Mar 28, 2013

‘எரியும் பனிக்காடை’ ஏன் படமாக்கவில்லை ?


நண்பர்களே...
1969ல்  ‘ரெட் டீ’ என்ற நாவலை பி.எச்.டேனியல் உருவாக்கினார்.
அதை 38 ஆண்டுகள் கழித்து தமிழில் ‘எரியும் பனிக்காடு’ என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார் இரா.முருகவேள்.
இத்தனை ஆண்டுகள் இக்கதை திரைப்படமாக்கவில்லை.
ஏன் முருகவேளோ...அல்லது அவர் சார்ந்துள்ள இயக்கமோ கூட அதைச்செய்யவில்லை.
இத்தனை நாள் குறட்டை விட்டுக்கொண்டிருந்த முருகவேள் இப்போது பாலாவின் பரதேசியை பார்த்து ‘தாம் தூம்’ என குதிக்கிறார்.
இயக்கிய பாலாவுக்கும், கதை-வசனம் எழுதிய நாஞ்சில் நாடனுக்கும் ஜாதீய வர்ணம் பூசுகிறார்.
இன்று கொதிக்கும் முருகவேள் இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்தது ஏன் ?
அட்லீஸ்ட்...ஒரு குறும்படம் கூட எடுக்கவில்லையே முருகவேள் !

கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்கள் முயற்சியால் ‘தேநீர்’ என்றொரு படம் உருவாகி வெளியானது.
கம்யூனிஸ்ட்காரர்கள் கூட அந்த படத்தை பார்க்கவில்லை.
அப்படி ஒரு தரத்தில், படத்தை படுத்தி எடுத்திருந்தார்கள்.
தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் வரலாற்று  அவதிக்கு இணையாக... திரைப்படத்தை காண வந்தவர்கள் வதை பட்டார்கள்.
இந்த வெளக்குமாறுக்கு, கே.பாக்யராஜ் என்ற பட்டுக்குஞ்சலம் கதை-வசனம்.

‘ரெட் டீ’ என்ற நாவல்  மறைந்த ‘விடியல் பதிப்பகம்’ சிவா இல்லையென்றால் தமிழில் எவனும் படித்திருக்க முடியாது.
‘முருகவேள்’ மொழி பெயர்த்து முழி பிதுங்கி அவரே படித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.



தமிழ்நாட்டில்  ‘எரியும் பனிக்காடு’ மூவாயிரம் புத்தகம் கூட இன்று வரை விற்பனை ஆகவில்லை.
அப்படிப்பட்ட ஒரு நாவலை படமாக்க எவனுக்கு துணிச்சல் வரும் ?
பாலாவுக்கு வரும்.

 ‘ரெட் டீ’யை உருவாக்கிய பி.எச்.டேனியல் ஒரு கிருத்துவர்.
தேயிலைத்தோட்டத்தொழிலாளிகள் கிருத்துவ மதத்திற்கு மாற்றப்பட்ட வரலாற்றை மறைத்து நாவலை உருவாக்கி உள்ளார்.
‘ரெட் டீயை’ முனுசாமியோ கந்தசாமியோ உருவாக்கி இருந்தால் அந்த வரலாறு தேயிலைத்தோட்டத்தொழிலாளியின் துயர வரலாற்றோடு சேர்த்தே பதிவு செய்யப்பட்டிருக்கும்.
டேனியல் தூய கிருத்துவர்.
அவரால் எப்படி அந்த வரலாறு எழுத முடியும்.
ஒவ்வொரு வரலாறும்... எழுதுபவன் வரலாறு,சிந்தனை, கொள்கை. கோட்பாடுகள் கட்டாயம் இணைந்தே இருக்கும்.

‘எரியும் பனிக்காட்டில்’ மறைக்கப்பட்டிருந்த வரலாற்றையும் சேர்த்து பாலா படமாக்கி உள்ளார்.
இதில் என்ன தவறு ?
ஆயிரக்கணக்கானோர் அறிந்த தேயிலைத்தோட்ட தொழிலாளர் வரலாற்றை கோடிக்கணக்கான தமிழர்கள் அறியும்படியாக ‘பரதேசியை’
பாலா படைத்தது குற்றமா ?

