Jul 27, 2013

உலகசினிமா ரசிகர்களே...ஒன்று கூடுவோம்.






நண்பர்களே...இந்த உலகசினிமா சென்னைக்கு வந்திருக்கு.
மிஸ் பண்ணாம போய் பாருங்க.
இந்தப்படத்தை ஹவுஸ்புல்லாக்குவோம்.
இயக்குனர் ஆனந்த் காந்திக்கு கை கொடுப்போம்.



இந்தப்படம் வெளியாகி உள்ள நகரங்கள்...திரையரங்குகள் அடங்கிய பட்டியல் இதோ...


கோவையில் இப்படத்தை திரையிடவில்லை.
எனவே நான் இப்படத்தை பார்ப்பதெற்கென்றே சென்னை வருகிறேன்.


இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை ‘திரு.மாமல்லன் கார்த்தி ’ அவர்கள் பேஸ்புக்கில் எழுதி உள்ளார்.
மாமல்லன் கார்த்தியின் விமர்சனத்தை இந்த இணைப்பில் சென்று படிக்கவும்.

இப்படத்தை இணைய தள ஊடகம் மூலமாக நாம் அனைவரும் கொண்டு செல்வோம்.

நான்  ‘எள்’ என்பதற்குள் ‘எண்ணையை’ கையில் வைத்து விட்டார்
நண்பர்+ பதிவர் ‘மெட்ராஸ்பவன்’ சிவா.
டிக்கெட்டை எக்ஸ்பிரஸ் வேகத்தில்... அனுப்பிய சிவாவுக்கு நன்றி.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jul 25, 2013

மரியான் - திரைப்படக்கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய படம்.


நண்பர்களே...
மரியான் படத்தில் இடம் பெற்ற கோளாறுகளை விவரித்து,
‘தொடர்’ பதிவுகள் எழுத முடியும்.
தமிழ்ப்படங்களை திட்டி எழுதக்கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தேன்.
இருந்தும் சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டு,
நான் நேசிக்கும் இயக்குனர் சொதப்பும் படங்களில்,
‘இயக்குனரை’ சாடி எழுதுவேன்.
உ.ம்:  அவன் - இவன் இயக்கியது எவன்?.

நான்  நேற்று ‘மரியான்’ ஓடும் திரையரங்கு பக்கம் போனேன்.
1000 பேர் அமரும் தியேட்டரில், மொத்தம் 20 பேர் மட்டும் காத்திருந்தனர்.
எத்தனை பேருடைய உழைப்பு, பணம் காலாவதியாகி போய் விட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தயாரிப்பில் இருந்த படம்.
தயாரிப்பு பட்ஜெட் 25 கோடி என கேள்விப்பட்டேன்.
ஏற்கெனவே படம் இயக்குனர் வைத்த நெருப்பில்  ‘எரிந்து’ கொண்டிருக்கிறது.
நானும் என் பங்குக்கு பெட்ரோல் ஊற்ற விரும்பவில்லை.


‘மரியான்’ பார்க்கும் போதுதான்,
ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை முழுமையாக முதன்முதலாக கேட்டேன்.
மிக அற்புதமாக இசையமைக்கப்பட்ட ‘என்ன செய்ய ராசா’ பாடல்,
அப்படியே என்னுள் ஒட்டிக்கொண்டது.
இது வரை அந்தப்பாடலை நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பேன்.
இனியும் கேட்பேன்.
நான் இந்தப்பாடலுக்கு என்னுள், ‘காட்சியமைத்து’ கொண்டு இருக்கிறேன்.
இந்த பயிற்சியை இது வரை ‘இளையராஜா’ பாடலுக்கு மட்டுமே செய்து இருக்கிறேன்.
முதன் முதலாக அந்த இடத்தை ரஹ்மான் பிடித்துக்கொண்டார்.
என்னால் இறக்கி வைக்க முடியாமல் அந்த அவலச்சுவையை அனுபவித்து வருகிறேன்.


இப்பாடலில் பிரிவின் துன்பமும் இருக்கிறது.
பிரிந்தவர் கூடி...காதலில் கிறங்கும் இன்பமும் இருக்கிறது.
மிகச்சவாலுடன் இப்பாடலை அமைத்து இருக்கிறார் ஏ.ஆர்.ஆர்.
மிகச்சாதாரணமாக இப்பாடலை கெடுத்து இருக்கிறார் இயக்குனர்.

பதேர் பஞ்சலி, பை சைக்கிள் தீப் போன்ற காவியங்களை திரைப்படக்கல்லுரியில் பாடமாக வைத்திருப்பர்.
மரியானையும் பாடமாக வைக்க வேண்டும்.
எப்படி படமெடுக்கக்கூடாது என்பதை இப்படத்திலிருந்து மாணவர்களுக்கு பாடமெடுக்கலாம்.

உதாரணத்திற்கு  ஒரு காட்சியை விளக்குகிறேன்.
பாலைவனத்தில் ‘மரியான்’ தப்பித்து ஓடி களைத்து அமர்ந்திருப்பான்.
அப்போது ‘சிறுத்தைகள்’ சுற்றி வளைக்கும்.
இக்காட்சி ரசிகனை குழப்பத்தில் ஆழ்த்தியது.
நிஜமாகவே சிறுத்தைகள் வந்ததா?
மரியானின் கற்பனையில் வந்ததா?

குழப்பம் வந்ததற்கு காரணம் இயக்குனர்,
‘சிசோபர்ணியா சிச்சுவேஷன்’ [ Schizophrenia ] காட்சியை வடிவமைத்த விதம்தான்.
இக்காட்சியில் இரண்டு விதமான ‘ஷாட்’ கம்போசிஷேன்
இயக்குனர் பயன்படுத்தி இருக்கலாம்.

# 1. ‘மரியான் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட்கள் அமைத்து சிறுத்தைகள் உலவும் காட்சியும், உறுமல் சத்தமும் வைத்திருக்கலாம்.

#2. ‘ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட் அமைத்து
‘மரியான் சிறுத்தைக்கு பயந்து நடுங்குவதாக்’
காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
சிறுத்தை பிரேமில் இருக்கக்கூடாது.
சிறுத்தையின் உறுமல் சத்தமும் இருக்கக்கூடாது.
இப்படி ஒரு ஷாட் ‘பவர்புல்லாக’ வைத்தாலே ஆடியன்ஸ் எளிதாக புரிந்து கொள்வார்கள்.
‘மரியானுக்கு மறை கழண்டு விட்டது’

ஆடியன்சுக்கு தெளிவு படுத்த தேவையில்லை என முடிவெடுத்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் ஷாட் வைக்கலாம்.
சிசோபர்ணியா சிச்சுவேஷனுக்கு லாஜிக் கிடையாது.

