Aug 14, 2013

ராஜ சுந்தரராஜன் - இவருடனா சண்டை போட்டேன்!




நண்பர்களே...
போன வருடம்,
எனது பதிவில் ‘ராஜ சுந்தர்ராஜன்’ என்பவரை குறிப்பிட்டு சாடி இருந்தேன்.
 ‘கருந்தேள் ராஜேஷ்’ முக நூலில்,
ராஜ சுந்தரராஜன் திரைக்கலை நுட்பத்தை அபத்தமாக கூறி இருந்தார்.
அதற்கு கண்டனம் தெரிவித்து,
அவரது கூற்றில் உள்ள அபத்தத்தை விளக்கி சொல்லி இருந்தேன்.
அப்போது எனக்கு ‘ராஜ சுந்தர்ராஜன்’ யார் என்றே தெரியாது.
மொழி நடையையை வைத்து ‘இலக்கிய வியாதி’ கோஷ்டியை சேர்ந்தவர் என்று முடிவு கட்டி இருந்தேன்.
தொடர்ந்து அவரது பின்னூட்டங்களை,
பலரது பதிவுகளில் படிக்கும் போது கூட...
‘என்ன எழுதி இருக்கான் மயிராண்டி’ என்ற எள்ளல் பார்வையுடனேயே அதை படிப்பேன்.

ராஜ சுந்தரராஜனும்... கருந்தேள் ராஜேசும் நடத்திய முகநூல் உரையாடல் காண...

இருவரது உரையாடல்களுக்கு எனது அழுத்தமான பதிலும்,விளக்கமும்...காண...

[ நல்லவேளை... நான் இந்தப்பதிவு எழுதும் போது ராஜ சுந்தரராஜனை அறியாமல் இருந்தது.]



நேற்றிரவு ராஜசுந்தரராஜனின் ‘நாடோடித்தடத்தில்’ பயணப்பட்டேன்.
‘ஷிப் ஆப் தீஸியஸ்’ திரைப்படம் பார்க்கும் போது ஏற்பட்டபரவசத்தை அடைந்தேன்.

சும்மா சொல்லக்கூடாது...மனுஷன் ரகளையான ஆளுதான்.
கொஞ்சம் கூட பாசாங்கு இல்லாமல் தன் உணர்ச்சிகளை எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
இளம் பெண்களால் ஏற்பட்ட  ‘இலவச காம உணர்ச்சியை’,
அப்பட்டமாக... வாசகனுக்குள் ‘அடக்குகிறார்’ .
காம உணர்ச்சிகளை எழுத்தில் வடிக்க...
 ‘சாரு’ போல்  ‘நாலாந்தர வக்கிர நடையை’ கையாளவில்லை.
இவரது நடையில்...அ. முத்துலிங்கத்தின் ‘முத்தாய்ப்பும்’ இருக்கிறது.
சுஜாதாவின் வசீகர வாள் வீச்சும் இருக்கிறது.

 ‘ ஆழம் இல்லாத கடல்.
நான் இறங்கி முன்னேறிப்போனேன்.
என் கையை பிடித்துக்கொண்டு ஒரு குழந்தையைப்போல் அவளும் என்னில் உரசித்தழைந்து உடன் வந்தாள்.
முழங்கால் ஆழத்துக்கு, மிகத்தொலைவு போய் விட்டோம்.
அவள் அருகாமையால், அதுவரை இல்லாத ஒரு வெதுமை எழ,
என் உடம்பை உணர்ந்தேன்.
அவள் ஏற்றிப்பிடித்திருந்த சேலைக்குக்கீழ் வெளிர்ந்த வெண்கலத்திரட்சி மழி மினுக்கம்!
கால்களின் அழகையே தாங்காத தவிப்பில் கள்ளம் கூசிக்கருத்த என் பார்வையை அவள் கத்தரிப்பூ நிறப்புடவைக்கு உயர்த்தி நிற்பாட்ட முயன்றால்,
குஜாராத்தி பெண்களுக்கே போல் ஓர் இடுப்பை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? ’

குஜராத் நினைவுகள் என்ற முதல் அத்தியாயத்திலேயே இவர் மீது ‘முதல் மரியாதை’ வந்து விட்டது.
ஏற்கெனவே என்னுள் இருக்கும் ‘குஜராத்திக்காதலை’ இன்னும் அகலப்படுத்தியிருக்கிறது.
 ‘கர்பா நடனத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறார் ரா.சு.


‘ திருமண ஊர்வலங்களிலும் கர்பா நடனங்கள் உண்டு.
எங்கள் உணவகம் இருந்ததற்கு பக்கத்து வீட்டில் ஒரு திருமணத்தில்,
மணப்பெண் ஒரு கர்பா சீசனில் கர்ப்பமாகி கலைத்தவள் என்று மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிந்து விட்டது.
ஆனால் அதற்காக அந்தப்பெண் ஒதுக்கப்பட்டு விடவில்லை.
ஐந்து லட்சம் அதிகமாக ‘ஸ்த்ரீதனம்’ கோரப்பட்டு மணம் இனிதே முடிந்தது.
மறைப்பது பெண் வீட்டார் திறமை.
கண்டு பிடித்துக்கொள்வது பிள்ளை வீட்டார் திறமை.
எல்லாம் சில லட்சங்களுக்காக.’

தன்னை பெண்பித்தனாக காட்டிக்கொள்வதில் ‘சாருவிடம்’...
ஒரு ரவுடியின் ரவுசு இருக்கும்.
‘ நாறுகிற திசையெல்லாம் ஓடுகிற நாயாக அல்லாமல்
இருந்த இடத்திலேயே இருந்து தின்னும் சிலந்தியாக’
என்று ரா.சு தன்னை வெளிப்படுத்துவதில் இருக்கும் இலக்கிய நயம் நாகரீகம் மிக்கது.

  ‘வங்கக்கடலினும் வலுத்த அலைகளை எறிவது அரபிக்கடல்’

அத்துணை ஆக்ரோஷ கடலை அழகாக அடக்கி விட்டார் ஒரு வாக்கிய சித்திரத்தில்.



நண்பர்களே...எவ்வளவு நாள் பிந்தினேனோ தெரியவில்லை.
எப்படியோ ‘நாடோடி தடத்தை’ கண்டு பிடித்து வந்து சேர்ந்து விட்டேன்.
நீங்களும் என்னோடு சேர்ந்து நடந்தால் அக மகிழ்வேன்.

நூல் : நாடோடித்தடம்

ஆசிரியர் : ராஜ சுந்தர ராஜன்

வெளியீடு : தமிழினி பதிப்பகம்

விலை : ரூ.250.00.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.