இன்று பாலாவை குறை சொல்லும் இலக்கிய வியாதி கோஷ்டிகள் டேனியல் வாழ்க்கை வரலாற்றை படமாக்குங்களேன் !.
யார் உங்கள் கையை பிடித்து தடுக்கிறார்கள்?
இந்த நாட்டில் கிருத்துவர்கள் எப்படி தோன்றி வளர்ந்தார்கள் என்பதை பதிவு செய்யுங்கள்.
தென் தமிழகத்தில் கடற்கரையோர மீனவக்கிராமங்கள் ஒட்டு மொத்தமாக கிருத்துவர்களாக மாறிய வரலாற்றை படமாக்குங்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத், மெஞ்ஞானபுரம் என கிருத்துவ நாடார்கள்
வசிக்கும் ஊரின் வரலாற்றை தோண்டுங்கள்.
ஆயிரம் திரைக்கதைகள் அங்கே கிடைக்கும்.
குறை சொல்லி காலம் ஓட்டாதீர்கள் ‘இலக்கிய வியாதிகளே’.

1969ல் உருவாக்கப்பட்ட ரெட் டீயை 2012ல் படமாக்கிய பாலாவை போற்ற வேண்டாம்.
குறை  சொல்லாதீர்கள்  ‘கோட்டிக்காரர்களே’.
கோட்டிக்காரர்கள் = மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

Mar 22, 2013

மத மாற்றத்தை படமாக்கலாமா பாலா ?


நண்பர்களே...
பரதேசியை பாராட்டிய அன்பர்கள் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானோர்... கிருத்துவ மதத்துக்கு கொத்தடிமைகளை மாற்ற முயற்சித்ததை படமாக்கியதற்கும்...
படமாக்கிய விதத்திற்கும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.
எரியும் பனிக்காட்டில் அப்படி ஒரு வரலாறு எழுதப்படவில்லை என்ற வாதத்தையும் வைத்துள்ளார்கள்.
பாலா ஒரு வரலாற்று தவறை செய்தது போல் சித்தரித்து உள்ளார்கள்.
மிக நுட்பமாக பாலா  ‘மத மாற்ற வரலாற்றை’ பதிவு செய்திருப்பதை பெரும்பாலும் கவனிக்க தவறி விட்டனர்.

பாலா கொத்தடிமைகளை கிருத்துவ மதத்துக்கு மாற்றப்பட்ட சரித்திரத்தை ஏன் படமாக்கினார் ? எனக்கேட்டவர்கள்...
ஏன் படமாக்கக்கூடாது எனச்சொன்னார்களா?
தேயிலைத்தோட்டத்தின் ரத்த சரித்திரத்தை பரதேசியில் பதிவு செய்த பாலா அதே கால கட்டத்தில் நிகழ்ந்த மத மாற்றத்தை பதிவு செய்யா விட்டால்தான் அது மாபெரும் வரலாற்று பிழையாகி இருக்கும்.

கொத்தடிமைகளை ஏன் கிருத்துவ மதத்துக்கு மாற்றினார்கள்?
இந்த  கேள்விக்கு விடை தெரிய வரலாற்றை பின்னோக்கி பார்க்க வேண்டும்.

[ 1 ] ரோம சாம்ராஜ்ஜியத்திலிருந்து தொடங்குவோம்.
ரோம சாம்ராஜ்ஜியத்தில் கடவுளையும் மன்னனையும் இணையாக கருதி வழிபட்டார்கள் மக்கள்.
மன்னர்களுக்குள் நடந்த யுத்தங்களாலும், நிர்வாக சீர் கேடுகளாலும் மக்கள் சொல்லொணா துயரத்தில் இருந்தார்கள்.
மேலதிகத்தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க.
ரோம சாம்ராஜ்ய வரலாறைக்காண...

ரோம சாம்ராஜ்ஜியத்தில் இருந்த அடிமை முறையால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி புரட்சி செய்த மாவீரன் ஸ்பார்ட்டகஸ்.
முதல் புரட்சியே முற்றிலும் கோணலாகி ஸ்பார்ட்டகஸ் சிலுவையில் அறையப்பட்டான்.


SPARTACUS \ 1960 \ ENGLISH \ DIRECTED BY STANLEY KUBRICK.

