japan
B&W=088 Min
##Che=1=24
Postman In The Mountains=1999
Jianqi Huo=China
Color=093 Min
##Che=1=25
La Strada=1954
Federico Fellini=Italy
B&W=108 Min
##Che=1=26
Day I Became A Woman, The =2001
Marzieh Meshkini=Iran
Color=078 Min
##Che=1=27
E.T=1982
Steven Spielberg=USA
Color=115 Min
##Che=1=28
400 Blows, The =1959
Francoiss Truffaut=France
B&W=099 Min
##Che=1=29
Khamosh Pani=2003
Sabiha Sumar=Pakistan
Color=099 Min
##Che=2=30
Last Emperor,The=1987=
Bernardo Bertolucci=UK
Color=219 Min
##Che=2=31
Kikujiro=1999
Takeshi Kitano=Japan
Color=121 Min
##Che=2=32
Death On A Full Moon Day=1997
Prasanna Vithanage=Sri Lanka
Color=074 Min
##Che=2=33
Talk To Her=2002
Pedro Almodovar=Spain
Color=112 Min
##Che=2=34
At Five In The Afternoon=2003
Samira Makhmalbaf=Iran
Color=105 Min
##Che=2=35
City Of God=2002
Fernando Meirelles=Brazil
Color=130 Min
##Che=2=36
In The Mood Of Love=2000
Wong Kar Wai=Hong Kong
Color=098 Min
##Che=2=37
Moolade=2004
Ousmame Sembene=Senegal
Color=120 Min
##Che=2=38
Pather Panchali=1955
Satyajit Ray=India
B&W=115 Min
##Che=2=39
No Man's Land=2001
Danis Tanovic=Bosnia-Herzegovina
Color=098 Min
##Che=2=40
Gandhi=1982
Richard Attenbourough=UK
Color=188 Min
##Che=2=41
Battleship Potemkin=1925=Silent
Sergei Eisenstein=Soviet Union
B&W=115 Min
##Che=2=42
Salaam Bombay=1988
Mira Nair=UK:India
Color=113 Min
##Che=2=43
Osama=2003
Siddidq Barmak=Afghanistan
Color=083 Min
##Che=2=44
Raging Bull=1980
Martin Scorsese=USA
Color=129 Min
##Che=2=45
Where Is My Friends's Home=1987
Abbas Kiarostami=Iran
Color=083 Min
##Che=2=46
Ballad Of A Soldier=1959
Grigori Chukhrai=Soviet Union
B&W=089 Min
##Che=2=47
Landscape In The Mist=1988
Theo Angelopoulos=Greece
Color=127 Min
##Che=2=48
Be With Me=2005
Eric Khoo=Singapore
Color=093 Min
##Che=2=49
Postman=The=Il Postino=1994
Michael Radford=Italy
Color=108 Min
##Che=2=50
Dancer In The Dark=2000
Lars Von Trier=Denmark
Color=140 Min
##Che=2=51
Cries And Whispers=1972
Ingmar Bergman=Sweden
Color=091 Min
##Che=2=52
Runner=The=1985
Amir Naderi=Iran
Color=094 Min
##Che=2=53
Tokyo Story=1953
Yasujiro Ozu=Japan
B&W=136 Min
##Che=2=54
Blow Up=1966
Michelangelo Antononi=UK
Color=111 Min
##Che=2=55
Spring,Summer,Fall,Winter and Spring=2003
Kim-Ki-Duk=South Korea
Color=103 Min
##Che=2=56
Alizaoua=2000
Nabil Ayouch=Morroco
Color=099 Min
##Che=2=57
Hiroshima Mon Amour=1959
Alain Resnais=France
B&W=090 Min
##Che=2=58
Color Of Pomegranates,The=1968
Sergei Paradjanov=Soviet Union
Color=079 Min
##Che=2=59
Paradise Now=2005     
Hany Abu-Assad=Palestine
Color=090 Min
##Che=2=60
MalcolmX=1992
Spike Lee = USA
Color=202 min
##Che=2=61
White Nights=1957
Luchino Visconti
B/W=97 min
##Che=2=61
Distant=2002
Nuri bilge ceylan=Turkey
Color= 110min
##Che=2=62
The White balloon=1995
Jafar panahi=Iran
Color=85min
##Che=2=63
My uncle=1958
Jacques Tati=France
Color=117 min
##Che=2=64
Lawrence of Arabia=1962
David lean=USA
Color=216 min
##Che=2=65
Beautiful Boxer=2003
Ekachai Uekrongtham=Thailand
Color=117min
##Che=2=66
Intolerance=1916
D.W.Griffith=USA
B/w=163 min
##Che=2=67
In this world=2002
Michael winterbottom=UK
Color=88 min
##Che=2=68
The Birds=1963
Alfred hitcock=USA
B/w=119 min
##Che=2=69
Amores Perros=2000
Alejandro González Iñárritu=Spanish
Color=153 min
##Che=2=70
M=1931
Fritz lang =Germany
B/w =117 min
##Che=2=71
Paris, texas=1984
Wim wenders=Europe
Color=147 min
##Che=2=72
Mother and son=1997
Aleksander Soukurov=Russia
Color=73 min
##Che=2=73
Travellers and magician=2003
Khyentse norbu=Australia, bhutan
Color=108 min
##Che=2=74
What time is it there?=2001
Miang liag tsai=taiwan
Color=116 min
##Che=2=75
Cyrano de barberae=1990
Jean Paul Rappeneau=france
Color=137min
##Che=2=76
Painted Fire=2002
Kwon taek im=south korea
Color=120 min
##Che=2=77
The grand illusion=1937
Jean Renoir =France
B/w=114 min
##Che=2=78
The Piano=1993
Jane Campion=Australia
Color=121 min
##Che=2=79
Boy striped pyjamas=2008
Mark Herman=UK
Color=94 min
##Che=2=80
The Passion of joan of arc=1928
Carl Theodor Dreyer=France
B/w=112 min
##Che=2=81
Pulp fiction=1994
Quentin tarantino=USA
Color=154 min
##Che=2=82
Ugetsu=1953
Kenji mizogutchi=Japan
B/w=94 min
##Che=2=83
Breathless=1960
Jean Luc godard=France
B/w=87 min
##Che=2=84
The Piano Teacher=2001
Michael Hanake=France
Color=131 min
##Che=2=85
Viridiana=1961
Luis Bunuel=Spain
B/w=90 min
##Che=2=86
The God father=1972
Francis Ford coppola=USA
Color=175 min
##Che=2=87
Bicycle thieves=1948
Vittorio De sica=Italy
B/w=93 min