Apr 26, 2011

கோ படத்தை பாருங்கள்

கோ படத்தை பாருங்கள் என்று எழுதியிருக்கிறாயே அது உலகசினிமாவா என்று கேட்டு அடிக்க வாராதீர்கள்.கொஞ்சம் பொறுங்கள்.
ஒரு சின்ன பிளாஷ் பேக்....

என் நண்பர் இயக்குனர் சுரேஷ்  “படம் பண்ணப்போறேன்.கதை டிஸ்கசனுக்கு வரணும்”என்று சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கூப்பிட்டார்.எப்போ வரணும்....எப்போ வரணும் என்று கேட்டு வேறு வழியில்லாமல் நாளைக்கு வாங்க என்று அனுமதியளித்தார்.தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் இரவு பத்துக்கு கோவையிலிருந்து புறப்பட்டேன்.சொகுசு பேருந்து என்று அதன் நெற்றியில் எழுதியிருந்தது.என்னுடைய புஷ்பேக் சீட் ஜார்ஜ் புஷ்ஷே வந்தாலும் அசையமாட்டேன் என்று சொல்லிவிட்டது.முன்னாடி இருந்த சீட் அநியாயத்துக்கு பின்னாடி சாஞ்சு வந்து என் மடியில் படுத்துக்கொண்டது.ஆனாலும் எனக்கு கோபமே வரவில்லை.ஏன்னா சீட்டில் இருந்தது தாப்சி ரேஞ்சில் இருந்தது.
பஸ் சடன்பிரேக் அடித்தால் அவள் நெற்றியில் என் உதடுகள் மோதும் ஆபத்து நிச்சயம் இருந்தது.அந்த இனிய ஆபத்துக்காக காத்திருந்தேன்.சரியாக இரவு பத்துக்கு பஸ் புறப்பட்டது.
ஹாரனைத்தவிர எல்லாமே சத்தம் போட்டது.

 எப்படியோ தூங்கி முழிச்சி பாத்தா காலை பத்து மணி.வெளியே பார்த்தா சென்னையைக்காணோம்.முன் சீட் தாப்ஸியை கேட்டேன்.ஜஸ்ட் இப்பத்தான் வேலூர் பாஸ் ஆச்சு என்று அலுத்தாள்.ஒரு வழியா ஒரு மணிக்கு கோயம்பேடு வந்துச்சி.இறங்கும்போது டிரைவரிடம் கேட்டேன்
  “ ஏன் ஒரு தடவை கூட பிரேக்கே போடலை ?”
“ராத்திரியிலிருந்து அதைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.”
 “வாழ்க கே.என்.நேரு” சொல்லிவிட்டு பறந்தேன்.

“ஸாரி...பஸ் லேட்”எனச்சொல்லி நுழைந்தேன். இயக்குனர் சுரேஷ்,உதவி இயக்குனர்கள் ரமேஷ்,சதீஷ், ‘கிராபிக்ஸ்’சுனில்,நான்  என மிக மெல்லிய கூட்டம்.

 “சார்..ஒரு சின்ன நாட் கிடைச்சிருக்கு...அதை பக்காவா டெவலப் பண்ணா போதும்”ஆரம்பித்தார் சுரேஷ்.
 “சூப்பர் ஹிட் படமா பண்ணிரலாம்.நாட்டை சொல்லுங்க”
 ‘ஸ்டேட் ஆப் ப்ளே’ன்னு ஒரு ஹாலிவுட் படத்தை இண்டியனைஸ் பண்ணி வச்சிருக்கேன்.

வெரிகுட்..அருமையான சப்ஜக்ட்.நானும் அந்தப்படம் பாத்திருக்கேன்.ரஸ்ஸல் குரோவ் பட்டையை கிளப்பியிருப்பாரு.

நம்ம படத்துலே நானே ஹீரோ.ஹீரோயின் இரண்டு பேரு..                       பர்ஸ்ட் ஹீரோயின் நல்ல பிரைட்& இண்டலக்சுவல்...
ரெண்டாவது லூசுப்பொண்ணு..ஆனா பக்கா கிளாமர்....

ரமேஷ்:   சார்..அந்த லூசுப்பொண்ணுக்கு சூப்பர் காமடி டிராக் வச்சிருக்கேன்.கொரியன் படம் ஒண்ணு.அதிலருந்து சுட்டது..

சுனில்: ஒப்பனிங் சீன் சும்மா பரபரன்னு ஆரம்பிக்ணும்.
நக்சலைட்டுங்க பேங்க் ராபரி பண்றாங்க...
நம்ம ஹீரோ தடுக்கிறாரு.

சதீஷ்: சார் இங்கிலீஷ் படத்துல ஹீரோ ரிப்போர்ட்டரு.நாம ஸ்டில் கேமராமேனா மாத்திரலாம்..