ஸ்பார்ட்டகஸ் வரலாற்றை இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் அற்புதமாக படமாக்கி உள்ளார்.
[ இப்படத்தை தனது மகள் ஸ்ருதியுடன் 30 தடவைக்கு மேல் பார்த்ததாக கமல்
ஒரு பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார் ]

[ 2 ] ஸ்பார்டகஸ் மறைந்து, சரியாக 71 வருடம் கழிந்து இயேசு கிறிஸ்து பிறந்தார்.
மனித குல அவலங்களை காணச்சகியாமல் தனது புரட்சிக்கருத்துக்களை மக்களிடையே பரப்பினார்.
அவரையும் சிலுவையில் அறைந்து கொன்றது மன்னராட்சி.


THE GOSPEL ACCORDING TO ST.MATTHEW \ 1964\ ITALY \ PIER PAOLO PASOLINI

இயேசு என்ற புரட்சியாளரின் வரலாற்றை இயக்குனர் பசோலினி மிகச்சரியாக படமாக்கி உள்ளார்.
இயேசு கனல் தெறிக்க உரையாற்றுவதையும்,
சாட்டையெடுத்து அக்கிரமக்காரர்களை விளாசித்தள்ளுவதையும் காட்டி இயேசு ஒரு புரட்சிக்காரன் என காட்சிப்படுத்தி இருப்பார் பசோலினி.

[ 3 ] இயேசு மறைந்த பின்னர் அவரை பின் தொடர்ந்தவர்கள் ரகசிய இயக்கமாகவே 300 ஆண்டுகள் தொடர்ந்திருக்கிறார்கள்.
இந்த காலக்கட்டத்தை முதலாம் கிருத்துவக்காலம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

300 ஆண்டுகள் இரகசிய இயக்கமாக இருந்த கிருத்துவ மக்களை இணைத்து தனது சாம்ராஜ்யத்தை தக்க வைத்து விரிவு படுத்த...
‘கான்ஸ்டண்டைன்’ என்ற மன்னன் கிருத்துவ மதத்தை முதன் முதலாக  ‘அரசு மதமாக’ அங்கீகரித்தான்.
சர்ச் உருவானது.
இயேசுவை உயிர்த்தெழ வைத்து,
புரட்சியாளாரை புனிதராக்கி... கடவுளின் அவதாரமாக்கி...
புதிய பைபிள் உருவாக்கப்பட்டது.
அரசும் சர்ச்சும் இணைந்து இயங்கியது.
மக்களை மதம் மாற்றும் முயற்சியை சர்ச் முன்னெடுத்துச்சென்றது.

[ 4 ] கான்ஸ்டன்டைன் காலத்துக்கு பின்னர் உள்ள கிருத்துவத்தை
 ‘இரண்டாம் கிருத்துவக்காலம்’ என வரையறுக்கிறார்கள் வரலாற்றாளர்கள்.

ஐரோப்பிய கிருத்துவ நாடுகள், தங்கள் காலனிகளை விரிவு படுத்தினர்.
அங்கெல்லாம் சர்ச்சும் தன் ஆட்களை அனுப்பி மக்களை மத மாற்றம் செய்தது.
இந்த வரலாற்றை ஒரு  ‘உலக கவிஞன்’ பதிவு செய்தான் கவிதையில்.

அவர்கள் வந்தார்கள்.
எங்களை மண்டியிடச்சொன்னார்கள்.
மண்டியிட்டோம்.
கண்களை  மூடச்சொன்னார்கள்.
மூடினோம்.
ஜெபிக்கச்சொன்னார்கள்.
ஜெபித்தோம்.
ஜெபித்து விட்டு கண்களை திறந்து பார்த்தோம்.
எங்கள் கையில்  ‘அவர்கள் பைபிள்’ இருந்தது.
அவர்கள் கையில் ‘எங்கள் நாடு’ இருந்தது.

காலனியாதிக்கமும் மதமாற்றமும் ஏன் ஒருங்கே நிகழ்த்தப்பட்டதை ஆய்வு செய்தார்கள் தத்துவவாதிகள்.
இதுதான் வரலாறு.


[ 5 ] ஐரோப்பிய தத்துவ ஞானி  ‘கிராம்ஸ்சி’ [ ANTONIO GRAMSCI ] கூறுகிறார்...

“ ஒவ்வொரு அரசும் தனக்கான குறிப்பிட்ட வாழ்க்கை முறையை உருவாக்கி..
அதற்குறிய குண நலன்களோடு குடிமகனை உருவாக்கி வளர்த்தெடுக்க முயல்கிறது.
பழைய நம்பிக்கைகளை தகர்த்தெறிந்து உதறித்தள்ளி 
புதிய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் வளர்த்தெடுக்கிறது.
இந்தப்பணிகளை செவ்வெனச்செய்ய  இரண்டு வழிமுறைகளை கடைப்பிடிக்கிறது.  
  
