Nov 19, 2012

இயக்குனர் கமலுக்கு ' HATS OFF ' \ Hey Ram \ 2000 \ India \ ஹேராம் = 029

நண்பர்களே...
 “ஒரு திரைப்படத்தை அதில் உள்ள கூட்டக்காட்சியில் வரும் ஏராளமான துணை நடிகர்களை வைத்தோ அல்லது அப்படத்திற்காக அமைக்கப்பட்ட மாபெரும் அரங்கத்தை வைத்தோ பிரமாண்டமான படமாக ஆக்க முடியாது.
மாறாக அத்திரைப்படத்தின் கருத்துப்பொருளின் கனம் காரணமாகவும் அத்திரைப்படக்கதாநாயகனின் மனிதத்தன்மை காரணமாகவும்தான் அதை பிரமாண்ட ஒன்றாக ஆக்க முடியும்” என்று  ‘சினிமா கோட்பாடு’ எனும் திரைப்பட இலக்கண நூலில்  
திரை மேதை ‘பெலே பெலாஸ்’ குறிப்பிட்டிருப்பார்.

ஹேராமில்  ‘பெலே பெலாஸ்’ குறிப்பிட்டதைப்போல ஒரு  ‘பிரமாண்ட ஷாட்’ வருகிறது.
கடந்த பதிவில் மேற்படி ஷாட்டை சரி வர எழுத முடியாமல் போனதற்கு மன்னிக்கவும்.
கமலின் மாஸ்டர்பீஸ் ஷாட்டை... 
இப்பதிவில் மிகச்சரியாக ஆய்வு செய்து எழுதி உள்ளதாக கருதுகிறேன்.
உலகின் தலை சிறந்த பத்து இயக்குனர்களின் படங்களில் கூட இதற்கு இணையான ஷாட் 
நான் கண்டதில்லை...என நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.
இப்பதிவையும்...காட்சியையும் நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.
என் நண்பர் சொன்னது மிகையில்லை என உங்களுக்கே தோன்றும். 
ஒரே ஷாட்டில்... பல்வேறு அர்த்தங்களை அடுக்கடுக்காக அடுக்கி வித்தை புரிந்ததை  
என்னால் முடிந்த வரை விளக்கி உள்ளேன்.





அபயங்கர் உரையாடலை தனி வண்ணத்திலும்...
சாகேத்ராம் உரையாடலை தனி வண்ணத்திலும் கொடுத்து உள்ளேன்.

அபயங்கர் : “ லிசன்...குத்தம் செஞ்சாத்தான் தண்டனை...
கடமையை செஞ்சா தண்டனை கிடையாது.
கொலை குத்தம்னா...யுத்தமும் குத்தம்.
பட்டாளத்துல சேர்ந்து சண்டை போடும் போது... 
கொலை எப்படி குத்தமாகும்? ”.
***************************************************************************
இந்த உரையாடல்கள்,
1939ல் இரண்டாம் உலகப்போரில்,
பிரிட்டனை  ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ நிபந்தனையுடன் ஆதரித்தது...

இதை ஏற்காமல் சுபாஷ் சந்திர போஸ்  ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற கொள்கைப்படி பிரிட்டனுக்கு எதிரான நாடுகளுடன் கை கோர்த்து
‘இந்திய தேசிய ராணுவத்தை’ நிறுவி போரிட்டது...
1942ல், காந்திஜி  ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கி பிரிட்டனுக்கு நெருக்கடி கொடுத்தது...
ரஷ்யாவுக்கு ஆதரவாக,
இரண்டாம் உலகப்போரை...மக்கள் போராட்டமாக அறிவித்து,
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில்...
இந்தியாவைச்சேர்ந்த கம்யூனிஸ்ட்கள் பங்கெடுக்க மறுத்தது என வரலாற்றின் பல்வேறு பக்கங்களை புரட்டி பார்க்க வைக்கிறது.
***************************************************************************
போலிஸ்காரர்கள் நிரம்பிய ஜீப் வருவதைக்கண்டு அபயங்கர்,
ராமை இழுத்துக்கொண்டு டிராமில் ஏறுகிறான்.

போலிஸ் ஜீப் வரும் போது,
பார்வையாளராகிய நாம் நுட்பமாக கவனித்தால்...
கீழ் வரும்  ‘காட்சி சித்தரிப்புகள்’ காண முடியும்.

போலிஸ் ஜீப் வரும் போது ரோட்டின் இடது புறம்,
‘வண்டி மாடு’ கொல்லப்பட்டு கிடக்கிறது.
மாட்டு வண்டி குடை சாய்ந்து கிடக்கிறது..
வண்டியிலிருந்த மூடைகள் சிதறி கிடக்கிறது.