சுனில்: சூப்பர்..ஹீரோ துப்பாக்கியால சுடறதுக்கு பதிலா கேமராவுல ஷூட் பண்றாரா!சூப்பர்..சூப்பர்.

சுரேஷ்:சார்..இந்த சீனுக்கு நல்ல படம் சொல்லுங்க.

நான்: பேங்க் ராபரிக்கு இன் சைட் மேன் பெஸ்ட் சாய்ஸ்.
ஹீரோ சேஸிங் சீனுக்கு மிசன் இம்பாசிபிள் பார்ட் டூ பொருத்தமா இருக்கும்.டாம் கூரூஸ் பைக்ல ஸ்டண்ட்டெல்லாம் பண்ணி  துப்பாக்கியால சூட் பண்ணுவாரு.நம்ம ஹீரோ  ஸ்டில் கேமரா ஷூட் பண்ணட்டும்.ஆனா நம்மூர்ல ஏது நக்ஸலைட்?

சுரேஷ்: ஆந்திராவில இருந்து வர்றாங்க..அப்படி வச்சுக்கலாம்.

நான்:தமிழ் பேசுற நக்சலைட் ஆந்திராவில் என்ன பண்றாங்க?லாஜிக் இடிக்குதே?

சதீஷ்: சார் ...நாம தமிழ்ப்படம் எடுக்குறோம்.உலகசினிமா இல்லை.நம்ம ரசிகருங்க லாஜிக் பாக்க மாட்டாங்க.

சுரேஷ்:அப்புறம் நாம நம்மூரு ஆளும் கட்சி,எதிர்க்கட்சி மேட்டரை சரியா மிக்ஸ் பண்ணிட்டா படம் ரெடி.

சதீஷ்: சார் படம் எனக்கு விசுவலா ஒடுது.நாம ஆந்திரா என்.டி.ஆர் மேட்டரையும் நுழைச்சிரலாம்.

நான்: ஒரு சின்னப்பொண்ணை கல்யாணம் பண்ண மேட்டரா...அதை அமைதிப்படை படத்துல ஏற்க்கெனவே வச்சிட்டாங்களே!

சுரேஷ்: பரவாயில்ல சார்...அந்தப்படம் வந்து 20 வருசமாகுது.இப்ப உள்ள யங்ஸ்டருக்கு இந்த மேட்டர் புதுசா இருக்கும்.அப்புறம் ஆய்த எழுத்து சூர்யா காரெக்டரை வில்லனாக்கி...அவன் தலைமையில ஸ்டூடண்ஸ் ஆட்சி பிடிக்கிற மாதிரி வச்சுட்டா படம் 90%ரெடி.

நான்:நக்சலைட்டுக்கும் வில்லனுக்கும் உள்ள கனெக்சனை ஹீரோ தெரிஞ்சு வில்லனை ஒழிக்கிற கிளைமாக்சுக்கு நோ மேன்ஸ் லேண்ட்டுன்னு ஒரு உலகசினிமாவிலிருந்து சீன் உருவிரலாம்.

சுரேஷ்:சார் படம் ரெடி...வாய்யா முருகேசு..உக்கார்..ரெடி பண்ண கதையைக்கேளு.

கதை முழுவதும் கேட்ட முருகேஷ்:லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நியூஸ் சொல்றேன்..நீங்க சொன்ன மேட்டர் அப்படியே இந்த வாரம் ரீலிசான கோ படத்துல இருக்கு. நாம டூ லேட்...கே.வி.ஆனந்த் முந்திட்டாரு.

சுரேஷ்: வடை போச்சே..... எனக்கேவி..கேவி...அழ ஆரம்பித்தார்.நான் கோவைக்கு எஸ்கேப்.
நண்பர்களே.... கோ படம் பார்த்து சொல்லுங்கள்...நாங்கள் உல்டா செய்த அதே கதைதானா...கோ?

Apr 22, 2011

படிக்கலாம் வாங்க-எதிர்ப்பும் எழுத்தும்

நான் பார்த்த உலகசினிமாக்களை உங்களிடம் அறிமுகம் செய்ய ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது.பொழுதுபோக்காக ஆரம்பித்த விசயம்...இன்று விடமுடியாத ‘பழக்கமாகி’ விட்டது. “இந்த கெட்ட பழக்கத்தை விட்டு ஒழிங்க”என இல்லத்தரசி அலறுகிறாள்.காது கேக்காதது போல் தப்பித்து வருகிறேன்.
சினிமா பார்ப்பது போல் எனக்கு மிகவும் பிடிப்பது புத்தகங்கள்.நான் படித்ததில் பிடித்த பகுதியை உங்களிடம் பகிர ஆசை. “.நான் இதெல்லாம் படிக்கிற ஆளு”என உங்களிடம் பீத்திக்கொள்வதுதான் முதன்மையான நோக்கம்.முதல் நூலாக உங்களிடம் பகிர்வது

