Showing posts with label சென்னை திரைப்பட திருவிழா. Show all posts
Showing posts with label சென்னை திரைப்பட திருவிழா. Show all posts

Jan 3, 2016

சென்னை திரைப்பட திருவிழா 2016.

நண்பர்களே...
சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை,
நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார்.
கீழ்க்கண்ட இணைப்பில் செல்க...

http://www.kovaiaavee.com/2015/12/recommendations-for-chennai-film.html

நண்பர் எழுத்தாளர் விஸ்வாமித்ரன் அவர்கள் ‘கேரள திரைப்பட திருவிழாவில்’ கலந்து கொண்டவர்.
அவரது பரிந்துரை இதோ...
https://web.facebook.com/notes/viswamithran-sivakumar/iffk-2015/10153727675679536

https://web.facebook.com/notes/viswamithran-sivakumar/iffk-2015/10153727675679536

https://web.facebook.com/notes/viswamithran-sivakumar/iffk-2015/10153727730444536
 
வாருங்கள்...
காவியங்களை காண்போம்.

Dec 22, 2013

சத்துணவு திட்டம் = திரைப்பட விழா.


நண்பர்களே...
 ‘நொள்ளை...நொட்டை’ சொல்லி  ‘சென்னை திரைப்பட விழாவை’  ‘மங்களம்’ பாட நினைக்கவில்லை.
 ‘சென்னை திரைப்பட விழாவை’...மேலும் முன்னெடுத்துச்செல்ல எனக்குத்தோன்றிய சில கருத்துக்களை முன் வைக்கிறேன்.


நாம் இந்த விஷயத்தில்... ‘கேரள திரைப்பட விழாவை’  ‘காப்பியடிக்கலாம்’.
நல்ல விஷயத்தை காப்பியடிக்கலாம்...தப்பில்லை.
 ‘கேரள திரைப்பட விழாவை’ நடத்துவது...
கேரள அரசுக்கு சொந்தமான ‘கேரளா ஸ்டேட் சலச்சித்திர அகடமி’.
அதைப்போன்று,
‘தமிழ்நாடு அரசு திரைப்பட கழகம்’ என ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.
‘தமிழ் நாடு அரசு திரைப்பட கழகம்’ ‘திரைப்பட விழாவை’ நடத்த வேண்டும்.
‘அரசு’ நினைத்தால் சாதிக்க முடியும்.
உதாரணம்...கலைஞர் கோவையில் கூட்டிய ‘உலகத்தமிழ் மாநாடு’.
ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களை திரட்ட முடிந்ததற்கு காரணம்...
அந்த விழா...தமிழக அரசு நடத்திய விழா.

உலகத்தமிழ் மாநாடு...
அண்ணா நடத்தினார்.
எம்ஜியார் நடத்தினார்.
ஜெயலலிதா நடத்தினார்.
கலைஞர் நடத்தினார்.
ஒவ்வொரு விழாவிலும் குறைகள் சொல்லப்பட்டது.
இருந்தாலும்  ‘உலகத்தமிழ் மாநாடு’...
அவரவர்கள் காலத்தில் சிறப்பாகவே நடத்தப்பட்டது.
இனி வரும் ஆட்சியாளர்களும்,
ஏற்கெனவே நடந்த விழாக்களை முன் மாதிரியாக கொண்டு தன் காலத்தில் இன்னும் சிறப்பாக நடத்த முன் வருவார்கள்.
இதைப்போலவே ‘சென்னை திரைப்பட விழா’ வருடா வருடம் தமிழக அரசால் கொண்டாடப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு  ‘தலையெழுத்து’ உண்டு.
ஜெயலலிதா கொண்டு வருவதை,  ‘அம்போ’ என கலைஞர் விட்டு விடுவார்.
கலைஞர் கொண்டு வந்ததை ஜெயலலிதா விட்டு விடுவார்.
ஆனால் யாருமே கை விட முடியாத திட்டம்...சத்துணவு திட்டம்.
சத்துணவு திட்டம் போலவே ...
‘திரைப்பட விழாவை’ கொண்டாடும் திட்டமும் அமைய வேண்டும்.

