May 8, 2013

இளையராஜா-பாகம் 2


‘ஒரு திரைப்படத்தின் எந்த காட்சிக்கு இசையமைப்பது என்பது மட்டுமல்ல...
எந்த இடத்தில் இசையில்லாமல் மவுனத்தை ஏற்படுத்துவது என்பதும்தான்...
சிறந்த இசையமைப்பாளரின் வேலை’ - அகிரா குரோசுவா.

நமது படங்களில் பின்னணி இசையை விடவும்,
பாடல்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
ஏனெனில் பாடல்கள் வார்த்தைகளுடன் இருப்பதால்
பார்வையாளனை எளிதில் சென்றடைகின்றன.
இதுவரை தமிழில் வெளியான மொத்தப்பாடல்களின் சூழலை
விரல் விட்டு எண்ணி விடலாம்.
அதிலும் காதலை வேண்டி பாடுவது, காதல் கைகூடி இணையாகப்பாடுவது, காதல் பிரிவில் பாடுவது இந்த மூன்று சூழல்களே பெரும்பான்மையானவை.
[ இவை தவிர பக்தி, இலட்சிய வேகம், அம்மா, குழந்தை மீது அன்பு, சீர்திருத்தம், நாயகனின் பிரபலத்தன்மையை போற்றி பாடப்படுகின்ற பாடல்களும் உண்டு.]
காதல் என்கிற ஒரே உணர்வினை மட்டுமே,
தமிழ் படங்களில் மாறிமாறி பலவிதமாக ஒப்பனையிட்ட நடிகர்கள்... பாடுவதாக தோன்றி இருக்கிறார்கள்.
இதனை பாடுகின்ற பாடகர்களின் எண்ணிக்கையும் மிகக்குறைவானது.
உத்தேசமாக இருபதாயிரம் பாடல்களில், அதைப்பாடியவர்கள் பத்து பேர் மட்டுமே இருப்பார்கள்.
விநோதமான குறுகிய சூழல் வரையறைக்குள், 
ஒரு இசையமைப்பாளர் தனது படைப்புத்திறமையை விதவிதமாக மாற்றிக்காட்டுவது ஆச்சரியமான ஒன்று. 

 ‘சூளைச்செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது’ என்கிற ஞானக்கூத்தன் கவிதையைப்போல,
இந்த திட்டமிட்ட கட்டுப்பாட்டுக்குள், 
தனது தனித்துவத்தை, 
தனது மேதைமையை காட்டுவதன் மூலம் வித்தியாசப்பட்டு நிற்கிறார் இளையராஜா.

பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாக பார்த்து கருத்து சொல்வது தமிழ்க்குணங்களில் முக்கியமானதாக இருக்கிறது.
அதாவது, முன் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு தவறானதென்று ஒதுக்குவது               [ உ.ம். சாருவின் விமர்சனம் ]
மிகச்சிறந்ததென புகழ்வது.

தமிழில்தான் புதுமை இயக்குனர்களும், இயக்குனர் இமயங்களும், சிகரங்களும், புரட்சி நடிகர்களும், கலைஞர்களும் இருக்கிறார்கள்.
பட்டங்கள் இல்லாது எந்தக்கலைஞனையும் நாம் விடுவதில்லை.
இது போன்ற, மூன்றாம் தர பட்டங்கள்,  இந்தியாவில் நல்ல சினிமா உருவாகிற வங்காளத்தில் இருக்கின்றனவா?
அவ்வாறு பட்டங்களை வழங்கினாலும், உண்மையான கலைஞன்...
அவைகளை பெருமைக்குறிய அடையாளமாக பயன்படுத்துவானா?
இந்தப்பட்டங்கள் நமது அரசியல் சார்ந்த திராவிட இயக்கங்களின் பரிசாக வந்த துர்ப்பிரயோகங்கள் என்றுதான் கருத வேண்டும்.

இளையராஜா என்கிற இசைக்கலைஞனுக்கும் பலவிதமான பட்டங்களை அடைமொழியாக்கி அதன் செயற்கைத்தன்மையில், போலியான புகழ்ச்சியில்
அந்தக்கலைஞனின் உன்னதத்தை மழுங்கடிக்கிற வேலையை
நாம் செய்திருக்கிறோம்.
 ‘எட்டாவது ஸ்வரம்’,  ‘ராகதேவன்’,  ‘இசைஞானி’  என பலவிதமான பட்டங்களை கண்டுபிடித்து கவுரவிக்கிற நாம்,
அவரது உண்மையான படைப்பின் தீவிரத்தன்மையை,
இசை மூலமாக நிகழ்த்தும் உணர்வின் சத்தியமான தரிசனம் பற்றி பதிவு செய்திருக்கிறோமா ?
அவரது இசை குறித்த விமர்சன நூல்கள் வந்திருக்கின்றனவா ?
உணர்வுகளை, ஸ்வரங்களாக... துல்லிய மொழியாக்கம் செய்கிற
அவரது புலமை குறித்த நேர்மையான ஆய்வு இது வரையிலும் செய்யப்பட்டு இருக்கிறதா ?
இல்லையென்று சொல்ல நேர்வது, எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது !

 
எழுதியவர் : செழியன்
நூல்: பேசும்படம் [கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்]
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்.

மார்கழி சங்கீத உற்சவங்களில், பாடப்படும் பாடல்களுக்கு விமர்சனம் எழுதப்படுகிறது.
அதை விட உயர்ந்த படைப்புத்திறன் கொண்ட,
இளையராஜாவின் பாடல்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை.
இந்த முரணை, செழியன் விளக்குவதை...
அடுத்தப்பதிவில் பார்ப்போம். 

7 comments:

  1. ஒருவர் தான் செய்யும் பணியில் உன்னத நிலையை எப்போதும் எட்டிக்கொண்டே இருப்பது என்பது சாதாரண காரியம் அல்ல.அது தீவிர மனப் பயிற்சியின் மூலமே சாத்தியப்படும்.அதையும் சாத்தியப்படுத்திக் காட்டியவர் இளையராஜா.

    ReplyDelete
    Replies
    1. இளையராஜாவிற்கு பொருத்தமான புகழ் மாலையை சூட்டி விட்டாய்.
      நன்றி வினோத்.

      Delete
  2. இந்த பதிவுக்கு வினோத் ன் பதில் மிக மிக பொருத்தமானது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே.

      தங்கள் வருகையால் எனது பதிவு புதிய வெளிச்சம் பெறுகிறது.

      Delete
  3. தொடர் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்... ஊக்கத்திற்கும்... நன்றி.

      Delete

Note: Only a member of this blog may post a comment.