May 14, 2013

இளையராஜா - பாகம் 6




 ‘ஒரு படைப்புக்கலைஞன்,
கலையின் வெவ்வேறு தளத்தில் இயங்குவதன் மூலம் தனது ஆதர்சமான படைப்பின் மேன்மை நிலையைச்சென்றடைகிறான்’ - சார்லி சாப்ளின்.



எழுத்து மற்றும் ஓவியத்துறையில் பிரான்சில் உருவான ‘சர்ரியலிசம்’ என்கிற
கனவுத்தன்மையான மிகை யதார்த்தப்புனைவுப்பாணியை இளையராஜா இசையில் கையாள்கிறார்.
இது போலவே ‘க்யூபிசம்’ என்கிற ஜியோமிதி வடிவங்களாலான
[ geometric elements ] ‘பிக்காசோவின்’ ஓவியக்கொள்கை போல,
தொடர்ச்சியான உருவ அமைப்புகளை திரும்ப திரும்ப கையாள்வதன் மூலம்,
ஒரு  ‘உருவமைதி’ காம்போசிசன் [ composition ] ஆக இயைபு கொள்வது போல,
தனது இசையில் தொடர்ச்சியான  ‘லயத்தை’ [ rhythm ] அல்லது ‘ஸ்வரக்கோர்வையை’
திரும்பத்திரும்ப வெவ்வேறு இசைக்கருவிகளால் கையாள்வதன் மூலம்...
ஒரு விதமான  ‘ஹார்மனியை’ இவர் ஏற்படுத்துகிறார்.
இதனை இவரது பாணி என்று கூடச்சொல்லலாம்.
அநேகப்பாடல்கள் தவிற, ‘ஹவ் டூ நேம் இட்’ [ How to Name It ],
நத்திங் பட் விண்ட்’ [ Nothing But Wind ] முதலான இசைத்தொகுதிகளிலும்
இந்த உத்தியை கையாள்கிறார்.

‘கூறியது கூறல்’ என்கிற தமிழ் இலக்கண மரபுப்படி பாடலின் முன்னால் இசைத்த ஒரு இசைக்கோர்வையை பாடலின் முடிவில் கையாள்வதன் மூலம்,
ஒரு வட்டத்தை நிறைவு செய்கிற பாணியை [ circular music ] நிறுவுகிறார்.
துவங்கிய காட்சியிலேயே, ஒரு திரைப்படத்தை நிறைவு செய்கிற இந்த உத்தி,
திரைப்படங்களில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இசைப்பாடல்களுக்காக இவர் கையாண்ட உத்திகளில் இது புதுமையானதாகும்.         
‘சொல்லத்துடிக்குது மனசு’ படத்தில் ‘பூவே...செம்பூவே’ என்ற பாடல்
இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

இது போலவே புகைப்படக்கலையின் ‘டிப்யூஷன்’ [ diffusion ] என்கிற உத்தியை இசையில் இவர் கையாள்கிறார்.
புகைப்படக்கலையில் இந்த ‘டிப்யூஷன்’ உத்தி,
பிம்பத்தின் கூர்முனைகளை மென்மையாகப்பூசியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி,
நிழலுக்கும் -  ஒளிக்கும் ஆன முரணை மெழுகி,
ஒரு ஓவியத்தன்மையை பிம்பத்திற்கு தருகிறது.
இந்த உத்தியை இசையில் கையாள்வதன் மூலம்,
சப்தங்களில் வேறொரு விதமான பரிமாணம் கிடைக்கிறது.
இந்த ‘காண்ட்ராஸ்ட்’ [ contrast ] என்கிற விஷயத்தை ‘டிப்யூஷன்’ மூலம்
 ‘பகை ஸ்வரங்களுக்கும்’,  ‘இணை ஸ்வரங்களுக்கும்’ இடையில்
 ‘மங்கலான பூச்சினை’ ஏற்படுத்துவதன் மூலம் பாடலில் ஒரு விதமான பனிப்பிரதேசத்தை நம்மால் உணர முடிகிறது.
 ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்திற்காக இசையமைக்கப்பட்டு,
படத்தில் இடம் பெறாத ‘புத்தம் புது காலை...பொன்னிறவேளை’  என்ற பாடல் சிறந்த உதாரணம்.

அது போல, ஒரு தொலைவுக்கு இட்டுச்செல்லும்,
ஏங்கும் விதமான  ஹாண்டிங்’ [ haunting ] ராகங்களை இவர் கையாள்வது அலாதியானது.
‘உல்லாசப்பறவைகள்’ படத்தில் ‘தெய்வீக ராகம்...தெவிட்டாத பாடல்’ என்ற ஜென்சியின் தெவிட்டாத குரலில் வந்த பாடல் மிகச்சிறந்த உதாரணம்.


இவ்வாறு ஓவிய உத்திகளை தனது இசையில் உள்வாங்கிக்கொண்டு
அழகாக பயன்படுத்துகிறார்.
ஓய்வு நேரங்களில் இவர் புகைப்படம் எடுப்பவர் என்பதும்,
அரூபமான ஒளி குறித்த பரிச்சயமுடையவர் என்பதும் இவரது இசைக்கு பலம் சேர்க்கிறது.


எழுதியவர் : செழியன் 
நூல் : பேசும்படம் [ கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

நண்பர்களே...
பாடல்களின் மூலம் இளையராஜா நிர்மாணிக்கும் நிலவெளியினை,
செழியன் சிலாகித்து எழுதியிருப்பதை
அடுத்தப்பதிவில் காண்போம்.

இளையராஜாவின் தெய்வீக ராகத்தைக்கேட்க...

6 comments:

  1. உத்திகளின் விளக்கம் அருமை...

    பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  2. ‘பின்னூட்டப்புயலே’ வருக...
    என் மனமார்ந்த நன்றியைப்பெறுக!

    ReplyDelete
  3. ஆஹா அதிகாலை என்றாலே இன்னும் புத்தம்புதுக்காலை மறக்க முடியாது!பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.