Oct 13, 2012

தடையில்லா மின்வெட்டு வேண்டும்.


நண்பர்களே...
கருணாநிதி அரசில் ,ஆற்காடு வீராசாமி என்றொரு மந்திரி புண்ணியத்தில் நான்கு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு கிடைத்தது.
 ‘கருணை காட்டுங்கள்...மின்வெட்டை அதிகரித்து காப்பாற்றுங்கள்’ என தலைகீழாக நின்று தவம் பண்ணியும் மனிதர் அசரவில்லை.
என்னமோ தகிடுதத்தம் பண்ணி நான்கு மணிக்கு மேல் மின்வெட்டை அதிகரிக்காமல் தொடர்ந்து சதி செய்து வந்தார்.

இந்த கோபத்தில் கடந்த தேர்தலில்.. 
இரட்டை இலைக்கு வாக்களித்தேன்.
தமிழக மக்களும் அளித்தார்கள்.
எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு மின்வெட்டை அதிகரித்து பால் வார்த்தது.
தற்போது  ‘யானைப்பசிக்கு சோழப்பொரியாக’...
வெறும் 18 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு என்ற அளவில் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது
தமிழ்நாடு மின் வாரியம்.


ஆனால் தலைநகர் சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டை வழங்கி தொடர்ந்து சதி செய்து வருகிறது.
இக்குறையை நீக்கி, பாகுபாடு இல்லாமல் தமிழகமெங்கும் சீராக ஒரே அளவில் 24 மணி நேரமும் மின்வெட்டை வழங்கி எங்களை காப்பாற்றுமாறு தமிழக அரசை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இருபத்து நாலு மணி நேர மின்வெட்டால் என்ன பயன் ? என்று  ‘பேஸ்புக்கில்’  ‘விசிலடிக்காத குஞ்சுகள் ’ சிவ ராஜ்யம் ,  ‘மதுரை அரிவாள்’ போன்ற மண்டூகங்கள் கதைக்கலாம்.
அவர்களுக்காக சிலவற்றை  சொல்ல விழைகிறேன்.

மின்சார மோட்டார்கள் ஒழிக்கப்படும்.
எனவே கிணறுகள் தோண்டப்படும்.
அதனால் புதிய வேலைவாய்ப்பு ஏற்படும்.
கிணற்றில் நீர் இறைத்தால் நோய் நொடிகள் வராது.
மருத்துவச்செலவிருக்காது.
எல்லோரும் துணி துவைக்கும் பொற்காலம் துவங்கி விடும்.

வாங்கி வைத்த வாஷிங் மிஷின்களை என்ன செய்வது ? என்று அராஜகமாக கேட்பவர்களுக்கு...
சிம்பிளான பதில்...
பழைய வாஷிங் மிஷின்களை  ‘எக்சேஞ்ச் ஆபரில்’ கொடுத்து விட்டு,
புத்தம் புதிய சலவைக்கல்... வசந்த் & கோவில் வாங்கிக்கொள்ளலாம்.

முன்னொரு காலத்தில்,
ஹை வோல்டேஜ் மின்சாரம் வந்து கொண்டிருந்த ...,
தற்போது வேஸ்டாக இருக்கும் கம்பிகள் வழியாக
‘ஜேம்ஸ்பாண்ட் ரக பயணமும்’,
கம்பிகளை தாங்கியிருக்கும் கம்பம் To கம்பம் ,
 ‘ டார்ஜான் ரக போக்குவரத்தும்’ மேற்கொள்ளலாம்.



மின்சாரம் இல்லாதததால்,
கே.எப்.ஸி போன்ற  பன்னாடை பன்னாட்டு  நிறுவனங்கள் ஸ்டோரேஜ் செய்ய வாய்ப்பிருக்காது.
எனவே சிக்கனோடு பல புழுக்களை இலவசமாக வாரி வழங்கி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும்.

*********************************************************************************
கே.எப்.ஸி சிக்கன் சாப்பிட்டு பழகியவர்களே...
உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.
இனி தவளை,கரப்பான்பூச்சி,பல்லி...என சகலமும் சாப்பிடலாம். ‘கருந்தேளை’த்தவிர.
பிரபல எழுத்தாளர் தாய்லாந்து போய் இந்த அரிய வகை உணவுகளை உண்டு சிபாரிசு செய்துள்ளார்.
[ தாய்லாந்துல ஏதோ நதியை பாக்கத்தான்...
எல்லோரும் இப்போ படை படையா போய்ட்டு இருக்காங்களாம்.
 பாங்காக்கில் உள்ள  ‘ பட்பாங் ஏரியா’ மற்றும் ‘பாட்டையா பீச்சையே’ இழுத்து மூடியாச்சு என கேள்விப்பட்டேன்.]

*********************************************************************************

தமிழ்நாட்டுக்கு தடையில்லா மின்வெட்டை வழங்கி...
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றி...
கற்கால நாகரீக மனிதர்கள் போல வாழ அருள் புரியுமாறு...
மத்திய,மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கொண்டு,
மின்சாரத்துறை அமைச்சர் பெயரை தண்டோரா போட்டும்,
அன்னாரது திருவுருவத்தை சுவர் ஒவியங்களாக வரைந்தும்...
திருவுருவச்சிலைகள் நாடெங்கும் அமைத்து...
அவருக்கு பெருமை சேர்க்குமாறு  கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
செயலாளர்,
அம்மி & ஆட்டுக்கல் தயாரிப்பாளர் சங்கம்.
கோவை.

குறிப்பு :
 ‘இன்று’ மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர் பெயரை,
சரியாக யூகித்து பின்னூட்டத்தில் தெரிவிப்பவருக்கு  ‘சிக்கி முக்கி’ கல் பரிசாக வழங்கப்படும்.
முதலில் தெரிவிப்பவருக்கு மட்டும் இப்பரிசு வழங்கப்படும்.

மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசாக...
குழந்தைகளின் ‘ஆய்’ அள்ள உதவ வந்திருக்கும்...
‘ஆனந்த விகடனின் டைம்பாஸ்’ பத்திரிக்கை வழங்கப்படும்.

4 comments:

  1. நல்ல யோசனை சொன்னீங்க, நானும் கிரைண்டர் கொடுத்து விட்டு ஆட்டுக்கல் வாங்க போகிறேன், சென்னையில் உங்கள் கிளை விபரம் தெரிவிக்கவும். நன்றியுடன். ராதா.

    ReplyDelete
    Replies
    1. சென்னை தனி மாநிலமாக இருப்பதால்,அங்கு மின்வெட்டு சரியாக அமல் படுத்தப்படவில்லை.

      அங்கு ‘பூரண மின்விலக்கு’ அமல் படுத்தப்பட வேண்டும்.
      அப்போது நிச்சயம் எங்களது விற்பனைக்கு...
      முகவர் ஏற்பாடு செய்வோம்.

      இருந்தாலும் ‘வரும் முன் காப்போம்’ என்ற எச்சரிக்கையுடன் செயல்பட நினைத்த உங்களுக்கு...எங்கள் சங்கத்தின் சார்பாக தனித்த பாராட்டு.

      Delete
  2. துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொல்லி வெச்சார் வள்ளுவரும் சரிங்க. நல்லா சிரிச்சிட்டோம் என்ன பண்றது நம்ம பொழப்பு சிரிக்கறதுக்குள்ளே கரெண்ட் வந்தா சரி

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி.... நல்ல சிரிங்க மேடம்... உங்களது புன்னைகை ஒளியில வெளிச்சம் வரட்டும்..... just for fun...

      Delete

Note: Only a member of this blog may post a comment.