மரியானில் ‘சிசோபர்ணியா’ சிச்சுவேசன்’ காட்சிகளும்,
அதை தொடர்ந்து வருகின்ற ‘ஹீரோயிச காட்சிகளும்’...
நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி அலைக்கழிக்கின்றன.

 ‘சிசோபர்ணியா’ என்ற மனநோயை அடிப்படையாக வைத்து அற்புதமாக வந்த இரு படங்கள்.

 [ 1 ] A Beautiful Mind \ 2001 \ English \ Directed by : Ron Howard.



[ 2 ] Shutter Island \ 2010 \ English \ Directed by : Martin Scorsese. 


படத்தில் மற்றொரு குழப்பம்.
கதை நடைபெறும் காலம்.
இது தெளிவாக்கப்படாமல் ரசிகனை அலைக்கழித்து சாவடிக்கிறார் இயக்குனர்.
படம் முழுக்க பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் 1960 - 1970 காலத்துக்கு அழைத்து செல்கிறது.
ரசிகனை, வில்லனின்  ‘லேட்டஸ்ட் மாடல் புல்லட் பைக்’ ...
‘2010’க்கு இழுத்து வருகிறது.
அதுவும்...வெஸ்டர்ன் படங்களில் குதிரையில் கட்டி தரையில் ‘தரதரன்னு’ இழுத்து  வருவது போல் வருகிறது.


செல்போன்  ‘மருந்துக்கும் இல்லை.
‘மியுசியத்தில் வைக்கப்பட்டு விட்ட கருப்பு டயல் போன்’ மட்டுமே இடம் பெறுகிறது.
ஆனால் இறுதிகாட்சியில்  ‘அம்மா ஆட்சி பச்சை மினி பஸ்ஸில்’
வந்து இறங்குகிறான் மரியான்.
 ‘மினி பஸ்’ கிராமத்திற்குள் வருவதற்கு முன்பே,
செல்போன் கிராமத்துக்குள் வந்தது...வரலாற்று உண்மை.

 ‘எம் மீனவர்கள்’ சுடப்பட்டு இறக்கும் வரலாற்று அவலத்தை கையாண்ட விதம் மன்னிக்க முடியாத குற்றம்...  இயக்குனரே.
இப்படத்திற்கு வசனம் எழுதியது மீனவ வாழ்க்கையை இலக்கியமாக்கிய  ‘ஆழி சூழ் உலகு’ ‘ஜே.டி.குரூஸ்!
யூ டூ புரூட்டஸ்!!

சர்க்கரையின் தாய் : “ அய்யோ...எந்தப்பாவி சுட்டான்னு தெரியலயே”

என்ன  ‘மயித்துக்கு’... இந்தக்காட்சிக்கு வசனம்?
கடலை நோக்கி மண்ணை அள்ளி தூற்றினாலே போதுமே...
 ‘ ஒரு தாய்... ‘சிங்களப்பேயை’...‘அறம் பாடுகிறாள்’, 
என எளிதாக புரிந்து கொண்டு...
என் ‘தமிழன் பொங்கியெழுந்து இந்த ஒரு காட்சிக்காவது கை தட்டி இருப்பானே!

சூடான் போராளிகளை காட்சிப்படுத்திய விதத்துக்கு ‘சுண்ணாம்பு காளவாயில வச்சு சுட்டாலும்’ தகும்.

பதிவை முடிச்சுக்குறேன்.
இனி எழுதுனா ‘தங்க வசனம்’ சரமாரியா வந்துரும்.


சூடான் போராளிகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் செல்க...

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jul 23, 2013

மரியான் - ரசிகனை ‘மரிக்க’ வைப்பான்.


நண்பர்களே...
'பரத்பாலா - கனிகா',
இந்தப்பெயர்கள்...
ஏ.ஆர்.ரஹ்மான் ‘வந்தேமாதரம்’ வீடியோ ஆல்பம் பார்த்தவர்கள்... அனைவரும் வியந்து பாராட்டிய பெயர்கள்.


 ஜப்பானிய ‘சோனி’ நிறுவனம் இந்திய மனத்தையும்...
பணத்தையும் கொள்ளையடிக்க நூறு கோடி செலவழிக்க திட்டமிட்டது.  ‘இந்திய சுதந்திர பொன் விழா’ வசமாக வாய்த்தது.
வளர்ச்சி ஏணியில் ஏறி வரும் ஏ.ஆர்.ரஹ்மானை பிடித்தது.
 ‘வந்தேமாதரம் 1997’ பிறந்தது.
வந்தேமாதரத்தை ‘வீடியோ ஆல்பமாக்க ‘பரத்பாலா-கனிகா தம்பதிகளை’
கை காட்டினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
நூறு கோடி லட்டாக கிடைத்தது தம்பதிகளுக்கு.
தனது  ‘கார்ப்பரேட் நண்பர்களான’ ‘பரத்பாலா-கனிகாவுக்கு’...
ரஹ்மான் காட்டிய கருணை அது.
[ இசைக்காக ரஹ்மான் பீஸ் தனி. ]


வந்தேமாதரம் ஆல்பத்திற்காகவே ரஹ்மானை,
கண்ட்ராக்ட் போட்டு... ஸ்பெஷலாக முடி வளர்க்க வைத்தது ‘சோனி’.
அவரும் வளர்த்து, புரொபல்லர் பேன் காற்றில்,
தலை முடிகள்  பறக்க...‘தாய் மண்ணுக்கு வணக்கம்’ வைத்தார்.


ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில்,
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் வல்லமை படைத்தது ‘வந்தேமாதரம் 1997’.
ரஹ்மானின் இசைப்பயணத்தில்...
மிக முக்கிய மைல் கல் ‘வந்தேமாதரம் 1997’.


1997ல் கிடைத்த ‘வருமானத்தை’...
பரத்பாலா  ‘தலைமுறை தலைமுறையாக’ உட்கார்ந்து சாப்பிட்டு...
‘வந்தேமாதரம் புகழோடு’ இருந்திருக்கலாம்.
விதி வலியது.
‘மரியான்’ என்ற ஒரே படம்,
‘மேலும் பல கோடிகளை’ கொடுத்திருக்கும்.
ஆனால் ‘வந்தேமாதரம் புகழை’ மரித்து போகச்செய்து விட்டது.
தேவையா பரத்பாலா!