காமராஜர்  ஏழை பள்ளி மாணவர்களுக்காக ‘மதிய உணவு திட்டத்தை’ கொண்டு வந்தார்.
எம்ஜியார் அதை மேலும் விரிவு படுத்தி,
‘சத்துணவு திட்டமாக’ வடிவமைத்து மேம்படுத்தினார்.
கலைஞரும்... ‘சத்துணவு திட்டத்தை’  ‘முட்டை’ வழங்கி முன்னெடுத்துச்சென்றார்.
ஜெயலலிதா இன்னும் அதை விரிவு படுத்தி உள்ளார்.
 ‘சத்துணவு திட்டத்தின்’ நீட்சியாகத்தான்,‘கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார்.
ஆக இன்று வரை, ‘சத்துணவு திட்டம்’  ‘மேலும் மேலும்’ முன்னெடுக்கப்பட்டு முன்னேறி வருகிறது.
பயன் தருகிறது.

அரசு நினைத்தால், சாதிக்க முடியும்.
மக்களை ‘படிக்க வைக்கலாம்’.
நல்ல சினிமாவை ‘பார்க்க வைக்கலாம்’.

தமிழக அரசு,‘ சென்னை திரைப்பட விழாவை’ எடுத்து நடத்த ஆன்றோர்களும்...சான்றோர்களும் முயற்சிக்க வேண்டும்.
‘முயற்சி’ திருவினையாகட்டும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Dec 21, 2013

சென்னை திரைப்பட விழா- ஆபத்தான அபத்தங்கள்.


நண்பர்களே...
30 நாட்களுக்குள் மூன்று திரைப்பட விழாக்களை காணும் பாக்கியம் கிடைத்தது.
30 நாடுகளை சார்ந்த 80 திரைபடங்களை கண்டேன்.
இந்த அரிய வாய்ப்பை நல்கிய கோவா, கேரளா, சென்னை திரைப்பட விழாவிற்கு நன்றி.

இணையத்திலேயே இன்று படங்கள் எளிதாக கிடைக்கும் போது,
திரைப்பட விழாவில் படங்களை சென்று பார்ப்பதில் என்ன பயன் என்ற நியாயமான கேள்வி எழும்.
தினமும் வீட்டில் சாமி கும்பிட்டாலும்,
திருவிழா நாட்களில் கூட்டத்தோடு நெருக்கி அடித்து கோவிலில் சாமி கும்பிடப்போகிறோமே...எதற்காக?
பக்தர்களுக்கு, அது ஒரு அனுபவம்...கொண்டாட்டம்.
உலக சினிமா ரசிகர்களுக்கு அத்தகைய அனுபவத்தை...கொண்டாட்டத்தை அளிப்பது திரைப்பட விழாக்களே!

கோவா, கேரள திரைப்பட சாதக, பாதகங்களை தனிப்பதிவாக்குகிறேன்.
இப்பதிவு சென்னை திரைப்பட விழா பற்றி மட்டுமே!
கோவா திரைப்பட திருவிழா மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இருபது கோடிக்கு மேல் செலவழித்து கொண்டாடப்படுகிறது.
கேரள திரைப்பட விழாவை கேரள அரசே பத்து கோடிக்கு மேல் செலவழித்து கொண்டாடுகிறது.
சென்னை திரைப்பட விழா, ‘தனியார் அமைப்பு’ ஒன்றினால் தொடர்ந்து 11 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
நிச்சயம் இந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக எந்த பலனும் இருக்காது.
இதற்காக பல மாதங்கள் உழைத்து இந்த விழாவை நடத்துகிறார்கள்.
 திரு.தங்கராஜ் என்பவரது தலைமையில் ‘இந்தோ சினி அப்ரிசியேசன் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பே இந்த சிறப்பான பணியை செய்து வருகிறது.
இவர்கள் இல்லையென்றால் தமிழ் நாட்டுக்கு  ‘திரைப்பட விழா’ என்ற நாதியே இருக்காது.