டிராமில் கணிசமான மக்கள் இருக்கிறார்கள்.
அபயங்கர் உரையாடல் தொடர்கிறது.
 அபயங்கர் : “ பட்டாளத்துல சேர்ந்து சண்டை போடும் போது கொலை எப்படி குத்தமாகும் ?.

 ராம் : “ நான் பட்டாளத்துக்காரனில்ல...நான் வெறும் சிவிலியன்”

அபயங்கர் : “ திஸ் ஈஸ் சிவில் வார் பிரதர்”
மேற்கண்ட அபயங்கர் - ராம் உரையாடலின்போது  டிராம் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும்.
போலிஸ் ஜீப் வரும் போது பின் புலத்தில் இருந்த...  
‘தொலைவுக்காட்சி சித்தரிப்புகள்’...
ராம் - அபயங்கர் பின் புலமாக  ‘அண்மைக்காட்சி சித்தரிப்புகளாக’தெளிவாக காண முடிகிறது.

வன்முறையில் ‘வண்டி மாடு’ கொல்லப்பட்டு  ‘பல நாட்கள்’ ஆகி விட்டது..
மாட்டு வண்டி  ‘தலை கீழாக’குடை சாய்ந்து கிடக்கிறது.
வண்டியிலுள்ள மூட்டைகள் சிதறி கிடக்கின்றது.
பூதாகரமாக உப்பிக்கிடக்கும் மாட்டு வயிற்றினுள்ளே...
ஒரு நாய் மாட்டின் சதையை தின்று கொண்டு இருக்கிறது.
இதற்கு முந்தைய காட்சியில் காட்டப்பட்ட நாயும்...
இதுவும் வெவ்வேறு.
அது கருப்பு...இது வெள்ளை.
அதாவது, உயிரோடு இருக்கும் ‘வெள்ளை நாய் தின்று கொண்டு இருக்கிறது’.
ஊர் ரெண்டு பட்டது...வெள்ளைக்கார கூத்தாடி நாய்க்கு கொண்டாட்டம்.
‘வெள்ளை நாய்’ குலைத்து நமது கவனத்தை ஈர்க்கிறது.
இது இயக்குனர் கமலின் சாமர்த்திய உத்தியாகும்.

அபயங்கரும், ராமும்  ‘துர்நாற்றத்தை’ உணர்வதை...
இருவரது  ‘உடல் மொழி’ மூலம் தெளிவாக உண்ர்கிறோம்.
‘கலவரத்தின் கால அளவை’ ‘துர்நாற்றத்தின்’ மூலமாக பார்வையாளருக்கு உணர்த்தியது...
இயக்குனர் கமலின்  ‘மாஸ்டர்பீஸ்’ பங்களிப்பு.

செத்துக்கிடக்கும் மாடு, பலநாள்கள் கடந்தும் அகற்றாமல் கிடக்கிறது.
 அரசு நிர்வாகம்  ‘குடை சாய்ந்து’ விட்டது.
‘விரைந்து செல்லும்  போலிஸ் ஜீப்’...
அரசு நிர்வாகம் மெல்ல மெல்ல நிலமையை கையகப்படுத்துவதற்கு சாட்சி.
 ‘டிராமில் கணிசமாக  பயணிக்கும் மக்கள்’....
கலவரம் சகஜ நிலைக்கு மீள்கின்ற தன்மையை சொல்கிறது.

மேலும் இக்காட்சியில் அறியப்படுவது...
கவிழ்ந்து கிடக்கும் ‘இந்திய மாட்டு வண்டி’ = சகோதர்களான 
இந்து -முஸ்லிமை மோத விட்டு வேடிக்கை பார்த்த வெள்ளை அரசின் சதிக்கு பலியாகி கவிழ்ந்து போன  ‘ஷராவர்தி’ பொம்மை அரசு.

ஓடிக்கொண்டிருக்கும் ‘வெள்ளையரின்  டிராம்’ =  ‘அதிகார வெள்ளைக்கார அரசு’ பாதிப்பில்லாமல் இயங்குவது.

செத்து கிடக்கும் மாடு,
துர்நாற்றம்,
உயிரோடு இருக்கும்  ‘வெள்ளை நாய்’,
தலை கீழாக கவிழ்ந்த வண்டி,
சிதறிக்கிடக்கும் மூட்டைகள்...மூலமாக
கலவரத்தின் கடந்த கால நிலையையும்.......