[ பரத்பாலா ஒரு படைப்பாளி கிடையாது.
தொழில் நுட்ப வல்லுனர்களின் திறமையால்,
‘வெளிச்சம் பெற்று வருபவர்’...
என்ற குற்றச்சாட்டு திரை உலகில் அன்றும்...இன்றும்... உண்டு.
அதை தனிப்பதிவாக தருகிறேன்.]

இந்தப்படத்தில் வேலை செய்திருப்பவர்கள் ,
தடுக்கி விழும் போது...
நிச்சயம் ஒரு ஜாம்பவான் மீதுதான் விழுந்திருக்க வேண்டும்.
மிகப்பெரிய ‘ஜாம்பவான்கள்’ கூட்டமே  ‘மரியான்...மரியான்’ என வேலை பார்த்தது.
ஏகப்பட்ட சமையல் வல்லுனர்கள் ஒன்று கூடி சமைச்சிருக்காங்க.
ஆனா சமைச்சஅவ்வளவு பேரும்,
‘உப்பை அள்ளி போட்டிருக்காங்க’.


‘ஆழி சூழ் உலகு’ என்ற இலக்கியத்தை படைத்த ‘ஜோ டி குரூஸ்’,
தமிழில் உலகசினிமா எடுக்க காத்திருக்கும்
 ‘மாமல்லன் கார்த்தி’ ஆகியோரும்
உப்பை அள்ளிப்போட்ட ஸ்பெஷல் வித்வான்கள்தான்.


மரியானில், ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று பாடல்களை தவிர மீதி அனைத்திலும் தூள் கிளப்பி இருந்தார்.
ஆனால் எல்லா பாடல்களையும் குறிப்பாக நல்ல பாடல்களையும் ,
பரத்பாலா படமாக்கிய விதத்தில்  ‘குற்றுயிராக்கி’ விட்டார்.
அந்தப்பாடல்கள் மரித்த விதத்தை பார்த்து ‘ நொந்து விட்டேன்’.

[ ‘சின்னச்சின்ன மழைத்துளிகளை அருந்தும் சக்கரவாஹத்தை’ கொன்ற  இயக்குனர் ரவி  ‘என் சுவாச காற்றுக்குள்’ வந்தார்.]

இசையில் வித்தை காட்ட,
மரியான்,‘எந்திரனோ’....‘சிவாஜியோ’ அல்ல.

‘நெய்தல்’ படங்களில்,
இசையிலும்,பாடல் வரிகளிலும், பாடகர் குரலிலும்...
உப்புக்காத்து உரசணும்.
கருவாடு கமகமக்கணும்.
மீன் கொழம்பு வாசம்  ‘மிதக்கணும்’.

மரியானில் மூன்று பாடல்களில் மட்டும்,
‘பாடல் வரிகளில் இருக்கும் மண் வாசனை’
இசையில் சுத்தமாக காணாமல் போய் விட்டது.
அந்த மூன்று பாடல்களில்,
‘மண் வாசனை’ சுத்தமாக துடைக்கப்பட்டு ‘பினாயில் வாடை’ அடித்தது.
அந்த மூன்று பாடல்கள்...

# 1.  ஆடாத கால்களும் ஆடும் அய்யா,
எங்க காதோரம் கடல் புறா பாடும் அய்யா ,
வங்காள கரையோரம் வாரும் அய்யா,
எங்க பாய்மர விளையாட்ட பாரும் அய்யா..

கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..

நெத்திலி கொழம்பு வாடை.. ஹே ஹே ஹே..
எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா,
ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்,
சித்தம் குளிர்ந்திடும் போதை அய்யா,


# 2. I Love My Africa
I Love My Africa
Welcome To Africa
I Love My Africa
I Love My Africa
I Love My Africa


# 3. சர்ச் பாடல்.

‘அன்பென்ற மழையில்..அகிலங்கள் நனைய’ இயேசு பிரான்,  ‘மின்சாரக்கனவில்’மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தார்.
இந்தப்படத்தில் வரும்  ‘சர்ச் பாடலை’ கேட்டு,
அவர் தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்டதை
நான் என் இரண்டு கண்களால் பார்த்தேன்.

பின்னணி இசை பற்றி அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.


தனுஷ் நடிப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கமலை பற்றிச்சொல்ல வேண்டும்.
கமல்,16 வய்தினிலே படத்திற்கு பிறகு நடிக்கவேயில்லை.
அந்த படத்துக்கும் அப்புறம், அவரது  கதாபாத்திரம்  ‘சென்னையாக’ இருக்கும்.  ‘சென்னையிலிருந்து’ விலகி,
திருச்சியை தாண்டி...
‘மதுரையாக’ நடித்து...
துருத்தி கொண்டிருப்பதை நான் ‘சிசுவாக’ இருந்து அவதானித்து வருகிறேன்.
எனிக்கு அரிஞ்சி ‘மோகன்லால்’ஏட்டந்தான் நல்லா கப்பக்கிழங்கு அவிப்பார்.
மத்தவங்க அல்லாரும் வேஸ்ட்.

நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு என திகைக்க வேண்டாம்.
பதிவெழுதும் போது கமலை போட்டு சாத்த ‘எனக்கும்’ ஆசை இருக்காதா?
அப்போதுதானே ‘பிர்பால பதிவரு’ ஆக முடியும்.
‘பேஸ்புக்ல லைக் அள்ள முடியும்.
‘கூவல் திலகம்’ பட்டம் வாங்க போட்டி போடுபவர்கள்,
‘நல்லா கூவ முடியும்’.


இந்தப்படத்தை கட்டாயம் தியேட்டரில் பாருங்கள்.
அப்போதுதான் ‘நல்ல சினிமாவை’ அடையாளம் காண முடியும்.


நான் இந்தப்படத்தை ‘கோவை  ஃபன் மால் மல்டிப்ளக்சில்’ பார்த்தேன்.
படம் முடிந்து வரும் போது, மாலில் உள்ள கண்ணாடியில்
என்னை பார்த்தேன்.
எனது பிம்பம் இப்படித்தான் இருந்தது.


மரியானில் ‘மரித்துப்போன’ திரை நுட்பங்களை அடுத்தப்பதிவில் பார்ப்போம். 