எதிர்ப்பும் எழுத்தும் துணைத்தளபதி மார்க்கோஸ்

[விடியல் வெளியீடு]

மெக்சிகோவில் சியாபாஸ் என்ற பகுதியில் மக்களுக்கான போராட்டத்தில் எழுந்த எழுத்துக்கள் இவை.இதன் வீர்யம் குறையாமல் நமக்கு மொழி பெயர்த்து வழங்கியவர் எஸ்.பாலச்சந்திரன்.புத்தகம் வடிவில் பைபிளுக்கு அண்ணன்.குமுதம்,விகடன் மட்டும் படித்தவர்களுக்கு இந்த தமிழ் சிரமம்தான்.உயிர்மை,காலச்சுவடு,தமிழினி பத்து இதழ்களாவது படித்துவிட்டு வாருங்கள்.அப்போதுதான் கொஞ்சமாவது புரியும்.புதிய கலாச்சாரம் படிப்பவர்களுக்கு இந்நூல் லட்டு.பதிவுலகில் ‘வினவு’ வலைப்பக்கத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு திருநெல்வேலி அல்வா போல் உள்ளே இறங்கும். மக்களுக்கு எழுச்சியூட்டும் பல குட்டிக்கதைகள் இதில் உள்ளன.அதில் எனக்கு பிடித்தது....
சுண்டெலியும் பூனைக்குட்டியும்
முன்பொரு காலத்தில் ஒரு சுண்டெலி இருந்தது.அது மிகவும் பசியோடிருந்தது.ஒரு சிறிய வீட்டின் சிறிய சமையலறையில் இருந்த,பாலாடைக்கட்டியின் ஒரு சிறிய துண்டை சாப்பிட விரும்பியது.உறுதியான இந்த முடிவோடு இந்த சுண்டெலி,பாலாடைக்கட்டியின் சிறிய துண்டை எடுப்பதற்க்காகச் சிறிய சமையலறைக்குச் சென்றது.ஆனால், அதன் வழியில் ஒரு பூனைக்குட்டி குறுக்கிட்டது. மிகவும் பயந்து போன சுண்டெலி,ஓடிவிட்டது.அதனால் சிறிய சமையலறையிலிருந்து சிறிய பாலாடைக்கட்டி எடுக்கமுடியவில்லை. அப்போது, சிறிய சமையலறையிலிருந்து சிறிய பாலாடைக்கட்டியை எப்படி எடுப்பது என்று அது யோசித்தது.

"எனக்குத்தெரியும்.ஒரு சிறிய தட்டில் பாலை ஊற்றி வைத்து விடுவேன். பூனைக்குட்டி பாலைக் குடிக்கப்போகிறது. ஏனென்றால்,பூனைக்குட்டிகள் பாலை மிகவும் விரும்புகின்றன. அப்போது பூனைக்குட்டி பாலைக்குடித்து கொண்டிருக்கும்போது, அது கவனிக்காதபோது,நான் சிறிய சமையலறைக்குள் சென்று, சிறிய பாலாடைக்கட்டியை எடுத்துச் சாப்பிடப்போகிறேன். இது மிகவும் அருமையான யோசனை”என்று சுண்டெலி தனக்குத்தானே சொல்லிக்கொண்டது.

அதன்பிறகு, அது பாலை தேடிச்சென்றது.ஆனால்,பால் சிறிய சமையலறையில் இருந்தது.சிறிய சமையலறைக்குள் சுண்டெலி செல்ல விரும்பியபோது, பூனைக்குட்டி அதன் வழியில் குறுக்கிட்டது.மிகவும் பயந்துபோன சுண்டெலி ஒடிப்போய்விட்டது.அதனால் பாலை எடுக்க முடியவில்லை.அப்போது, சிறிய சமையலறையிலிருந்து பாலை எப்படி எடுப்பது என்று அது யோசித்தது.

“எனக்குத்தெரியும்.நான் ஒரு சிறிய மீனைத் தூரத்தில் வீசியெறியப்போகிறேன்.அந்தச்சிறிய மீனைச் சாப்பிடுவதற்க்காகப் பூனைக்குட்டி ஓடிவிடப்போகிறது. அப்போது, பூனைக்குட்டி சிறிய மீனைச் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது,அது கவனிக்காதபோது,நான் சிறிய சமையலறைக்குச்சென்று,சிறிய பாலாடைக்கட்டியை எடுத்து சாப்பிடப்போகிறேன்.இது மிகவும் அருமையான யோசனை”என்று சுண்டெலி தனக்குத்தானே சொல்லிக்கொண்டது.