‘உழக்கில் கிழக்காக’ ஆதிக்க அரசியலும் இந்த திரைப்பட விழாவில் நுழைந்து விட்டது.
தலித் அரசியலை கலையுணர்வோடும்...காவியத்தன்மையோடும் சொன்ன     ‘Fandry' [ பன்றி ] என்ற திரைப்படம் இந்த வருட விழாவில் திரையிடப்படாதது மன்னிக்க முடியாத குற்றம்.
இந்த குற்றத்தை செய்த ‘மசாலா மண்டைகள்’ உருவாக்கும் மசாலா படங்கள் மண்ணைக்கவ்வட்டும் என மண்ணை வாரி தூற்றி சாபம் கொடுக்கிறேன்.

தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் ‘சில சில்லறை காசுகளை’ விட்டெறிந்து
கருணை காட்டி வந்தது.
இந்த ஆண்டும் மிகப்பெரிய தொகையாக ‘பத்து பைசாவை’ வாரி வழங்கி பெருமை சேர்த்துக்கொண்டது.

இத்தனை ஆண்டுகள் இந்த திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டும் தீவிரமான உலக சினிமா ரசிகர்கள் சென்னையில் உருவாகவே இல்லை.
பாலியல் காட்சிகளுக்காகவும்... ‘தங்க மீன்கள்’ போன்ற நெஞ்சை நக்கும் ‘கண்ணீர் காவியங்களை’ பார்க்கவே அலை மோதுகிறார்கள்.

உயர்ந்த ரசனை உள்ளவர்களால் மட்டுமே உள் வாங்கக்கூடிய ‘த மிஸ்ஸிங் பிக்ச்சரை’ முப்பது பேர் மட்டுமே பார்த்து இருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில் ஒரு  ‘சத்யஜித்ரே’...ஒரு  ‘ரித்விக் கட்டக்’ உருவாகி,
‘தமிழ் உலக சினிமாவுக்கு’ எங்கிருந்து ‘சாப விமோசனம்’ கிடைக்கும்?

கோடம்பாக்கத்தில் மசாலா படங்களை உருவாக்கும்  ‘மந்திரவாதிகள்’ பலரை இந்த விழாவில் பார்த்தேன்.
அத்தைகைய படங்களில் பணியாற்றும் உதவி இயக்குனர்களையும் இவ்விழாவில் கண்டேன்.
இவர்கள் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே!
கொடுமை.
புருவத்தை நெறிக்கிறது...நெஞ்சை நிமித்துறது...தோளை தூக்குறது...
இவனுங்க அட்டகாசம் தாங்கல!
இது போன்ற  ‘அராஜக ஆசாமிகளை’ கோவா...கேரளா திரைப்பட விழாக்களில் காண முடிவதில்லை.

சென்னை திரைப்பட விழாவில் நிறைய  ‘அம்பானிகள்’, ‘பில்கேட்ஸ்கள்’ கலந்து கொண்டார்கள்.
அவர்களது செல்போன்கள் இடையறாது ஒலித்து ‘தங்கள் இருப்பை’ தெரிவித்தன.

சென்னை திரைப்பட விழாவிற்கு  ‘அனுப்பப்படும்’ தமிழ் சினிமாக்களை மட்டும் திரையிட்டு அதில் ஒன்றை தேர்வு செய்து ‘சிறந்த படமாக’ அறிவிக்கும் காமெடியும் தொடர்ந்து நடைபெறுகிறது.
கேரள திரைப்பட விழாவில் உலகின் பல பாகங்களில் இருந்து வருகின்ற உலக சினிமாக்களோடு ‘மலையாள சினிமாவை’ மோத விடுகிறார்கள்.
என்றாவது ஒரு நாள் மலையாள சினிமாவுக்கு நிச்சயம்  வெற்றி கிட்டும்.