Jul 21, 2013

இன்று நடிகர் திலகத்தின் நினைவு நாள்.

நண்பர்களே...
எனது நண்பர்  ஒவியர் ஜீவானந்தன் அவர்கள் ,
 ‘நடிகர் திலக வீரபாண்டிய கட்ட பொம்மனை’ 
ஓவியமாக்கி...காவியமாக்கி இருக்கிறார்.
அவரது விரல்கள் வழியே நடிகர் திலகம் சிலிர்தெழுந்து வந்திருக்கிறார்.
அடடா...அந்த ஓவியத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
எத்தனை நினைவுகள் எட்டிப்பார்க்கின்றன.


கமல் என் சிந்தையில் கலந்தவர் என்றால்,
நடிகர் திலகம் என் ரத்தத்தில் கலந்தவர்.

‘அன்னை இல்லத்தை’ என் கால்கள் என்றுமே மிதித்ததில்லை.
காரணம், நான் நடிகர் திலகத்தின் மீது வைத்திருக்கும் அன்பு என்றுமே ரணமாகி விடக்கூடாது என்ற அச்சமே.


ஆனால் அவரை பற்றிய செய்திகளை திரைத்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொள்வதை கடமையாக வைத்திருக்கிறேன்.

அதில் ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நடிகர் திலகத்தின் ‘நேரம் தவறாமை’ உலகப்பிரசித்தம்.
இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் நடிகர் திலகம்+ சத்யராஜ் காம்பினேஷனில் ஒரு படம்.
வி.ஜி.பி.கோல்டன் பீச்தான் லொக்கேஷன்.
‘சூரிய உதயத்தில்’ படம் பிடிப்பதாக ஏற்பாடு.
சூரிய உதயத்தில் படம் பிடிக்க வேண்டுமென்றால் லொக்கேஷனில் அனைவரும் அதிகாலை 3 மணிக்கே ஆஜராக வேண்டும்.
நடிகர் திலகம் சரியாக 3 மணிக்கு ‘மேக்கப்போடு’ ரெடியாக வந்து விட்டார்.
அப்படி என்றால் அவர்,
ஒரு மணிக்கு எந்திருச்சி...
குளிச்சி...
மேக்கப் போட்டாதான் இது சாத்தியம்.

அவரைத்தவிர யாருமே லொக்கேஷனுக்கு வரவில்லை.
அங்கிருந்த வாட்ச்மேனிடம் ஒரு சேர் கேட்டு வரவழைத்து,
கடற்கரையில் கண்ணை மூடி அமர்ந்து கொண்டார்.
ஐந்து மணிக்கு மேல்தான் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர்.
மணிவண்ணனும், சத்யராஜும் வருவதற்குள்  ‘சூரியன்’ வந்து விட்டான்.

‘பெரிசு இண்ணைக்கு நம்மளை பொளக்கப்போகுது’ என மணிவண்ணனும், சத்யராஜும் அவர் திசைப்பக்கமே தலைக்காட்டாமல் பம்மி கிடந்தனர்.
குழுவில் ஒருவர் சரியாக எட்டு மணிக்குத்தான் வந்து சேர்ந்தார்.

இயக்குனர் மணிவண்ணனை அழைத்து  வரும்படி ஆள் அனுப்பினார்  ‘சிம்மக்குரலோன்’.
 “ எல்லோரும் வந்தாச்சா?”
“ வந்தாச்சு”
 “ படத்துக்கு நீதானே டைரக்டரு.
இன்னைக்கு சூட்டிங் கேன்சல் பண்ணிரு.
நான் நாளைக்கும் மூணு மணிக்கு வந்து விடுகிறேன்.
நீங்க சவுகரியம் போல வாங்க”

அன்று விஜிபி கோல்டன் பீச்சிலேயே ரூம் போட்டு தங்கி விட்டனர் மணிவண்னனும்,சத்யராஜும்.

[இத்தகவலை என்னிடம் சொன்னது,
நான் தயாரித்த தொலைக்காட்சி தொடரை இயக்கிய இயக்குனர் ஜீவபாலன்.
இயக்குனர் ஜீவபாலன், இயக்குனர் மணிவண்னனின் பிரதம சிஷ்யர்.
தப்புக்கணக்கு முதலான சில படங்களை இயக்கியவர்.]

அவரது கருப்பு வெள்ளை படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது
‘படிக்காத மேதை’.
இயல்பான நடிப்பில் அசத்தி இருப்பார்.

நடிகை கண்ணாம்பாவை விதவை கோலத்தில் பார்த்து,
அய்யோ...
என ஓங்கி குரலெழுப்பி ஒப்பாரி வைத்து அழுவார்.
ஓங்கி ஒலிக்கும்அழுகை...
படிப்படியாக சுருதி குறையும்...
பிசிறும்...
குரல் உடையும்...
கம்மும்.

இந்த அழுகைக்கு இணையான நடிப்பை,
உலகில் எந்த நடிகனாலும் தர முடியவில்லை.
இனியும் முடியாது.
சவால் விடுகிறேன்.
செஞ்சு பாருங்க..


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Jul 19, 2013

வாலிப கவிஞருக்கு அஞ்சலி.


வாலி புறப்பட்டு போய் விட்டார்.

மெட்டுக்கு எழுதிய கவிஞனே...

[மன்னவனே அழலாமா?]

துட்டுக்கு ‘புழுகிய’ புலவனே...

[மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! = மு.க.முத்து.]

விகடனுக்கு எழுதிய ‘காவிய நாயகனே’...

போய் வா. 


கவிஞரின் வரிகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ  நந்தலாலா(2)

உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா


உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா


தாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்


நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்


தகினதத ததம்தோம்

ஆடாத மேடை  இல்லை போடாத வேஷம் இல்லை(2)


சிந்தாத கண்ணீர்  இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை


கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)


உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)


பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று


பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)


நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா (உனக்கென்ன மேலே )


________________________________________________________________________




Jul 18, 2013

‘தங்க மீன்களை’ பார்க்க முடியாது.



நண்பர்களே...
‘கற்றது தமிழ்’ ராமின் தங்க மீன்கள்,
ஜூலை 26 திட்டமிட்டபடி வெளியாகாதாம்.
காரணம்...தியேட்டர்காரர்கள் ஒத்துழைக்கவில்லை.
சிங்கம் -2  படத்தின் ‘உடனடி பக்க விளைவு’ இதுதான்.