[ A ] அரசு இயந்திரம் [ STATE APPARATUS ]  = அரசு, ராணுவம், காவல்துறை போன்றவைகள்.

[ B ] கருத்துருவ இயந்திரம்  [ IDEOLOGICAL APPARATUS ] = மத நிறுவனங்கள், நீதி மன்றங்கள்,
அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், 
மருத்துவ மனைகள், ஊடகங்கள், குடும்பங்கள் போன்றவைகள்.

[ ஊடகம் = பத்திரிக்கை,டிவி,சினிமா, இணையம் போன்றவைகள் ]

கிராம்ஸ்சி பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிப்பீடீயாவிற்குள்
நுழையவும்.
கிராம்ஸ்சி பற்றி மேலும் தெரிந்து கொள்ள...

[ 6 ] வெள்ளையர்கள் வியாபாரிகளாக வந்து நாடு  பிடித்து நமது வளத்தை சுரண்டினார்கள்.
அந்தப்பணிக்காக இந்தியாவில் வைஸ்ராய், படைத்தளபதிகள், சிப்பாய்கள்,
மத குருமார்கள், தோலான் துருத்தி என தங்கி இருந்த மொத்த வெள்ளையினர் 7,000 பேர் மட்டுமே.

சுரண்டலின் ஒரு பகுதிதான் தேயிலைத்தோட்ட உருவாக்கம்.
அதற்காக கொண்டு வரப்பட்டு கொத்தடிமைகளாக்கப்பட்ட சாலூர் கிராமத்து மக்களின் வாழ்க்கையை ‘தீமாக’ உருவாக்கி பரதேசியை படைத்துள்ளார் பாலா.

[ 7 ] எனவே இத்திரைக்கதையை ‘சப்ஜக்ட் டிராஜிடி’ இலக்கிய பார்முலாவில் வடிவமைத்துக்கொண்டார்.
சப்ஜக்ட் டிராஜிடி = தனி மனிதன் தனது துன்பங்களிலிருந்து வெளியேற வழியிருந்தும் அதற்காக சிந்திக்காமலும் செயல்படாமலும் அத்துனபங்களுக்குள்ளேயே உழன்று கொண்டு இருப்பது .

[ 8 ] கொத்தடிமைகளை ‘பணப்பெட்டியை’ காட்டி குறுகிய காலத்திற்குத்தான் அடிமையாக வைத்திருக்க முடியும்.
நிரந்தரமாக வைத்திருக்க மதமாற்றமே மருந்து என ‘மருத்துவம்’ மூலமாக முயற்சி நடந்ததை பாலா படமாக்கி உள்ளார்.

[ 9 ] மருத்துவன் தனது ஐரோப்பிய காதலியுடன் வருகிறான்.
கொத்தடிமைகளின் மருத்துவ மனையும், குடிசைகளும்,சுற்றுப்புறச்சூழலும் சுகாதாரம் இல்லாமல் இருப்பதைக்கண்டிக்கிறான்.
விரைவில் சரி செய்து விட வேண்டும் என முழங்குகிறான்.
ஒன்றையுமே சரி செய்யாமல்...
மத மாற்றத்தை மட்டுமே செவ்வனச்செய்கிறான்.


[ 10 ] சாலூரில் விபூதி காட்சியளித்த நெற்றியில் சிலுவைக்குறியிடப்படுகிறது.
நாக்கிலும் இடப்படுகிறது.
அதற்காக நாக்கைத்தொங்கப்போட்டு அலையும் காரெக்டரை குள்ளமாகவும்...
வெள்ளைக்காரியை உயரமாகவும் போட்ட பாலாவின் குசும்பை மிகவும் ரசித்தேன்.

[ இத்தாலிக்காரியிடம் நாக்கைத்தொங்கப்பட்டதன் விளைவை
நாமும், ஈழத்தமிழர்களும் இன்றும் அனுபவித்து வருகிறோம்]

[ 11 ] மருத்துவனும் வெள்ளைக்காரியும் குத்தாட்டம் போட்டது எதற்காக ?
எந்த இசையில் நமது ஆட்கள் மயங்குவார்களோ...
அந்த இசையை இசைத்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்து காரியம் சாதித்தவர்கள் மதமாற்றவாதிகள்.