இயங்கிக்கொண்டிருக்கும் டிராம்,
பயணிக்கும் மக்கள்,
சாகேத் ராம்,
அபயங்கர்,
போலிஸ் நடவடிக்கை...மூலமாக
கலவரத்தின் நிகழ் கால நிலையையும்
ஒரே ஷாட்டில் கையகப்படுத்தியது இயக்குனர் கமலின் கை வண்ணம்.
உலகசினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் இது புது விருந்து.
அடர்த்தியான அர்த்தங்களை ஒரே ஷாட்டில் பொதிந்துரைத்த
இயக்குனர் கமலுக்கு  'HATS OFF'.

அபயங்கர் : “ நாடு இருக்கிற சிச்சுவேஷன்லே நாம எல்லோருமே சோல்ஜர்ஸ்தான்” 

“ இந்த புக்கை படி- இது தடை செய்யப்பட்ட புஸ்தகம்.
அட்டையை பிரிக்காம படி.
இது வீர சா...”
இந்த டயலாக் முழுமை பெறாமல் முடிவடைகிறது.
இந்த  ‘சாமர்த்தியத்திற்கு’ காரணம் இயக்குனரா...சென்சாரா தெரியவில்லை.
ஆனால், ‘வீர சாவர்க்கர்’  என்று...
ஹேராம் திரைக்கதை புத்தகத்தில் இருக்கிறது.
வீர சாவர்க்கர் ஆர்.எஸ்.எஸ் பிதாமகர்களில் முக்கியமானவர்.
அவரை பற்றி விளக்கமாக விக்கிபீடியாவில் காண்க.
வீர சாவர்க்கர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

அபயங்கர் : “ பொழச்சிருந்தா மறுபடியும் சந்திப்போம்...
வந்தே மாதரம் !”.
டிராமை போலிசார் வளைக்கின்றனர்.
முற்றுகையிடுவதைக்கண்டு அபயங்கர்
கங்கையில் பாய்ந்து தப்பிக்கிறான்.
போலிசார் சுடுகின்றனர்.
THE THEN HUNTER IS NOW BEING HUNTED.
நேற்று வேட்டையாடியவன்...இன்று வேட்டையாடப்படுகிறான்.

அபயங்கர் தப்பிப்பதை ராம் பார்க்கிறான்.
இக்காட்சி நிறைவு பெறுகிறது.

கலகக்காரர்களின் ஆட்டம் முடிவடைந்து விட்டது.
எண்ணற்ற  'இந்து - முஸ்லீம் சகோதரர்கள்' மடிந்து விட்டார்கள்.
‘வெள்ளை நாய்’ உயிரோடு இருக்கிறது.
உயிரோடு இருக்கும் கலவரக்காரர்களை,
போலிசார்  ‘வழக்கம் போல்’
லேட்டாக வந்து வேட்டையாடுகிறார்கள்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

இக்காட்சியை காணொளியில் காண்க...

10 comments:

  1. நானும் இந்த படத்தை பார்த்தேன் அண்ணா..இந்த அளவுக்கு எதுவுமே என்னோட மண்டைக்கு ஏறுனது கிடையாது..உங்கள மாதிரி சினிமா ரசிகரோட பதிவுகள் படிக்கும் வாய்ப்பே மிகச் சிறந்தது எனக்கு..தொடருங்கள்..வாழ்த்துக்கள் மற்றும் நன்றியோடு நான்.

    ReplyDelete
    Replies
    1. தம்பி குமரா...ஹேராம் மாதிரி படங்கள் ஒரு தடவை பார்க்கும் போதே எல்லா அர்த்தமும் விளங்கி விடாது.
      இப்பதிவில் குறிப்பிட்டஷாட்டை முப்பது தடவைக்கு மேல் ஓட்டிப்பார்த்து அர்த்தம் கண்டு பிடித்தேன்.
      நண்பர்களும் உதவி செய்தார்கள்.

      சிட்டிசன் கேன்,காட்பாதர் போன்ற படங்கள் இன்றும் ஷாட் பை ஷாட் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
      ஹேராமிற்கும் அத்தகுதி உண்டு.
      ஹேராம் வருங்காலத்திலும் ஆய்வு செய்யப்படும்.

      Delete
  2. தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் ( www.tamiln.org ) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete
  3. கமல் எனும் சிறந்த நடிகனை பலருக்குத் தெரியும். அவருக்குள் இருக்கும் மிகச்சிறந்த இயக்குனரை,கதாசிரியரை, வசனகர்த்தாவை இந்த பதிவுகள் உலகுக்கு விளம்புகின்றன..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி நண்பரே.

      Delete
  4. அந்த மாட்டையே நான் கவனித்திருக்கவில்லை.. ரொம்ப நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. பிரித்து மேய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.