‘கற்றது தமிழில்’,
 ‘திரை மொழியை’ சரியாக கையாளவில்லை இயக்குனர் ராம்.
இருந்தாலும், ஒரு படைப்பாளியாக ‘ராமை’ ஏற்றுக்கொண்டோம்.
அடுத்தப்படைப்பில் ‘நிச்சயம் எழுவார்’ என எதிர்பார்க்கிறோம் நாம்.

‘தங்க மீன்கள்’ என்ற தலைப்பே எனக்கு,
‘ஜாபர் பனாஹி’ - ‘ஒய்ட் பலூன்’...
The White Balloon \ 1995 \ Iran \ Screenplay by : Abbas Kiarostami \ drected by : Jafar Panahi.



 ‘மஜித் மஜிதி’ -  ‘ஸாங் ஆப் ஸாரோ’  ஆகிய படங்களை ஞாபகப்படுத்தியது.
The Song of Sorrow \ 2008 \ Iran \ Directed by : Majid Majidi.
[ ’சாங் ஆப் ஸாரோ’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தி 
நான் எழுதிய பதிவை காண ...இந்த இணைப்பில் செல்க...]


எதிர்பார்ப்பை  ‘எகிற’ வைத்தது.
 ‘எகிறல்’ அத்தனையும் இன்று வடிந்து மண்ணாகி விட்டது.

 ‘தங்க மீன்களின்’ நிலையை,
இன்றைய தினத்தந்தியில் விளம்பரம் போட்டு...
‘காட்டியிருக்கிறார்’ இயக்குனர் ராம்.


‘திரையரங்குகளில் போதுமான காட்சிகள் கிடைக்காத காரணத்தால் வரும் 26ம் தேதி தங்க மீன்களை வெளியிட இயலவில்லை’ -ராம்.


சிங்கம் 2 வை,  ‘கோவை பன் மாலில்’
ஒரு நாளைக்கு 20 காட்சிகள் திரையிட்டார்கள்.
அத்தனையும் ஹவுஸ்புல்லாக்கி  ‘அழகு’ பார்த்தார்கள்
‘அனுஷ்கா + சூர்யா+ ஹரி ’ ரசிகர்கள்.


தங்கமீன்களை, சிங்கம்-2 மாதிரி...
ஒரே நாளில் 20 காட்சிகள் திரையிட வேண்டாம்.
அட்லீஸ்ட்,
ஒரு நாளைக்கு நான்கு காட்சியாவது  திரையிடலாமே !
அந்த நான்கு காட்சிகளை நிச்சயம் முதல் நாள் ஹவுஸ்புல்லாக்கி இருப்போம்.
[ இயக்குனர் ராமின் ‘கற்றது தமிழ்’,
கோவை செந்தில் தியேட்டரில்... முதல்நாள் - முதல் ஷோ ‘ஹவுஸ்புல்’]

படத்தில் விஷயம் இருந்தால் தொடர்ந்து ஹவுஸ்புல்லாக்கி அழகு பார்ப்போம்.
விஷயம் இல்லையென்றால் ‘ராமை’ விமர்சித்து ‘தோலுரித்து தொங்க விட்டு’  ‘தெளிய தெளிய’ அடிப்போம்.

 ‘சிந்தியுங்கள் மல்டிபிளக்ஸ் நியாயமாரே’.

Jul 17, 2013

‘அனுஷ்காவுடன்’ ஜாலியாக இருக்கிறேன்.



நண்பர்களே...
நேற்று முதல்  ‘அனுஷ்காவுடன்’ ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.
டிசம்பரில் கடையை மூடிய பிறகு,
இன்று வரை எனது நண்பர்கள்தான்...
என் பொருளாதார தேவைகளை பார்த்துக்கொண்டார்கள்.
குறிப்பாக,
 ‘கோவை ஆனந்தாஸ்’ ஹோட்டல் அதிபர்களில் ஒருவரான...‘பரமாத்மா’,


நண்பர் ரகுநாதன்,
நண்பர் விஜய் என அனைவரும் மிகப்பெரிய அளவில் உதவினார்கள்.

திரு.அவினாஷ் என்கிற வட இந்திய நண்பர்,
தொடர்ந்து அவரது நண்பர்களிடம் சிபாரிசு செய்து,
100% அட்வான்ஸ் பணமும் கொடுத்து...
10க்கும் மேற்பட்ட  ‘40’இஞ்ச் சோனி,சாம்சங் டிவிக்களை விற்க வகை செய்தார்.
 ‘நியாயமான லாபமும்’ அடைய வைத்தார்.

மற்றொரு நண்பர்,
தினமும் என்னிடம் போனிலும், நேரிலும் பேசி...
தைரியப்படுத்தி வந்தார்.
நான் சினிமா நிச்சயம் எடுப்பேன் ...என என்னையே நம்ப வைப்பவர்.
[ அவரது பெயரை நான் எந்த சந்தர்பத்திலும் எழுதி,
அவரது  ‘ஆனந்தத்தை’ குலைக்கக்கூடாது என ஆணையிட்டுள்ளார்.]

பதிவுலக நண்பர்களில் ‘கோவை நேரம்’ ஜீவா செய்த உதவி மாளப்பெரிது.


அடிக்கடி அவரது  ‘சிங்கத்தில்’ [ஸ்கார்ப்பியோ ] என்னை ஏற்றிக்கொண்டு சுற்றுவார்.

பெரிய ஹோட்டல்களில் ‘வாங்கி’ கொடுப்பார்.
நட்சத்திர ‘பார்களில்’ மிதக்க வைப்பார்.
இவரை ‘சரத்குமாராக்க’ திட்டமிட்டு உள்ளேன்.

மற்றொரு பதிவர் ‘கோவை ஆ.வி’  என் தாகம் தெரிந்தவர்.


நான் விரும்பும் புத்தம் புது திரைப்படங்களை,
‘மல்டிப்ளக்சில்’ காணச்செய்பவர்.
இவர் கூட,  ‘பைக்கில் பாக்கிஸ்தான்’ வரை கூடப்போகலாம்.
காரில்?

இவர் ஒரு  ‘அனாமிகா’ வைத்திருக்கிறார்.


ஒரு தடவை அதில் பயணம் செய்தேன்
அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
‘இன்சூரன்ஸ்’ பாலிசி  எடுக்கும் எண்ணம்,
தீவிரமாக பீறிட்டு எழுகிறது!

இவர் அமெரிக்காவில் கார் ஓட்டியதாக,
‘நம்ப முடியாத உண்மையை’ சொல்கிறார்.