அதன்பிறகு, அது சிறிய மீனைத்தேடிச் சென்றது.ஆனால் சிறிய மீன் சிறிய சமையலறையில் இருந்தது.சிறிய சமையலறைக்குள் செல்வதற்க்குச் சுண்டெலி விரும்பியபோது பூனைக்குட்டி அதன் வழியில் குறுக்கிட்டது.மிகவும் பயந்துபோன சுண்டெலி ஒடிப்போய்விட்டது.அதனால் சிறிய மீனை எடுக்க முடியவில்லை.

அந்தச் சுண்டெலி தனக்கு தேவையான சிறிய பாலாடைக்கட்டி, பால், சிறிய மீன் ஆகிய அனைத்தும் சிறிய சமையலறையில்தான் இருக்கின்றன என்பதையும்,பூனை தன்னை விடாது என்பதால் தன்னால் சமையலறைக்குள் செல்லமுடியாது என்பதையும் அப்போதுதான் உணர்ந்தது.

“போதும்! போதும்!”என்று சொல்லிவிட்டு,இயந்திரத்துப்பாக்கியை எடுத்து பூனைக்குட்டியைச் சுட்டுக்கொன்றுவிட்டுச் சிறிய சமையலறைக்குள் சென்று பார்த்தது.சிறிய மீன், பால், சிறிய பாலாடைக்கட்டி ஆகிய அனைத்தும் கெட்டுப்போயிருந்ததையும்,அவற்றை சாப்பிட முடியாது என்பதையும் கண்டது.எனவே பூனைக்குட்டி கிடந்த இடத்துக்கு திரும்ப வந்தது.அந்த பூனைக்குட்டியை துண்டுதுண்டாக வெட்டியது. அதை வறுவல் செய்தது. பிறகு, தனது நண்பர்கள் அனைவரையும் விருந்துக்கு அழைத்தது.அவர்கள் அனைவரும்குட்டிப்பூனை வறுவலைச்சாப்பிட்டார்கள். பாடினார்கள்.ஆடினார்கள்.மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். முன்பொரு காலத்திலே....

கதையின் முடிவும் இக்கடிதத்தின் முடிவும் இதுதான்.நாடுகளுக்கிடையே உள்ள பிரிவுகள் “கள்ளக்கடத்தல்” என்னும் குற்றத்தை சித்தரிக்கவும், போருக்கு நியாயம் கற்பிக்கவும் மட்டுமே பயன்படும் என்று உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நாடுகளுக்கிடையேயான எல்லைகளைக் காட்டிலும் மிகப்பெரியது என்று குறைந்தபட்சம் இரண்டையாவது குறிப்பிடமுடியும்:நவீனத்துவம் என்னும் மாறுவேடம் தரித்த குற்றம் இவற்றில் ஒன்று: இது வறுமையை உலகம் முழுவதும் விநியோகம் செய்கிறது. இரண்டாவது குற்றம் வெட்க உணர்வு. வெட்கத்தை உணர்வது என்பது, நடனமாடும்போது ஒருவருக்கு ஏற்படும் தடுமாற்றத்தின் போது உண்டாவதுதானே தவிர, நாம் கண்ணாடியைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படுவதல்ல. முதலாவது விசயத்திற்க்கு [வறுமைக்கு] முடிவு கட்டுவதற்க்கும், இரண்டாவது விசயத்தை [வெட்க உணர்வை] செழிக்கச்செய்வதற்க்கும், சிறந்ததொரு வாழ்க்கைக்காக நாம் போராடுவது ஒன்றுதான் வழி. மற்ற அனைத்தும் இயல்பாக நடைபெறும். நூலகங்களையும் அருங்காட்சியகங்களையும் நிறைக்கக்கூடியவையாக அவை இருக்கும்.

உலகத்தை வென்றால் மட்டும் போதாது, அதைப் புதிதாக மாற்றியமைக்க வேண்டியது அவசியம்.

படுக்கை என்பது காதலுக்கான ஒரு நொண்டிசாக்கு மட்டும்தான் என்பதையும், மெட்டு என்பது நடனத்திற்க்கான ஒரு ஒப்பனை மட்டும்தான் என்பதையும், தேசியம் என்பது போராட்டத்திற்கான ஒரு தற்செயலான பின்னணி மட்டும்தான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
தென்கிழக்கு மெக்ஸிக மலைகளிலிருந்து,
லகாண்டன் காடுகளின் டான் டுரிட்டோ.
இது போன்ற குட்டிக்கதைகள் பொதிந்து வந்த கடிதங்கள் இந்நூலில் ஏராளம்...ஏராளம்.
இந்தக்கடிதம் உங்களுக்கு ஏற்படுத்திய அனுபவத்தை எனக்கு பின்னூட்டம் மூலம் தெரிவிக்கவும். நன்றி.