[ 12 ] உணவை மருந்தாக்கி வாழும் கலாச்சாரத்தை உடைக்க,
‘பன் ரொட்டியை’ வீசுகிறார்கள்...பன்றிகளுக்கு வீசுவதைப்போல.
இதன் நீட்சியாகத்தான் இன்று பிஸ்ஸாவும்,பர்கரும் ஊடகம் வழியாக படையெடுத்து வந்து தாக்கி நம் உணவு கலாச்சாரத்தை அழித்துக்கொண்டிருகின்றன.

[ 13 ] வெள்ளைக்காரி,  நம்மவனை மயக்கி நாடகமாடுபவள் என்பதற்கு ‘குத்தாட்டப்பாடலில்’ அவளது  ‘டோப்போ’ கழந்து விழுவதை காட்சிப்படுத்தி இருப்பார் பாலா.
மருத்துவன் - வெள்ளைக்காரி இவர்களுக்குள் தாம்பத்ய உறவு கிடையாது என்பதை மருத்துவன் தனியாக இரவில் மருத்துவ மனையில் தூங்கிக்கொண்டிருப்பதை காட்சிப்படுத்தி இருப்பார்.

[ 14 ] கொள்ளை நோயில் கொத்தடிமைகள் பலியானதை சிரித்துக்கொண்டே அச்செய்தியை வெள்ளைக்காரர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
ஒருவன் மகாத்மாவையும் தரக்குறைவாக பேசுவான்.
அப்போது ஒரே ஒரு பெண் குரல் அவர்களை கண்டித்து மகாத்மாவை துதிக்கும்.
வெள்ளையர்களில் ‘அன்னிபெஸண்ட்’ அம்மையார் போன்ற மாணிக்கங்களும் இருந்தார்கள் என பாலா பதிவு செய்துள்ளார்.

[ 15 ] பேஸ்புக்கில் நாக்கைத்தொங்கப்போட்டு அசிங்கப்பட்ட எழுத்தாளன் பரதேசியில் கிளைமாக்ஸ் காட்சியில் ‘ஒளிக்கீற்று’இல்லை என உளறியதை கண்டிருப்பீர்கள்.

கதாநாயகன் இறுதிக்காட்சியில் உயரமான மலைப்பாறையிலிருந்து பெருங்குரலெடுத்து கத்துகிறான்.
கூலி கிடைக்காததால் கிராமத்து ஹோட்டல் முன்பாக தரையில் உட்கார்ந்து புலம்பியதற்கு நேர் மாறாக இக்காட்சியைப்படைத்துள்ளார் பாலா.
இறுதிக்காட்சியில் கதாநாயகன் பெருங்குரலெடுத்துக்கத்துவதை ஆங்கில இலக்கியத்தில் ‘கிளாரியன் கால்’ என குறிப்பிடுவார்கள்.
அந்தக்கத்தல் தொழிலாளர்கள் காதில் ஒலிக்கிறது என்பதை காமிரா காட்சிப்படுத்தி இருக்கிறது.

[ 16 ] ஓங்கி ஒலிக்கும் குரலோடு பல குரல்கள் இணையும் போது புரட்சி வெடிக்கும் என்பது வரலாறு.


[ 17 ] “ மார்க்ஸிய சித்தாந்தத்தை முன்னெடுக்கும் புரட்சிகர அமைப்புகள்...
வர்க்கப்போராட்டத்தை முன்நிறுத்தும் அமைப்புகள்... மூலமாக மட்டுமே 
அரசு இயந்திரங்கள் & கருத்துருவ இயந்திரங்களின் இடுக்கிப்பிடியிலிருந்து தப்பிக்க முடியும்”.
 - ஐரோப்பிய மார்க்சிய தத்துவ ஞானி ‘பவ்லண்ட்சாஸ்’  
[ NICOS POULANTZAS ]
பவ்லண்ட்சாஸ் பற்றி அறிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க.
பவ்லண்ட்சாஸ் பற்றி மேலும் படிக்க...

நடந்த வரலாறை யாராலும் மாற்றி எழுத முடியாது. 
‘பாலாவின் பரதேசி’ இது வரை இந்தியத்திரையில் வந்த அனைத்து படங்களையும் விட சிறந்த ‘மார்க்ஸிய திரை இலக்கியம்’.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.