Jan 13, 2013

ஐ லவ் அத்தை!.


நண்பர்களே...
புத்தாண்டு முதலே சரி வர பதிவுகள் எழுதவில்லை.
காரணம் எனது அத்தை.
எனக்கு  ‘சினிமாப்பால்’ ஊட்டிய ஞானத்தாயார்.
ஒவ்வொரு கோடை விடுமுறையும், அத்தையின் இல்லமே வேடந்தாங்கல்.
இருதயமே இல்லாத இறைவன், அவர்களுக்கு இருதய நோயை பரிசாகக்கொடுத்து பறித்து கொண்டான் உயிரை.


ஐந்தாவது படிக்கும் போதே என் தலைக்குள் சிவகாமியின் சபதத்தையும்,பொன்னியின் செல்வனையும், கடல் புறாவையும் ஏற்றி வைத்த ஏணி அவர்கள்.

சினிமா, அரசியல், இலக்கியம், சமையல், பக்தி எல்லாவற்றிலும் அரசியாக திகழ்வாள் எனக்கணித்து ‘மங்கையற்கரசி’ எனப்பெயர் வைத்தார் போலும் தாத்தா.
எனது அத்தையின் மீன் குழம்பிற்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பரம ரசிகர்.

கோடிஸ்வரியாக இருந்தாலும்  ‘நடுத்தர வர்க்கத்து வாழ்வையே’ இறுதி வரை விரும்பி வாழ்ந்த பெருந்தகையாளர்.
பசியென்று வந்தவர்க்கு பாயசத்தோடு பரிமாறும் பரந்த மனசுக்காரி.
கடந்த காலத்தை எண்ணி கலங்க மாட்டாள்.
வருங்காலத்தை எண்ணி பயப்பட மாட்டாள்.
நிகழ்காலத்தை அணு அணுவாக ரசித்து வாழும் ‘ஜோர்பாவின்’ வாரிசு.

“ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சைக்கோவிலை பார்க்க வேண்டும்”
என்ற என் அத்தையின் ஆசையை நிராசையாக்கிய குற்ற உணர்வு இனி என்றும் என்னுள் இருக்கும்.

எழுபதுகளில் சென்னை குரோம்பேட்டை,பல்லாவரம்,தாம்பரம் தியேட்டர்களில்  ‘ஒரே கட்டணத்தில் இரண்டு படங்கள்’ காட்டுவார்கள்.
அதனால் 30 நாள் விடுமுறையில் 60 சினிமாவிற்கு மேல் தியேட்டர்...தியேட்டராக அழைத்துச்சென்று எனக்குள் சினிமாவை விதைத்த விவசாயி என் அத்தை.

மனித உறவுகள் பண உறவுகளாகி விட்ட காரணத்தால், அவர் பெற்ற பிள்ளைகள் தடுத்தும்...  ‘எனது அண்ணன் மகன் திருமணம் செல்வேன்’
என வந்து வாழ்த்திய புனிதவதி எனது அத்தை.

அவரது பிள்ளைகளிடம் பட்ட கடனை அடைத்து விட்டேன்.
தீர்க்க முடியாத கடன் எனது அத்தையிடம் பெற்றதுதான்.
எனது படைப்புகளை அவருக்கு அர்ப்பணிப்பதன் மூலமே  ‘அக்கடனை’ தீர்க்க முடியும்.
சீக்கிரம் தீர்த்து விட ஆசிர்வதியுங்கள் அத்தை.

   

4 comments:

  1. cinema vukku importance koduthu thiraith thaagaththai ungalukku oottiya ungal athayin pugazh vaazhga..!

    climax thaan "Aunty climax" aa illaama "Anti-climax " aa irundhadhu konjam varutham.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...

      சொர்க்கத்தில் இருக்கும் என் அத்தை உங்களை வாழ்த்துவார்.

      Delete
  2. வருந்துகிறோம் .ஜி .

    ReplyDelete
  3. You will win in tamil cinema again.

    உங்கள் அத்தை சொர்க்கத்தில் இருந்து உங்களை வாழ்த்துவார் !

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.