இவர் வண்டி ஓட்டும் போது,
முன்னாலும்- பின்னாலும்- பக்கவாட்டிலும்...
நூறு மைல் சுற்றளவில்...
எந்த ஒரு வாகனங்களும்,பாதசாரிகளும் வரக்கூடாது.
ஏன்? மேலே விமானம் கூட பறக்கக்கூடாது என ஆசைப்படுகிறார்.
இந்த நியாயமான ஆசையை,
இவரோடு அனாமிகாவில் பயணிப்பவர்கள் உணர்வார்கள்.
’.
[ இவரை என் படத்தில் பாடலாசிரியாராக்குகிறேன் என பொய் சொல்லி இருக்கிறேன்...என் படத்தில் பாடல்களே இல்லை என்ற தைரியத்தில்.]

அமெரிக்காவில் இருந்து பணமும், தைரியமும் கொடுத்த நண்பர் செந்தில்,
எனது ‘உடுக்கை நட்பு’.

 ‘செஞ்சோற்று கடன்’ தீர்க்க,
இவரது பெயரை எனது  ‘கதாநாயகனுக்கு’ சூட்டி விட்டேன்.


இறுதியாக நான் நன்றி கூற நினைப்பது,
தமிழக முதல்வர் ‘அம்மா அவர்களுக்கு’.
விலையில்லா அரிசி வழங்கி என் குடுமபம் பசி தீர்த்த மாதரசி அவர்.
கடந்த நான்கு மாதமாக இந்த அரிசியில்தான் சமையல்.
என்னைப்பொறுத்த வரை இந்த அரிசி தரமாகவே இருக்கிறது.
சமைத்து சாப்பிடும் போது நன்றாகவே இருக்கிறது.
[ கலைஞர் வழங்கிய ஒரு ரூபாய் அரிசியில் சமைத்து சாப்பிட்டதில்லை.
எனவே ஒப்பிட முடியவில்லை.]

என்னைப்போல ஏழைகள்,
எத்தனை பேர்  ‘அம்மாவை’ நன்றியுடன் நினைப்பர்!!!???

இவர்கள் அனைவருக்கும், நான் ஒரு நாளும்...ஒரு உதவி...
செய்தது கிடையாது.
ஏதோ பதிவெழுதி  வருகிறேன்.
சில நல்ல படங்களின் ‘டிவிடிக்களை’ சிபாரிசு செய்து விற்றிருப்பேன்.
அவ்வளவே நான் செய்தது.

மற்றொரு முக்கியமான நன்றி,
என்னை சீண்டி...
‘கடையை’ மூட வைத்த ‘கருந்தேளார்’ அவர்களுக்குத்தான்.
அவர் மேல் ஏற்பட்ட கோபம்தான்,
விரைவில் ஒரு ‘திரைக்கதையை’ எழுதி முடிக்க  ‘உந்து சக்தியாக’ இருந்தது.
‘ஒரு காமெடி வில்லனுக்கு’ ,
அவரது பெயரை சூட்டும் வரை,
‘அந்தக்கோபம்’ பணி புரிந்து...மறைந்தது.
‘எம்.ஜி.ஆர் - கலைஞர்’ போல் அந்த ‘முன்னாள் நட்பு’...
என்றும் ‘அகலாது-நெருங்காது’ தொடரும் என்றே நினைக்கிறேன்.
 [ அவரது மற்றொரு நண்பரின் பெயரை ‘காமெடியனுக்கு’ சூட்டி உள்ளேன்.]
_________________________________________________________________________________


‘முந்தானை முடிச்சு’ பட ஆரம்பத்தின் போது,
இயக்குனர் கே.பாக்யராஜிடம்..  ‘சொல்லாமல் கொள்ளாமல்’
அவரது உதவியாளர்கள் பாண்டியராஜன், ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன் மூவரும் ஒரே நேரத்தில்  ‘சொல்லி வைத்து நின்று விட்டார்கள்’.
அந்தக்கடுப்பில் பாக்யராஜ் முந்தானை முடிச்சு படத்தில்,
தவக்களை கோஷ்டியாக மூன்று பேரை உருவாக்கி...
அதற்கேற்ப காட்சி, வசனங்களை அமைத்து  ‘பழி தீர்த்தார்’.


_________________________________________________________________________________

‘கிளைமாக்ஸ்’ காட்சியை சொல்லி,
இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
எனது ‘இடத்தை’ விற்பதாக,
பதிவெழுதி இருந்தேன் அல்லவா.
‘கமல்ஹாசன் என்னை கோடிஸ்வரனாக்கி இருக்கிறார்’ பதிவை படிக்க இந்த இணைப்பில் செல்க...

எனது இடத்தை விற்ற அனுபவமே ‘ஒரு திரைக்கதை’.
ஒரு ரூபாய் கூட கையில் இல்லாத, காலை வேளையில்...
எனது புரோக்கர் அழைத்தார்.

“ சார், கஷ்டப்பட்டு ஒரு பார்ட்டியை செட் பண்ணி இருக்கேன்.
விலையை  ‘முன்ன பின்ன’ பேசி,
அட்வான்ஸ் வாங்க வேண்டியது... உங்க கையிலதான் இருக்கு”.

எனது  ‘அனுஷ்காவை’ திறந்து பார்த்தேன்.
 கொஞ்சம் பெட்ரோலை வைத்திருந்தாள்.
 ‘பேச்சு வார்த்தை’ நடக்கும் இடத்துக்கு போய் விடலாம் என நம்பிக்கையூட்டினாள்.

மனதளவில் எந்த விலைக்கும் விற்க தயாராக இருந்தேன்.
எனது புரோக்கர்களாக,
மூன்று புரோக்கர்கள் காத்திருந்திருந்தார்கள்.
எனக்கு, எனது புரோக்கராக... ஒருவரை மட்டுமே தெரியும்.
எனக்கு தெரியாமலே, எனக்காக இன்னும் இரண்டு பேர் செயல்பட்டிருக்கிறார்கள்.
ஆக மொத்தம் இப்போது மூன்று பேர்கள்.

‘இவர் மூலமாக அவர் - அவர் மூலமாக இவர்’ என இவர்கள்
ஒரு சங்கிலித்தொடர் போல செயல்பட்டு வியாபாரம் செய்கிறார்கள்.
இவர்கள்தான் விலையை தீர்மானிக்கிறார்கள்.
இட்ம் வைத்திருப்பவரோ...வாங்குபவரோ அல்ல.
இவர்கள் வெகு அழகாக நம் ‘மைண்ட் செட்’ செய்கிறார்கள்.