சென்னை திரைப்பட விழாவில் தமிழ்ப்படங்கள் மட்டுமே  ‘போட்டியில்’ கலந்து கொள்ள முடியும்.
எனவே போட்டிக்கு  ‘அன்னக்கொடி’... ‘தங்க மீன்கள்’ போன்ற  ‘திராபைகளே’  ‘திருவிழவில்’ அணி வகுத்து வருகின்றன.
எல்லாமே ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’.
இந்த ‘அபத்த போட்டியின் ஆபத்தை’ உணர்ந்த கமலும், மிஷ்கினும் தங்கள் படைப்புகளை அனுப்பவேயில்லை.
அவர்களுக்கு நன்றி.
தங்க மீன்களிடம் தோற்ற ‘பரதேசிக்கு’ ஆழ்ந்த அனுதாபங்கள்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Dec 12, 2013

சென்னை திரைப்பட திருவிழா!




நண்பர்களே...இன்று சென்னை திரைப்பட திருவிழா துவங்க இருக்கிறது.
இந்த வருடம், சென்னை திரைப்பட திரு விழா படங்களின் பட்டியல் மிகச்சிறப்பாக இருக்கிறது.

நான் கோவா, கேரள திரைப்பட விழாக்களில் பார்த்து வியந்த படங்கள் இப்பட்டியலில் இருக்கிறது.

‘பார்க்க கொடுப்பினை இருப்பவர்கள் இப்படத்தை பார்க்க கடவது’ என சாபம் கொடுக்கிறேன்.

கீழ்க்கண்ட பன்னிரெண்டு படங்களும் உலக சினிமா பிரிவில் உள்ளது. 

1. Young and Beautiful |Francois Ozon |France
2. Harmony Lessons | Emir Baigazin | France-Germany-Kazakhstan
3. The Missing Picture | Rithy Panh | Cambodia-France
4. Two Mothers | Anne Zohra Berrached | Germany
5. What they don't talk about when they talk about love | Mouly Surya | Indonesia
6. Blue is the Warmest Colour | Abdellatif Kechiche | France

7.WALESA, MAN OF HOPE | Andrzej Wajda | Poland
8.LIFE FEELS GOOD | Maciej Pieprzyca | Poland
9.Mother I Love you | Janis Nords | Lativa
10.Ilo Ilo | Anthony Chen | Singapure
11.The Past (Le passé) | Asghar Farhadi | France | Italy
12.Like Father, Like Son | Hirokazu Koreeda | Japan


இந்தப்படங்களை கட்டாயம் பார்த்து விடுங்கள்.
லைக் பாதர்...லைக் சன்...என்ற படத்திற்கு ஏற்கெனவே பதிவெழுதி இருக்கிறேன்.
இன்னும் சில படங்களுக்கு சிறிய அறிமுகம் தருகிறேன்.



LIFE FEELS GOOD [ Chce Sie Zyc ] | 2013 | Maciej Pieprzyca | Poland

கோவா திரைப்பட திருவிழாவில் இப்படம் முடிந்தவுடன் உலக சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று ஐந்து நிமிடம் தொடர்ச்சியாக கை தட்டி ’அரபிக்கடலை’ அடக்கினார்கள்.
ஒருவர் இயக்குனரை கட்டித்தழுவி முத்தமிட்டார்.
அப்போது பட இறுதி வரும் டைட்டில் காட்சியில்,
படத்தில் நடித்த நடிகரையும்...இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் ‘ஒரிஜினல் கதாபாத்திரத்தையும்’ ஒருங்கே இருக்கும் காட்சியை கண்டதும் மீண்டும் அரங்கம் கை தட்டல் ஒலியால் அதிர்ந்தது.
அதற்கு மேலாக ‘விசில் சப்தம்’ விண்ணை முட்டியது.




இச்சம்பவம் அடுத்த நாள்  ‘நவ்ஹிந்த் டைம்ஸ்’ பத்திரிக்கையில் செய்தியாக வந்தது.
‘இந்திய ரசிகர்கள் உலக சினிமாவை விசிலடுத்து கொண்டாடுகிறார்கள்’ என்ற செய்தியே பிரதானம்.

