‘கலைகளின் கூட்டுப்பரிமாணத்தின் குழந்தை’ என்று திரைப்படக்கலை வர்ணிக்கப்படுகிறது.
ஒரு திரைப்படத்தை பார்வையாளனாக, மாணவனாக தீவிர வாசிப்புக்கு உட்படுத்தும்போது,
மற்ற கலைகளின் தன்மைகளை கடந்து உன்னதமான வெளிப்பாடாக இருப்பது,
திரைப்படத்தின் உயிராக உள் இழையும் இசையே.
இசையற்ற திரைப்படத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலாது.
ஏனெனில் மவுனப்படங்களின் காலத்திலேயே பின்னணி இசைதான் நடிகனின் முகபாவத்தை கடந்த உணர்வினை நமக்குச் சொன்னது.
சாப்ளின் படங்களில் இழையும் வயலின் மூலம் நகைச்சுவையின் உள்ளார்ந்த சோகத்தை நம்மால் உணர முடிந்தது.
வசனமேயில்லாமல் வெறும் முகங்களின் அண்மைக்காட்சிகளைக்கொண்டே
நிகழும் ஒரு நிமிடக்காட்சியை ஒரு இசை அமைப்பாளர் தனது மேதமை மூலம் அழகான உயிர்ப்புள்ள காட்சியாக மாற்றி விடமுடியும்.
தட்டையான இரண்டு பரிமாணம் கொண்ட திரைப்பிம்பத்துக்கு,
உணர்வு ரீதியான முப்பரிமாணம் தருவது இசையே.
எனவே இசையை ‘மூன்றாவது பரிமாணம்’ என்று சொல்லலாம்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இசையை உருவாக்குகிற ஒரு இசைக்கலைஞன் திரைப்படம் விமர்சிக்கப்படும்போது எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறான்.
‘பாடல்கள் இனிமை, பின்னணி இசை பரவாயில்லை’ என்பதோடு ஒரு இசைக்கலைஞனின் அங்கீகாரம் முடிந்து விடுகிறது.
இது மூன்றாம்தரமான, படத்தின் இரண்டரை மணி நேரமும் தனது சப்தங்களால் கிளுகிளுப்பூட்டுகிற ஒரு இசையமைப்பாளருக்கு பொருந்தலாம்.
தனது ஆழ்ந்த இசைப்புலமை மூலம் திரைப்பட மொழியை உள் வாங்கிக்கொண்டு திரையில் பொம்மைகளாக அசைகிற பிம்பங்களை
உயிர்ப்புள்ள மனிதர்களாக மாற்றும் இசைக்கலைஞனுக்கு இது எப்படி பொருந்தும் ?
போதுமானதாகும் ?
அவ்வாறான தகுதியுடைய தற்கால தமிழ் சினிமாவின் இசைக்கலைஞர் என
இளையராஜாவைச்சொல்லலாம்.
நண்பர்களே...
நீங்கள் படித்த கட்டுரை ஒளிப்பதிவாளர் செழியன் கைவண்ணத்தில் உருவானது.
இளையராஜாவின் இசையில், அவரது அறியப்படாத முகத்தை ஆய்வு செய்து
செழியன் எழுதியதை மினி தொடராக தருகிறேன்.
நூல்: பேசும்படம் [கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள்]
எழுதியவர் : செழியன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