அனைவரும் ‘பார்ட்டிக்காக’ ஒரு டீக்கடையில் காத்திருந்தோம்.
‘டீ..சாப்பிடலாமே’ என்றார் ஒரு புரோக்கர்.
பகீரென்றது.
எதிர்பாராத இந்த  ‘திடீர் செலவை’ நான் எதிர்பார்க்கவில்லை.
‘ பேஸ்மெண்ட் வீக்கா இருந்தாலும்...படு ஸ்ட்ராங்கா இருப்பது போல்’
ஒரு ரியாக்‌ஷனை எனது முகத்தில் தவழ விட்டேன்.
ஒரு இயக்குனருக்கு ‘இந்த மாதிரி’ நேரத்தில்தான் நடிக்க வருகிறது.
டீ வந்தது.
பில் வருவதற்குள் ‘டீக்கடை’ பையனை ஒரு லுக் விட்டேன்.
லுக் = “ ஒரு ரூபா கூட எங்கிட்ட கிடையாது’.
‘லுக்’ வேலை செய்தது.
பார்ப்பதற்கு வசதியானவர் போல இருந்த ‘புரோக்கரிடம்’ பில்லை நீட்டினான்.
நான் செல்போனை டயல் செய்து,  ‘அலோ...அலோ’ என நகர்ந்து விட்டேன்.
‘டீ கூட வாங்கிக்கொடுக்காத கஞ்சப்பிசினாறி’ என என்னை மனதில் திட்டிக்கொண்டே பில்லை கொடுத்திருப்பான் அந்த புரோக்கர்.

 ‘பார்ட்டியும்’ ஒரு புரோக்கருடன் வந்தான்.
 ‘பார்ட்டியை’ பார்த்தால் ‘ந.கொ.ப.கா -பக்ஸ்’ மாதிரி இருந்தான்.
அவனது புரோக்கர்,
‘அனைத்திற்கும் ஆசைப்பட்ட ஈஷா சாமியார் போல்’ இருந்தார்..
தொடக்க உரையாக என்னமோ பேசினார்கள்.
எதுவுமே என் மூளையில் ஏறவில்லை.
 இறுதியாக ஒரு தொகையை சொன்னார்கள்.
நான்  ‘தயாராக வைத்திருந்த’,
எனது டயலாக்கை சொன்னேன்.

“ ஓ.கே”
“டோக்கன் அட்வான்ஸ் மட்டும் இருபதாயிரம் ரூபாய் வேண்டும்.
எனக்கு அது செண்டிமெண்ட்” 

எனது ‘உடனடி பசிக்கு’ அது போதும்.
ஆனால் அவன் செக்காக கொடுத்தான்.

செக் கிடைத்த சந்தோஷத்தில்,
‘அனுஷ்கா’ பெட்ரோல் இல்லாமலேயே சந்தோஷமாக ஓடினாள்.
செக்கை பேங்கில் பிரசண்ட் செய்து விட்டு,
நண்பர் ஒருவரிடம் ஐநூறு ரூபாய் கடனாக பெற்று
‘அனுஷ்கா’ பசியை ஆற்றினேன்.

எனக்கு தெரிந்த வங்கி நண்பர்கள் அனைவரிடமும்,
தகவல் சேகரித்தேன்.
அவர்களது அறிவுரையின்படி, சரியான நேரத்திற்கு,
ஏ.டி.எம்மில் பணம் எடுக்கப்போனேன்.
என் அக்கவுண்டில்  பேலன்ஸ் 90 ரூபாய் மட்டுமே இருக்கிறது...
என சத்தியம் செய்து... பிரிண்டடித்து... கொடுத்தது.
ஆக,‘செக் கிரிடிட்’ ஆகவில்லை.
அடுத்த நாள் காலையிலும் பார்த்தேன்.
ஆகவில்லை.
 ‘செக் ரிடர்ன் ஆகி விட்டது’ என நிச்சயமாக தெரிந்தது.
பார்ட்டிக்கு போன் செய்தேன்.

அவனும் அவனது வங்கியை விசாரித்து உறுதி செய்து விட்டு வருவதாக கூறினான்.
அவன் மேல் நம்பிக்கை இழந்து,
கோவை நேரம் ஜீவாவுக்கு போன் செய்தேன்.

 “அவசரமாக ஐயாயிரம் ரூபாய் தேவை”

 “எங்கே இருக்கிறீர்கள்”

 “சரவணம்பட்டி”

 “அங்கேயே இருங்கள்.
15 நிமிடத்தில் வருகிறேன்”.

‘இல்லாதவன் இருக்கும் இடம் தேடி... உதவும் என் ஞானத்தங்கம் ஜீவா’ 
குன்றாத ஆரோக்கியம், வளரும் ஐஸ்வர்யம் பெற்று... 
என்றும் ‘ஏகப்பட்ட பத்தினிகளுக்கு விரதனாக’ வாழ வாழ்த்துகிறேன்.

பார்ட்டியும் போன் செய்தான்.
 “ என்ன காரணத்தாலோ செக் ரிடர்ண் ஆகியிருக்கிறது.
உடனே ‘கேஷ்’ கொண்டு வருகிறேன்”.

உடனே டீக்கடைக்குள் புகுந்து,
டீயும்,பப்சும் சாப்பிட்டேன்.
பில் வந்தது.

“ பொறுங்க தம்பி...நண்பர் வந்து கொண்டிருக்கிறார்”

 ‘கோவை நேரம்’ ஜீவாவை காணவில்லை.

“அடடா...நம்ம சிங்கம்... 
ஏதாவது அம்மணியை பாலோ செய்து போய் விட்டதா ? ”

கவலையில், ஆசனவாயிலில்... 
ஆர்.டி.எக்ஸ் ஓன்று வெடிக்கத்தயாரானது.

டீக்கடைக்காரன் என்னை,  
‘டேபிள் க்ளீன் பண்ண ஆள் கிடைத்து விட்டது’ போல 
என்னை ‘குறுகுறுவென’ பார்த்தான்.

‘அப்பாடா... ‘ஜீவாவின் சிங்கம்’ வந்து விட்டது’.
இந்த ‘திரில்லர் கதை’ முடிவுக்கு வந்து விட்டது.