சென்னையில் எழும் விசில் அலை, வங்காள விரிகுடாவை விரிவடையச்செய்யும் என்பதில் ஐயமில்லை.
‘தெய்வத்திருமகள் கோஷ்டியினர்’ காப்பியடிப்பார்கள் என்ற அச்சமிருக்கிறது.


நவ்ஹிந்த் டைம்ஸ் பத்திரிக்கை செய்திக்கான இணைப்பு இதோ... 

http://www.navhindtimes.in/iffi-2011/loud-whistles-india-s-way-applauding-good-movies

In Bloom | 2013 | Georgia | Directed by : Nanna Ekvtimishvili & Simon Gross.

இரு பள்ளி மாணவிகளுக்கு இடையே இருக்கும் நட்பின் ஊடாக தற்போதைய ஜார்ஜிய அரசியல், சமூக சூழலை சொல்கிறார் இயக்குனர்.

இப்படத்தில் வரும் ‘இரண்டு பெண்களில்’ ஒரு பெண் ‘மூடர் கூடத்தில்’ வரும் சிறுமியின் '14 வய்து’ தோற்றத்தை பிரதிபலிக்கிறாள்.
மிகவும் ஜாலியான படம்.



The Missing Picture | 2013 | Cambodia | Directed by Rithy Panh

உலக சினிமா ரசிகர்களுக்கு, இந்தப்படம் மிக...மிக முக்கியமானது.
களிமண் பொம்மைகளை வைத்தே படம் பண்ணி இருக்கிறார்.
பின்புலமாக கம்ப்யூட்டர் காட்சிகளை வைத்து இருக்கிறார்.
சில இடங்களில் ஆவணப்படங்களை வைத்து இருக்கிறார்.
கம்போடிய அரசியல் சரித்திரத்தை வாரி வழங்கி இருக்கிறார் இயக்குனர்.
இப்படத்தை கட்டாயம் பாருங்கள்.
பிடித்தால் பாராட்டுங்கள்.
பிடிக்கவில்லையென்றால் திட்டுங்கள்.
பார்த்து விடுங்கள்...அதுதான் முக்கியம்.


Young and Beautiful [ Jeune & Jolie ] |Francois Ozon |France

இந்தப்படத்தில் சூடான உடலுறவுக்காட்சிகள் கவித்துவமாக இருக்கிறது.
படம் முடிந்து வெளியில் வ்ரும் போது அவைகள் உங்கள் நினைவில் இருக்காது.
உடலுறவுக்காட்சியை தாண்டி வேறு விஷ்யங்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்து இருக்கும்.
இந்த இயக்குனரின் எல்லா படங்களிலும் இந்த ‘மேஜிக்தான்’ நடக்கும்.


Mother I Love you | Janis Nords | Lativa
ஒரு சிறுவன் கட்டுப்பாடுகளை மீறி...
காட்டாறாக ஓடி விளையாடும் கொண்டாட்டங்களின் ‘அழியாத கோலங்கள்தான்’ இப்படம்.



Ilo Ilo | Anthony Chen | Singapure

அற்புதமான ‘பீல் குட் மூவி’.
வேலைக்காரிக்கும்...அவளை வேலைக்கு வைத்திருக்கும் குடும்பத்துக்கும் உள்ள உறவை மிக யதார்த்தமாக அணுகி இருக்கிறது இப்படம்.
கான் திரைப்பட விழாவில் பரிசு பெற்ற படம்.
கோவா, திருவனந்தபுரம் திரைப்பட திருவிழாக்களில் திரையிடப்பட்ட சில படங்கள் எனக்கு சுத்தமாகப்பிடிக்கவில்லை. 

அதில் சில படங்கள் சென்னை திரைப்பட விழாவிற்கும் வருகிறது.
அந்தப்படங்களை பார்ப்பதும்...பார்க்காததும் உங்கள் விருப்பம்.