பார்ட்டி வந்து பணம் கொடுத்தது...
இன்னும் தரவிருப்பது...
இனி எதுவுமே ‘இந்த திரில்லர்’ கதைக்கு உதவாது.
இனியெல்லாம் சுபமே.

அனுஷ்கா =


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.




Jul 15, 2013

AMEN - ஆடுவோமே... பள்ளுப்பாடுவோமே... ஆனந்தமா... சுதந்திரமா... கொல்வோமே!


நண்பர்களே...இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்.
அவர் ஆட்சிக்காலத்தில் போட்ட நலத்திட்டங்கள்தான்
தமிழ்நாட்டை இன்றும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
அவருக்கு பின்னால் வந்த அனைவருமே ஹிட்லர் வாரிசுகள்.
ஹிட்லர் யூதர்களை அழித்தான்.
இவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை அழித்து வருகிறார்கள்.
இதில் ஒருவர், ஹிட்லருக்கே கற்றுக்கொடுக்கும் கலைஞராக வளர்ந்து விட்டார்.

மதுவை ஊற்றிக்கொடுத்து தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே ஊற்றி மூடி விட்டார்கள்.
கல்வியை வியாபாரமாக்கி ஏழைகள் கண் முழியை பிதுக்கி விட்டார்கள்.
குடிநீர்,மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் நாட்டையே முடமாக்கினார்கள்.
இலவசம் என்ற பெயரில் மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து,
இலஞ்சத்தை  ‘நாட்டுடமை’  ஆக்கி விட்டார்கள்.

வாருங்கள்...
நாற்றமெடுத்த தமிழக அரசியலை விட்டு விட்டு...
‘ஆமெனுக்குள்’ செல்வோம்.


AMEN \ 2002 \ German, Romanian, French \ Directed by : Costa - Gavras \ Part - 4

 'உலக நாடுகள் சங்கத்தில்',
‘யூத முத்துக்குமார்’ தற்கொலை செய்ததை பார்த்தோம்.
அதிர்ச்சியில் உறைய வைத்த அக்காட்சி,
‘ஆடம்பர பிரச்சார ஊர்வலத்தில்’ கரைந்து விடுகிறது.
‘பப்பரப்பாங்’ என பிரமாண்ட பேண்ட் வாத்தியங்கள் முழங்க,
அதற்கு பிரம்மாண்ட நாஜிக்கொடிகள் தலையசைத்து ஆட,
சிறுவர்களும் சின்னஞ்சிறு கொடியை தூக்கி ஊர்வலத்தை எதிர் கொண்டு, ஆடிக்கொண்டு... கும்மாளமிட்டு ஓட,
மக்களை மதி மயக்கும் உற்சாக காட்சியாக உருவெடுக்கிறது.


_________________________________________________________________________________

நாஜிக்கொள்கைகளை அப்படியே பின்பற்றினார்கள் நம் அரசியல் வியாதிகள்.
இது போன்ற  ‘ஊர்வலம்’ கான்செப்டை,
 ‘கருந்தேள் பாணியில்’ சொல்வதென்றால்,
ஊர்வலத்தை  ‘காப்பியடித்து’...
‘பிரம்மாண்ட பேரணி’ என்ற படத்தை உருவாக்கினார்கள் திராவிடக்கட்சிகள்.
அட..கொடியைக்கூட ‘நாஜிக்கொடியில்’ இருந்துதான் உருவாக்கினார்கள் போலும்.


_________________________________________________________________________________

ஊர்வலத்தை மெய்மறந்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்
‘மன வளர்ச்சியில்லாத’ சிறுவர்கள்,சிறுமிகள்.
அவர்களை அங்கிருந்து அகற்றி,
வரிசையாக நிற்க வைக்கிறார்கள் ‘கன்னியாஸ்த்ரீகள்’.


அங்கே ‘சிரித்த முகத்துடன்’ கருணை வழிய ஒரு டாக்டர் அனைவரையும்
தேர்வு செய்கிறார்.
எதற்கு? 

இந்த டாக்டர் முகத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இவரை வைத்துதான் கிளைமாக்சை அமைத்திருக்கிறார்
இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.

‘அதாண்டா...இதாண்டா...அருணாச்சலம் நாந்தாண்டா...’
என ஆர்ப்பாட்ட அதிரடிகள் இல்லாமல்,
வெகு சாதாரணமாக ஒரு டெய்லர் முகாமில் அறிமுகம் செய்யப்படுகிறார் படத்தின் ஹீரோ ‘கர்ஷைன்’.


தனது அளவுக்கேற்ப தைக்கப்பட்ட ஆடையை போட்டு ‘டிரையல்’ பார்க்கிறார் கர்ஷைன்.
‘ஹிட்லர் பாணி’ ராணுவ சல்யூட் வைக்க சொல்கிறான் டெய்லர்.
ஒப்புக்கு சப்பாணியாக ‘அரைகுறை’ சல்யூட் வைக்கிறார் கர்ஷைன்.
அந்த சல்யூட்டில் திருப்தியில்லாத டெய்லர்,
அதே சல்யூட்டை பவர்புல்லாக செய்து காட்டுகிறான்.


அவனை பின்பற்றி ‘சல்யூட்’ செய்கிறார்.
 ‘அக்குள்’ பகுதியில் ‘கிழிந்து விடுகிறது’.

ஒரே காட்சியில்...
# 1 . ‘ஹிட்லர் பாணியை பின்பற்ற விருப்பமில்லாத ஜெர்மானியன்.
# 2. ஹிட்லர் பாணியை வேத வாக்காக கடைப்பிடிக்கும் ஜெர்மானியன்.
# 3.ஹிட்லர் பாணியை கடைப்பிடித்தால் ‘கிழிந்து விடும்’.
என ‘சட்டையர்’ செய்த காஸ்டா கவ்ராஸை,
‘இயக்குனர் இமயம்’ என கொண்டாடியது சரிதானே!


‘கர்ஷைன்’ ஒரு நிஜ ஹீரோ.
இவரைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால்,
‘ஆமென்’ திரைப்படத்தை முழுமையாக உள்வாங்க உதவும்.
ஜெயமோகன் பாணியில்,
ஆமென் திரைப்படத்தின் ‘உள்ளொளியை’ தரிசிப்பீர்கள்.
எனவே கர்ஷனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் செல்க...

மனநலம் வளர்ச்சியில்லாத குழந்தைகள் கதியை பார்க்க,
‘கல் நெஞ்சத்தோடு’ வாருங்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.