1. Vara, A Blessing | Bhutan | 2013 | Directed by : Khyentse Norbu

மிகவும் போலியான படம்.
படத்தின் உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது.
இந்தியாவில் எந்த கிராமத்தில் அனைவரும் ஆங்கிலம் பேசுகிறார்கள்?
தலித் மக்கள் அனைவரும் ஆங்கிலம் பேசும் அதிசயம் இப்படத்தில் இருக்கிறது.
கதைக்களமும் புதிது அல்ல.
தேஞ்சு போன ‘தேவதாசி’ கதைதான்.

2. Stray Dogs | Taiwan | 2013 | Directed by Ming-Liang-Tsai

முதல் ஷாட்டே மூணு நிமிடம்.
படிப்படியாக அதிகரித்து கொண்டு வந்து படத்தின் கடைசி ஷாட்டை பத்து நிமிடத்தில் முடித்தார் இயக்குனர்.
உதாரணமாக ‘நமீதா’ மார்பை விட நாலு மடங்கு பெரிதான ஒரு ‘ அழுகிய முட்டைகோஸை’ ஒருத்தன் சாப்பிட்டு முடிப்பதை காமிரா ஆடாமல் அசையாமல் காட்டிக்கொண்டு இருந்தது.
இக்காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கும் போது நிஜமாகவே எனக்கு ‘வயிற்றை கலக்கி விட்டது’
எந்திருச்சி  'மலஜலக்கூடம்’ சென்று, நிதானமாக...பொறுமையாக வந்தேன்.
அப்போதும் அவன் முட்டைகோஸை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
இருந்தும் இப்படத்தை இறுதி வரை என்னால் பார்க்க முடியவில்லை.
கடைசி ஷாட் 9நிமிடம் 59 செகண்ட் ஓடும் போது வெளியேறி விட்டேன்.
இன்னும் ஒரு செகண்ட் பொறுமையாக இருந்திருந்தால்,
முழு படத்தை பார்த்த பாக்கியவானாக இருந்து இருப்பேன்.

நான் மட்டும் தாய்வானில் ஆட்சி செய்து கொண்டு இருந்தால் ‘உலக சினிமா வதை சட்டம்’ கொண்டு வந்து இந்த இயக்குனரை ஆயுளுக்கும் படமெடுக்க முடியாதபடி செய்து விடுவேன்.

3. My Sweet Pepper Land | 2013 | Irag | Directed by : Hinker Saleem

கடல், தங்க மீன்கள், மரியான் போன்ற படங்களை ரசித்தவர்கள் இப்படத்தை தவறாமல் பார்த்து விடுங்கள்.
உங்களுக்கான படம் இது.

ஒரு கிராமத்தில் ஒருவன் அநியாயம் செய்து கொண்டு இருக்கிறான்.
அதை தட்டிக்கேட்க ஒருவன் வருகிறான்.
இப்படி ஒரு கதையை தமிழ் சினிமா இது வரை ‘ஒரு தடவை’ சொல்லி இருக்கிறதா?

படத்தின் இறுதிக்காட்சியில் ‘பம்பாய்’ படத்தில் மனீஷா கொய்ராலா ‘உயிரே’ என ‘ஹை ஸ்பீடில் குலுங்க குலுங்க’
ஓடி வருவாரே...
அதே போன்று இப்படக்காதாநாயகியும் ‘ ஓ...ராஜா’ என ஓடி வருவார்.
கதாநாயகனும் ‘ஓ...ராணி’ என ஓடி வருவார்.
நானும் தியேட்டரை விட்டு ஓடி வந்து விட்டேன்.

இன்னும் கொடுமையான சில படங்கள் இருக்கிறது.
அவைகள் சென்னைக்கு வராமல் ‘ சென்னை ரசிகர்களை காப்பாற்றி இருக்கிறது’.

இப்படங்களை ‘உள்ளொளி’ மூலம் தரிசித்து யாரேனும் ஒரு பதிவர் எழுதக்கூடும்.
எழுதி உயிர்மை, காட்சிப்பிழை போன்ற ‘இலக்கிய பத்திரிக்கைகளில் வந்தால்,
‘தமிழ் கூறும் நல்லுலகம்’ நன்றி சொல்ல வேண்டும்.